கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டார். ஃப்ளாஸ்கில் இருந்து டீயை ஊற்றி இருவருக்கும் கொடுத்தார். தர்ஷினியின் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார். மாணிக்கம் விழிக்கும் வரை அவர அருகிலேயே எங்கும் அகலாது அமர்ந்திருந்தாள் தர்ஷினி. அவர் விழித்ததும் தர்ஷினியைப்பார்த்து புன்னகைத்தார். தர்ஷினியால் ஏதும் பேசமுடியவில்லை இவ்வளவு நேரம் அவள் மௌனமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அவர் விழித்ததும் கண்ணீர் கொட்டியது, பேச்சே வரவில்லை. அவர் கையசைத்து தர்ஷினியை அருகே அழைக்க… தாயின் மடியை தேடும் கன்றுபோல, அவர் அருகே சென்று ஒட்டிக்கொண்டாள். அவர் மெதுவாக தன் அருகே தலையணையில் முகம் புதைத்து அழும் மகளின் முதுகை மெதுவாக வருடியது.
காவ்யா மருத்துவமணை பில்லைக்கட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள், வரதராஜனின் உதவியோடு எழுந்து அமர்ந்தார் மாணிக்கம். காவ்யா ஓடி அவர் அருகே வந்து நின்றாள், “அங்கிள் கொஞ்ச நேரத்தில கலங்கடிச்சுட்டீங்க போங்க.. ஆனாலும் நீங்க தர்ஷூவ ரொம்ப பயம் காட்டீட்டீங்க…அவ ரொம்ப கலங்கிட்டா.. “
அவர் மென்மையாக மகளைப்பார்த்தார். தர்ஷினி தலையைக்குனிந்து கொண்டு நின்றாள். வரதராஜன் மாணிக்கத்திடம் இயல்பாக உரையாடினார், அடுத்த சில மணி நேரங்களில் அவரை மருத்துவர், சில கண்டிப்பான ஆறிவுரைகளோடு டிஸ்சார்ஜ் செய்ய, அங்கிருந்து கிளம்பினர்.
“அப்போ மாணிக்கம், நான் கிளம்பட்டுமா..” – வரதராஜன்
“ஐயோ அங்கிள் நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும்” – தர்ஷினி
அவள் அருகே வந்தவர் அவள் தலையின் மீது தன் வலக்கையை வைத்து, ஆசிர்வாதம் செய்து, உன் கல்யாணத்திற்கு வர்றப்ப உன் வீட்டுல தான் தங்குவோம்.. ஒரு வாரம் முன்னாலயே வந்துருவோம் பாரு! அப்புறம் நீயே கிளம்பச்சொன்னாலும் உன் கூட தான் இருப்போம்..!” அவருடம் சேர்ந்து யோகியும் புன்னகைக்க அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள் தர்ஷினி.
“நல்லா இருப்பம்மா.. போற இடத்தில செல்வ செழிப்போட சந்தோஷமா இருப்ப..” மனமுருக ஆசிர்வதித்து கிளம்பினர். காவ்யாவின் உதவியோடு வீட்டிற்கு வந்து, வழக்கம்போல் பம்பரமாய் சுழன்றாள் தர்ஷினி. அவளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்துவிட்டு கிளம்பினாள் காவ்யா. மாணிக்கத்திற்கு தேவையான உணவை தாயாரித்து பின் அவருக்கு அருகே வந்து அமர்ந்தாள். மாணிக்கம் தர்ஷினியைப்பார்த்தார், அவள் இன்னும் ஏதும் பேசவில்லை..அமைதியாக தான் இருந்தாள்.
“தர்ஷினி நேத்து எனக்கென்ன ஆச்சுனு தெரியுமா உனக்கு!”
“வேண்டாம்ப்பா இப்ப அத சொல்லாதீங்க, நான் இல்லாம நீங்க ரொட்டுல நினைச்சாலே நெஞ்சு பதறுது.. அத கேட்க எனக்கு தைரியம் இல்ல.. “ அவள் வார்த்தைகள் தினறி வேதனையுடன் வெளியே வந்தது…
“சரி உனக்கு கேட்கவேண்டாம்னா அப்பா சொல்லலை..ஆனா என் பொண்ணு எதுக்காகவும் இப்படி கலங்கி நிற்க கூடாது.. இந்த மாதிரிப் பிரச்சனை வாழ்கையில வந்துகிட்டேதான் இருக்கும்..அத எதிர்கொள்ள தைரியம் வேணும்.. பயப்படக்கூடாது.
இப்போதும் தர்ஷினி அழதான் செய்தாள், அந்த அழுகையின் ஊடே வார்த்தைகள் சிதறி வந்தது..
“அப்பா.. அப்பா, நான் ரொம்ப பயந்துட்டேன் உங்கள விட்டுட்டு காவ்யா வீட்டுல என்னால ஒரு நாள் கூட இருக்க முடியலை.. இங்க வந்தா.. நீங்க.. பெட்ல .. என்னால பார்க்க முடியல.. இதுக்கு கூட நான் தானே காரணம்..” அவள் இறுதியாக முடிக்கும்போது மாணிக்கம் அவள் வாயைப்பொத்தினார்,
“சீ.. என்னப்பேச்சு இது.. உன்னால என்ன காயப்படுத்த முடியாது.. எனக்கு நல்லா தெரியும்…என்னாலயும் தர்ஷினி அழுறத பார்க்க முடியாது.. நீ அழுதா அப்பாவால தாங்க முடியாது!”
“இல்லப்பா.. நான் அழல.. பாருங்க நான் உங்கக்கூட பல வருஷம் ஹேப்பியா இருப்பேன்…” அவள் பொய்யாக சிரித்தாள், வேதனையை உள்ளே அடக்கிக்கொண்டு சிரிக்கும் மகளின் நிலையைப்பார்த்து உள்ளம் கனிந்துபோனது மாணிக்கத்திற்கு. அடுத்த வந்த பல நாள் வாரம் பார்க்காது, அவரை இரு தாய்போல் கவனித்துக்கொண்டாள் தர்ஷினி.. மாணிக்கம் மகளின் உணர்வுகளை உணராமல் இல்லை.. அவள் எப்போதாவது அவளைத்தேடிக்கொண்டுவரும் விஷ்ணுவுடன் விளையாடுவாளே தவிர, மறந்தும் சிவாவின் பெயரையோ, பேச்சையோ எடுக்கவில்லை. அவரறிந்து, தர்ஷினி ஒரு முறையேனும் சிவாவிடம் பேச முயற்சிக்கவில்லை, ஏன் நாளுக்கு இரண்டுமுறை வந்துபோகும் காவ்யாகூட அதைப்பற்றி பேச முற்படவில்லை. இதை மறைமுகமாக கவனித்துக்கொண்டுதான் இருந்தார் மாணிக்கம்.
வாரம் இரண்டு கடந்திருக்கும்..
தர்ஷினி சமையலறையில் ஆர்வமாய்.. சமைத்துக்கொண்டிருக்க, காவ்யாவோ அவள் வெட்டித்தரும் காய்கறிகளையும், வீட்டின் முந்திரி இருப்புகளையும் சமையலறை திண்டின் மேலமர்ந்து திண்றுக் கொண்டிருந்தாள்.
“சரி அப்ப நீ நாளைக்கு ஃபங்க்ஷனுக்கு வர்றீயா இல்லயா?” – காவ்யா
“நான் வரல.. உங்கிட்ட இத பத்தாவது தரவையா சொல்றேன்.. அப்பாவ தனியா விட்டுட்டு எப்படி வரமுடியும் லூசு.. உனக்கு ஏதாவது புரியுதா இல்லயா? – தர்ஷினி
“ஏய்.. எனக்கெல்லாம் புரியுது.. நீ ஏன் இப்படி அங்கிள் கூடவே இருந்து அவங்கள பேஷன்ட் ஆக்குற? இப்பதான் அங்கிள் குணமாயிட்டாங்கள்ள..”
“அதுக்காக.. உடனே அவங்கள கவனிக்க வேண்டாம்னு அர்த்தமில்ல..”
“ஓ.கே அப்போ அங்கிளையும் கூட்டீட்டு போகலாம்..பக்கத்திலதானே..”