‘பூரி.... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அனும்மா..’ என்றான் அவள் கண்களுக்குள் பார்த்து. பழைய நினைவுகளிலிருந்து மெல்ல தரை இறங்கினாள் இவள்.
‘உன் மனசிலே என்னென்ன ஓடுதுன்னு எனக்கு புரியுது. அந்த வயசிலே எனக்கு அவ்வளவு மெச்சூரிட்டி இல்ல அனும்மா. நிறைய ஈகோ, திமிர் உன் அன்பை புரிஞ்சுக்க முடியலை. ரொம்ப சாரி அனும்மா.. அப்போ உன்னை பிடிக்கலைனு சொன்னது ரொம்ப தப்பு. இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு அனும்மா.’ என்றான் ரொம்பவுமே இதமான குரலில்.
அவள் மெல்ல விழிகளை தாழ்த்திக்கொள்ள ‘ரோஜா படத்திலே அரவிந்த்சுவாமி சொல்றா மாதிரிதான். நான் ரொம்ப கெட்டவன் எல்லாம் இல்லை. கொஞ்சம் நல்லவன்தான். ப்ளீஸ் அனும்மா’’ அவன் கெஞ்சலுக்கு இறங்க எந்த பாவத்தையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாக கேட்டாள் அவள்.
‘இன்னொரு பூரி வைக்கவா’ ஹரிஷ். மெலிதாய் ஒரு ஏமாற்றம் பரவியது அவன் முகத்தில்.
அவன் சாப்பிட்டு முடித்த நேரத்தில் வாசலில் வந்து நின்றது சார். வந்தது பெரியம்மாதான் என நினைத்தவளாக
‘பெரியம்மா வந்திட்டாங்க இவள்..’
‘வெரி குட். மீட் பண்ணுவோம்’ சொல்லிக்கொண்டே இவன் கை கழுவிக்கொண்டு வர வந்தது பெரியப்பா.
‘என் பெரியப்பா. ஆனந்த கண்ணன் இவள் அறிமுகப்படுத்திவைக்க சட்டென அவர் பாதம் தொட்டு வணங்கினான் ஹரிஷ்.
‘நல்லாருப்பா. நல்லா இரு..’ அவர் வாழ்த்த இவள் உதட்டை சுழித்துக்கொண்டாள். ‘இதெல்லாம் நல்லா கத்து வெச்சிருக்கான்’
அதே நேரத்தில்
அங்கே ரகுவின் வீட்டில் ஹரிஷ் இரவு அங்கே வருவதாக சொல்லி இருக்க இரவு உணவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்க தனது அறையில் இருந்தாள் ஸ்வேதா. ரகுவின் மனைவி. அவளுக்கு இன்று பிறந்தநாள். அவளை சந்திக்கத்தான் வந்துக்கொண்டிருந்தாள் அவளது அக்கா கீதா. அனுராதாவின் அண்ணி. ஷங்கரும் அதே நேரத்தில் அங்கே வது சேர்ந்திருக்க, இருவரும் ஒன்றாக சென்று ஸ்வேதாவை வாழ்த்த
‘என்னமா..வீட்டிலே அர்ரேஞ்மென்ட்ஸ் எல்லாம் தடபுடலா இருக்கு. உன் பர்த்டே பார்ட்டிக்கா?’ கேட்டாள் கீதா.
‘ம்க்கூம் அது ஒண்ணுதான் குறைச்சல்’ சலித்துக்கொண்டாள் ஸ்வேதா. ‘ஹரிஷ் வரானாம் ராத்திரி அதான்.’
‘ஹரிஷா? எந்த ஹரிஷ்?’ இது கீதா.
‘அதான் கிரிக்கெட்டர் ஹரிஷ் ’ அவள் சொல்லி முடிக்கவில்லை. கணவன் மனைவி இருவர் முகமும் அப்படியே வரண்டு போனது.
‘ஓ..’ மெலிதாய் எழுந்தது கீதாவின் குரல்.
‘நாம வீட்டுக்கு கிளம்பலாமா கீதா’ எழுந்தே விட்டான் ஷங்கர்.
‘ஏங்க இப்போதானே வந்தோம். உடனே கிளம்பணுமா?’ குரல் எழும்பவில்லைதான் கீதாவுக்கு,
‘நாம இப்போ வீட்டுக்கு போறோம்..’ இரும்பாய் மாறி இறுகி இருந்தது ஷங்கரின் குரல். பேசாமல் எழுந்தாள் கீதா. அவர்கள் எங்கே அறிந்தார்கள் அவர்கள் வீட்டில்தான் ஹரிஷ் அமர்ந்திருக்கிறான் என!
அங்கே அவர்கள் வீட்டில் ஹரிஷுடன் படு உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார் பெரியப்பா. அதே நேரத்தில் கண்களில் ஓடிய சின்ன குற்ற உணர்ச்சியுடன் அவரது மனம் அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டது.
‘தெரியுமே அவருக்கு. அவனது குடும்பத்தை பற்றியும் தெரியும் அவனுக்கு நேர்ந்த அவமானங்கள் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். அவனுடைய அப்பாவை சந்தித்தும் இருக்கிறாரே!’
‘என்னப்பா நீ? என்றார் அவர். ‘ஊரே உன்னை தூக்கி வெச்சு கொண்டாடிட்டு இருக்கு. நீ சிம்பிளா நம்ம வீட்டிலே உட்கார்ந்து பூரி சாப்பிடறே?’
‘நீங்க வேறே அங்கிள். வோர்ல்ட் கப் கூட ஈசியா ஜெயிச்சிட்டேன் அனுகிட்டேர்ந்து பூரி வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா. இதுதான் எனக்கு பெரிய விஷயம்’ என்றபடி அங்கே நின்றிருந்தவளை பார்த்து கண் சிமிட்டினான் ஹரிஷ். பழிப்புக்காட்டி திரும்பிக்கொண்டாள் அவள்.
‘சரி இந்தியாவுக்கு வேர்ல்ட் கப் ஜெயிச்சு கொடுத்திருக்கே? உனக்கு என்ன கி ஃப்ட் வேணும் சொல்லு’ பெரியப்பா கேட்க
‘என்ன கேட்டாலும் கொடுப்பீங்களா அங்கிள்’ மெல்லக்கேட்டான் இவன். தூண்டில் போடுகிறான் என்றே இவளுக்கு தோன்றியது.
‘கண்டிப்பா. என்ன வேணும் கேளு..’
‘உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா அங்கிள்.’ படு இயல்பாய் அவர் முகத்தை நேருக்கு நேராக கேட்டே விட்டான் ஹரிஷ். மொத்தமாய் குலுங்கியது அனுராதாவுக்கு. கொஞ்சம் திகைத்துபோனார் பெரியப்பா.
அவன் நேரடியாக கேட்ட விதம் பெரியப்பாவுக்கு பிடித்தே போனது. அவர்களால் அவன் பட்ட அவமானத்துக்கு இதுதான் சரியான பரிகாரமோ என்றே கூட தோன்றியது அவருக்கு.