“ஹே மச்சி என்னடி சொல்ற..?? இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு, இன்னைக்கு வந்து மகி அண்ணாக்கிட்ட பேசனும்னு சொல்ற..?? இன்னும் கொஞ்ச நேரத்துல பங்ஷன்க்கு எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க.. இப்போ போய் நீங்க பேசறது சரியா இருக்குமா? நம்ம வீட்டு ஆளுங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க தான்.. ஆனா வர்ற ஆளுங்க ஏதாச்சும் சொல்வாங்கன்னு இதுக்கு தடை போடுவாங்களே!!”
“எனக்கும் அந்த யோசனை தான் மச்சி.. இல்லன்னா மகிக்கிட்ட பேச எனக்கு என்ன தயக்கம் சொல்லு.. இப்போ நான் வெளிய வரக் கூடாதுன்னு அம்மாவும் பாட்டியும் சொல்வாங்க.. அதான் உன்னோட ஹெல்ப் கேக்கறேன்..”
“பேசாம அண்ணாவோட போன்ல பேசிடேன்..”
“இல்ல நான் நேர்ல தான் பேசனும்..”
“சரி… இப்போதைக்கு இதுக்கு நமக்கு ஹெல்ப் செய்ய போறது அறிவு அண்ணா தான்.. இதுமாதிரி விஷயத்துக்கு தான் அவன் எப்பயாச்சும் அவனோட அறிவை யூஸ் பண்ணுவான்.. அதனால அவன்கிட்ட ஐடியா கேக்கலாம்..” என்றவள், அறிவழகனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டாள்.
அறைக்குள்ளே இருந்த அறிவுக்கு தன் பெற்றோரும், சகோதரியும் வந்தது தெரியாமல், இலக்கியாவிடம் இருந்து அழைப்பு வந்ததை பார்த்ததும், “ஹே இலா.. எங்க இருந்து பேசறீங்க.. எப்போ வருவீங்க.. இங்க பெரியம்மா நீங்க எப்போ வருவீங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க” என்று பேசிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தவன், அங்கே வரவேற்பறையில் கதிரவனோடு பேசிக் கொண்டிருந்த தன் தந்தையை பார்த்ததும், அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
இன்னும் இவர்கள் இங்கு வந்ததை அறியாத தன் சகோதரனிடம் விளையாடிப் பார்க்க எண்ணி இலக்கியாவோ, “அண்ணா.. நாங்க வந்த பஸ் ப்ரேக்டவுன் ஆயிடுச்சுன்னா.. நாங்க வேற பஸ்க்கு வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு அருள்மொழியை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.
“ஹே லூசு.. நான் அப்பா பக்கத்துல தான் இருக்கேன்.. பொய்யா சொல்ற..” என்று மெதுவாக அலைபேசியில் பேசியவன், தன் தந்தையை பார்த்து சிரித்தான்.. பின் அவர் ஏதாவது கேட்டு விட போகிறார் என்ற பயத்தில், அங்கிருந்து திரும்ப அறைக்குள் வந்தான்..
“ஹாஹா கண்டுப்படிச்சிட்டியா? நான் இங்க அருளோட ரூம்ல தான் இருக்கேன்.. இப்போ எங்களுக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது..”
“உங்களுக்கா..?? உனக்கு அப்புறம் இன்னும் யாருக்கு..?? “
“நம்ம அருளுக்கு தான்.. அவளுக்கு இப்போ மகி அண்ணா கூட உடனே பேசனுமாம்..”
“ஹே என்ன விளையாட்றீங்களா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகப் போகுது.. மகி ரெடியாகிட்டு இருக்கான்… இந்த நேரத்துல பேசனும்னா என்ன அர்த்தம்.. சீக்கிரம் அவளை ரெடியாக சொல்லு..”
“அய்யோ ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகறதுகுள்ள பேசனும்னு தான், உன்கிட்ட உதவி கேக்கறோம்.. ப்ளீஸ் ண்ணா.. நீதான் ஹெல்ப் பண்ணனும்..”
“ஹே இந்த நேரம் பேசனும்னா, யாராச்சும் ஏதாச்சும் சொல்வாங்க.. யாராச்சும் எதுக்கு, அப்பாவே ஆயிரெத்தெட்டு கேள்வி கேப்பாரு.. உனக்கு தெரியாதா?”
“தெரியும் அண்ணா.. அதான் யாருக்கும் தெரியாம பேசறதுக்கு ஐடியா சொல்லுவன்னு உன்னை கேக்கறோம்..” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, அவளிடமிருந்து அருள்மொழி அலைபேசியை வாங்கி,
“ப்ளீஸ் அறிவு.. எனக்கு மகிக்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசனும்.. ஏதாவது ஐடியா சொல்லு..” என்று கெஞ்சிக் கேட்டாள்.
“ஓகே இப்போதைக்கு யாரும் இல்லாத இடம்னா பின்னாடி தோட்டம் தான்.. இந்த டைம் யாரும் அங்க வரமாட்டாங்க.. மகி குளிச்சதும், வெளிய இருப்பவங்கக்கிட்ட ஏதாச்சும் ரீஸன் சொல்லிட்டு, அவனை கூட்டிக்கிட்டு அங்க வந்துட்றேன்.. நீங்க வெளிய வந்தா கேள்வி கேப்பாங்க.. அதனால பால்கனி பக்கமா வெளிய வந்துடுங்க.. மலர், மணியை நீங்க தான் சமாளிக்கனும்… அருள் திரும்ப ரூமுக்கு போறதுக்குள்ள, பெரியவங்க யாராச்சும் வந்துட்டா, அவங்க ரெண்டுப்பேரும் சமாளிக்கனும்.. என்ன ப்ளான் ஓகே வா?”
“அறிவு அண்ணா.. உனக்கு எம்புட்டு அறிவு..”
“சரி.. மகி வந்ததும், உங்களுக்கு கால் பண்றேன்.. ரெடியா இருங்க..” என்று அலைபேசி அழைப்பை துண்டித்தான்.
அவள் வர வேண்டிய இடம் வந்ததும், அதற்கு முன் சிறிது தூரத்திலேயே ஆட்டோவை நிறுத்தி சுடரொளி இறங்கிக் கொண்டாள். “அண்ணா.. கொஞ்சம் நேரம் வெய்ட் பண்றீங்களா? நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துட்றேன்..”
“வெய்ட் பண்றதுக்கு எக்ஸ்ட்ரா பைசா கொடுக்கனும்மா.. பரவில்லையா?”
“பரவாயில்லை ண்ணா.. வெய்ட் பண்றதுக்கு எவ்வளவு சார்ஜ் ஆகுமோ, அதை நான் கொடுத்துட்றேன்..”
“அப்போ சரிம்மா..” என்று ஆட்டோ ட்ரைவர் ஒத்துக் கொண்டதும், அவள் கொண்டு வந்திருந்த ட்ராவல் பேக்கை ஆட்டோவிலேயே வைத்தவள், வெறும் கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றாள்.