"எனக்கு ஒரு ஆசை வந்திருக்கு. அதுவும் இப்போ தான்"
"அப்படியா?"
"ஆமாம்" என்று ராம் கூற விழையும்போது, "எனக்காக அந்தக் கடைல ஒரு சாக்லேட் வாங்கிட்டு வர முடியுமா?" என்று கேட்டார் கடவுள்.
சாக்லேட் வாங்க கடைக்கு ஓடிச் சென்றான் ராம்.
அவன் சென்றதும், கடவுள் முன்னால் ஒரு தேவதை தோன்றினாள்.
"நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல? ஒரு நாள் அவனோட அபர்ணாவா நீ இருக்கணும். ஒண்ணு புரிஞ்சிக்கோ. பாசம் மட்டும் வச்சிடாத. அது பின்னாடி கஷ்டத்தில கொண்டுபோய் விட்டுவிடும்" என்று தேவதையிடம் எச்சரித்தார் கடவுள்.
"சரி" என்று தேவதையும் மறைந்தது.
சாக்லேட்டோடு திரும்பினான் ராம். அதை வாங்கி அவனிடம் நன்றி கூறிவிட்டு காரில் ஏறினார் கடவுள். ராம் புரியாமல் விழித்தான்.
"வீட்டில அபர்ணா இருக்கா. சீக்கிரம் போ" என்று கூறி காரைக் கிளப்பிச் சென்றார் கடவுள்.
ராம் ஏதும் புரியாமல் தன் வீட்டிற்குச் சென்றான். அவன் வீட்டுக் கதவு திறந்திருந்தது. யார் திறந்திருப்பார்கள்? என்ற அச்சத்தோடு உள்ளே சென்றான்.
"எங்க போயிட்டு வந்திங்க?" என்றது ஒரு பெண் குரல்.
அதிர்ந்து, குரல் வந்த திசையை நோக்கினான் ராம்.
அங்கே அழகு தேவதையாய் அபர்ணா நின்றுகொண்டிருந்தாள். அவளின் அஞ்சன விழிகள் ராமின் முகத்தை ஊடுருவின.
"அபர்ணா!" என்றான் ராம் மெல்லிய குரலில்.
அவளுடைய விழிகள் ஆமாம் என்பது போன்று அவனை நோக்கின.
பொங்கியெழுந்த அழுகையோடு அவளைக் கட்டிக்கொண்டான் ராம்.
"அதான் நான் வந்துட்டேன்ல? அப்புறம் எதுக்கு அழுகை?" என்று அவனைத் தேற்றினாள் அபர்ணா.
"முதல் முறையா உன் குரலைக் கேக்குறேன் அபர்ணா" என்றான் ராம் அழுகையைக் கட்டுப்படுத்தியபடி. "என்னை விட்டுப் போகாதே. என் கூடவே இரு" என்றான்.
அவளால் அதற்குப் பதில் கூற முடியவில்லை. மௌனம் காத்தாள்.
ராம் அவளை உபசரித்தான். தான் சமைத்த உணவை, அவளுக்கு ஊட்டி விட்டான். அதில் பேரின்பம் கண்டான். அவனது பரிவால், தேவதை அவன் மேல் பாசம் கொண்டாள்.
ராம், அவளை வெளியே அழைத்துச் சென்றான். நெடுதூரம் நடந்தே சென்றார்கள். தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறிக்கொண்டே சென்றான். அவனது நிலையை உணர்ந்து மனதினுள் மிகவும் வருத்தப்பட்டாள் தேவதை. அவனைச் சந்தோசப்படுத்த, அவன் கையைப் பிடித்து வானை நோக்கிப் பறந்து சென்றாள். நடுவானில் நின்றுகொண்டு இருவரும் உலகைப் பார்த்து ஆனந்தப்பட்டனர்.
ராம் சீக்கிரத்திலேயே களைத்துப் போனான். இருவரும் ஒரு பூங்காவிற்குச் சென்றனர். அங்கிருந்த மரத்தடியில் இருவரும் அமர்ந்தார்கள். அபர்ணாவின் கைகளைப் பற்றியபடி அவளது முகத்தையே வெறித்துக்கொண்டிருந்தான் ராம். அவள் சென்றுவிடக்கூடாது என்கிற பயமும் அதற்குக் காரணம்.
"உங்களுக்குத் தூக்கம் வரவில்லையா?" என்று கேட்டாள் அபர்ணா.
"பயமா இருக்கு" என்றான் ராம்.
"எதுக்கு?"
"நீ என்னைத் தனியா விட்டுட்டு போயிடுவியா?"
"உங்க கூடவே தான் இருப்பேன். தூங்குங்க" என்றாள் அபர்ணா.
அரைமனதோடு அவள் மடியில் தலை சாய்த்து, நிறைவான தூக்கத்திற்குள் சென்றான் ராம்.
விடியற்காலை நெருங்கியது. தேவதை கண்ணீர் சிந்தினாள். கடவுள் அவள் முன் தோன்றினார்.
"நான் தான் பாசம் வைக்காதேன்னு சொன்னேன்ல" என்று கூறிவிட்டு ராமின் உயிரை எடுக்கக் கீழே குனிந்தார்.
"வலிக்காம எடுங்க" என்று அழுதபடியே கூறினாள் தேவதை.
கடவுள் ராமின் முதுகை மெல்லத் தட்டிவிட்டு, "என்னை மன்னித்துவிடு" என்று கூறி அவன் உடலில் மறைந்திருந்த உயிரின் ஒளியை வெளியே எடுத்தார். ராம் ஒரு முறை வேகமாக மூச்சை உள்ளே இழுத்தான். அது திரும்ப வெளிவரவேயில்லை.
அபர்ணா கதறி அழுதாள்.
விடியற்காலை வந்தது. அபர்ணா தலையணையாக மாறினாள். தான் உயிராய் நினைத்த 'அபர்ணாவின்' மேல் தலைவைத்தபடி ராமின் உயிரற்ற உடல் அனாதையாகக் கிடந்தது.
{kunena_discuss:785}