தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 31 - தேவி
கல்லூரி எதிர்பார்த்ததை விட அந்த நூறாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அதிலும் பழைய மாணவர்கள் சந்திப்பில் நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்னால் படித்தவர்கள் எல்லோரையும் பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு உள்ளே ஓடத்தான் செய்தது.
ஆண்டு விழாவின் கடைசி நாளன்று மாணவர்கள், பெற்றோர்கள் என்று மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கும் அழைப்பு இருந்தது. நூறு வருடங்களாக நிலைத்து நிற்கும் கல்லூரி என ஒரு ஆர்வமும், ஆச்சர்யமும் பெருமிதமும் தோன்றி , அந்த விழாவை காண ஆர்வத்தோடு வந்தனர் மக்கள்.
இந்த கடைசி நாள் விழாவிற்கு தலைமை தாங்க பிரதமரை அழைத்து இருந்தனர். இரண்டு நாட்கள் முன் வரை அவரின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டு அதன் பின் இவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கல்லூரி சார்பில் பிரதமரை சந்தித்து தலைமை தாங்க விண்ணப்பிக்கும் போதே இவர்கள் கல்லூரி பற்றிய அத்தனை விபரங்களும் அவருக்கு உளவுத்துறை மூலமாக கிடைத்து விட்டது.
அதில் அவர்கள் எப்படி விழா ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் என்ற விபரம் எல்லாம் இருக்கவே, அப்போதே வருவதற்கு ஒப்புக் கொண்டால் அது பரவி, கல்லூரியின் முக்கியத்துவத்தை விட பிரதமரின் வருகைக்கு முக்கியத்துவம் ஏற்படும். அதோடு பாதுகாப்பு காரணங்கள் என சொல்லி இவர்களின் ஏற்பாடுகளில் காவல் துறை தலையிட்டு இந்த கொண்டாட்டம் மாறி இருக்கும் என்பதால் அவரின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
முதல் நாள் பழைய மாணவர்கள் சந்திப்பு முடிந்த பின் கல்லூரி காவல் துறை கண்காணிப்பின் கீழ் வந்து விட்டது. கல்லூரி மைதானம் பாதியாக பிரிக்கப்பட்டு , முதல் பாதியில் VIP க்களுக்கும், பின் பாதியில் பொது மக்களுக்கும் இடம் ஒதுக்கபட்டது.
கல்லூரி நிர்வாகத்திடமிருந்து நிகழ்ச்சி அட்டவணை பெறப்பட்டு அதில் பிரதமருக்கான நேரம் எங்கே வர வேண்டும் என்று சேர்த்து கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இவர்கள் முதல்வரை அழைத்து இருந்தாலும், அவரின் வருகையும் ஈரெட்டாக இருந்த நிலையில் பிரதமரின் வருகை அவரையும் உள்ளே இழுத்து விட்டது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் பலமாக இருந்தது.
முதல் நாள் கல்லூரி விழா குழுவினர், நிர்வாகம் , மாணவர்கள் தலைவன் என எல்லோரும் சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டு , பிரதமரின் வருகையால் விழாவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதம் செய்தனர்.
முதலில் இருந்த நிகழ்ச்சி நிரலில் உள்ள பல நிகழ்ச்சிகளை கடைசியில் கொண்டு சென்றனர்.
நிர்வாகம் சார்பில் பேசியவர்
“இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க பிரதமர் வருவது நமக்கு மிக பெரிய கவுரவம். அதே சமயம் அவர் நமக்கு கொடுத்து இருக்கிற நேரம் ஒரு மணி நேரம் தான். அதில் அவர் தலைமையுரை அரை மணி நேரம் கொடுக்கணும். அவர் கொடுத்து இருக்கிற நேரம் மாலை ஆறரையில் இருந்து ஏழரை வரை.. சோ நம்ம விழாவை ஐந்தரை மணிக்கு ஆரம்பிக்கணும். பிரதமர் இருக்கும் நேரத்தில் அவர் உரை, முதல்வரின் வாழ்த்து உரை, நம்ம ஆண்டு விழா மலர் வெளியீடு, அவருக்கு நன்றி உரை இதை முக்கியமா வச்சு நம்ம ப்ரோக்ராம் சாட் ரெடி பண்ணனும். மற்ற ப்ரோக்ராம் எல்லாம் அதற்கு பின் மாத்திக்கலாம்.”
எல்லோரும் ஒத்துக் கொள்ள,
செழியன் “சார் .. நாளைக்கு இருக்கிற செக்யூரிட்டியில், எப்படி சீட்டிங் ஆர்டர் கொடுக்க போறோம்..?”
“நாங்க அதை செக்யூரிட்டி ஏஜென்ட் கூட பேசிட்டோம் செழியன். காலேஜ் ஸ்டுடென்டஸ், ஸ்டாப்ஸ் எல்லோருக்கு ஐடி கார்டு செக் அனுப்ப சொல்லிட்டோம்.. பாரென்ட் & வெல்விஷர் எல்லோருக்கும் நம்ம ப்ரோக்ராம் இன்விடேஷன் வச்சி உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்து இருக்கோம்..மற்றபடி வர கெஸ்ட் எல்லாம் அவங்க ப்ரோசிஜர் படி செய்வாங்க.. அதோட முதல் பார்டீஷனில் காலேஜ் சேர்ந்தவங்க, VIP எல்லோரையும் உக்கார வைக்க ஏற்பாடு பண்ணியாச்சு. அதோட நம்ம கிரௌண்ட் & பர்ஸ்ட் ப்ளோர் காரிடாரில் பாதி ஸ்டுடென்ட்ஸ்க்கு இடம் கொடுத்தாச்சு. “
ஆசிரியர்கள் பக்கத்தில் இருந்து
“அப்போ எல்லோருக்கும் தெரியும் படி சில மானிடர்களும் ஏற்பாடு பண்ணிடலாமா சார்..”
அதற்கு செழியன் “ நாம ஏற்கனவே நம்ம காலேஜ் ப்ரோக்ராம் யூடுபில் போட ஏற்பாடு செய்து இருக்கிறோம்.. இப்போ எப்படியும் நியூஸ் சனேல்ஸ் கவரேஜ்க்கு வருவாங்க.. நாம யுடுபில் லைவ் ரிலே கவர் செய்து அதை சனேல்ஸ்க்கு ரைட்ஸ் கொடுப்போம்.. மீடியாவிற்கு நம்ம சார்பில் பேசி , அதற்கான ப்ரோபர் அக்ரீமென்ட் போடணும்.. “ என
அதை கல்லூரி தாளாளர் பார்த்துக் கொள்வதாக கூறினார். இப்படி ஏகப்பட்ட வேலைகள் அன்றைய தேதியில் அதிகமாக சேர ஆரம்பிக்க , அன்று இரவு கிட்டத்தட்ட பத்து மணிக்கு மேல் ஆகியது எல்லோரும் வீட்டிற்கு செல்ல..
மலர் ஏற்கனவே வீட்டிற்கு போன் செய்து சொல்லி விட்டாள். அதனால் அவள் மாற்றி அமைக்க பட்ட ப்ரோக்ராம் ஆர்டரை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அதற்கேற்றவாறு தயார் செய்தாள்.