“அலை செய்யும் துரோகமிது!
ஆழ்கடலுக்கடியில் வாழ்கிறாள் தேவதை ஒருத்தி!
அவளை அள்ளி அணைக்க காத்திருக்கிறான் யுவன் ஒருவன்!
பகலவனின் பார்வையே யுவனின் பார்வையென அவள் நினைக்க,
கேட்டதே எங்கிருந்தோ அசரீரி ஒன்று!
“ யுவதியே, உன்னவன் கரையில் உள்ளான்..
அவன் உன்னை தேடி வந்து சேரும் நாளே,
உன் காதலின் அரங்கேற்றமென அறிவாயாக!”
தெளிவுநிலையில் மயக்கம் கொண்டாள் மங்கை!
அலைகளெனும் தோழிகளிடன் தன் பசலையின் நிலை உரைத்தாள்!
“உரைப்போம் உன் காதலை, கரை சேர்வோம் அலையெனவே!”
அலைகளின் சத்தியம் யுவதியின் காதல் நோய்க்கு மருத்துவம்!
நாட்கள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய்,
வருடங்கள் எல்லாம் ஜென்மங்களாய்,
அவள் மட்டும் மாறாத காதலியாய்!
அறிந்திருக்கவில்லை அவள், தூது சென்ற அலைகள் எல்லாம்
யுவனின் அழகில் மயங்கி காதலை சொல்லாமலே,
அவன் பாதத்தை முத்தமிட்டு வாழ்கின்றன என்று!
-கதிரா”
தனது “BLOG”இல் காலைப் பதிவொன்றை போட்டுவிட்டு அன்றைய நாளைத் தொடங்கினான் கதிரவன். கதிரவன், பிரபஞ்சன் இருவருக்கும் எதிர்மாறாக சூரியஒளியை தலையணையால் மறைத்துக் கொண்டு குரட்டை விட்டுக் கொண்டிருந்தான் கார்முகிலன். அதை நன்கு அறிந்தவர்களாய் பிரபாவும், கதிரும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
“மச்சான், அந்த க்ரண்டரை கொடு”-பிரபா
“டேய் இன்னைக்கு என்னடா பண்ண போற?” – கதிர்.
“நீ தோசைக்கு சட்னி அரைக்கனும்னு சொன்னல?”
“இல்லையே”
“இல்ல மச்சி..நீ சொன்ன.. மறந்துருப்ப..”
“இதோ அரைச்சிடலாம்!” என்றவன் கார்முகிலனின் அருகில் க்ரண்டரை பொருத்தி விசையை அழுத்த “கிர்ர்ர்ர்” என்ற சத்ததில் அரண்டபடி எழுந்தான் கார்கி.
“ டேய் எரும.. ஏன்டா மாமியார் மாதிரி கொடுமை பண்ணுற?” என்று அவன் அலற,
“மாமியாரா?த்தூ.. உன்ன மாதிரி தூங்கு மூஞ்சிகெல்லாம் நான் என் பொண்ணை தருவேனாடா நாயே?” என்று கழுவி ஊற்றத் தொடங்கினான் பிரபா. அவர்கள் இருவரும் வாயாட தொடங்கியதை சிரிப்புடன் ரசிக்கத் தொடங்கினான் கதிரவன்.
“டேய் கதிரு.. முதல்ல உன்ன கொல்லனும்டா.. சைலண்ட் கில்லர்..” என்று தலையணையை அவன் மீது வீசினான் கார்கி. அதை லாவகமாக கேட்ச் பிடித்த கதிரவன் தன் பங்கிற்கு, “ தோனியின் ஃபேன்னா சும்மாவா?” என்று கார்கியை பார்த்து கூலாக கண்ணடிக்க, தூக்கம் கலைந்த எரிச்சலில் இருவரையும் சரமாரியாக அடிக்கத் தொடங்கினான் கார்முகிலன்.
“டேய் கார்கி போதும்டா.. இன்னைக்கு என்ன நாள் ? இப்படி கேனத்தனமா தூங்கிட்டு இருக்கியே! அப்பறம் நீதான் ஃபீல் பண்ணுவ மச்சான்..” என்று சமாதான குரலில் பிரபஞ்சன் சொல்லவும், சற்றே இறங்கி வந்தான் அவன். அடுத்த நொடியே, “டேய் கேக் ரெடியாடா? லெட்ஸ் கோ” என்று ஓட அவனுக்கு ஈடாக பிரபஞ்சன், கதிரவன் ஓடியபடி அவனைத் தொடர்ந்தனர்.
மூவரும் கையில் பிறந்தநாள் கேக் உடன் தங்கள் வீட்டிற்கு பின்னாலிருந்த கேட்டை திறக்க, இப்போது கடற்கரை காற்று மிக அருகிலேயே வீசியது.
“3..2..1.. ஹேப்பி பெர்த் டே” என்று பிரபா தொடங்க,
“மச்சான் நம்ம தலைவரே ஒரு மியூசிக் டைரக்டரு.. அவரு பொறந்த நாளுக்கு சும்மா எதையாச்சும் பாட முடியுமா?” என்று இடைப்புகுந்தான் கார்கி.
“அப்போ அவரோட பாட்டே பாடுவோம்”- கதிரவன். எந்த பாடல் பாடலாம் என்ற ஆராய்ச்சியில் இன்னும் கொஞ்சம் மெழுகுவர்த்தியை உருகவிட்டவர்கள், மிகுந்த உற்சாகத்துடன்,
“வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே” என்று பாடி கேக்கை வெட்டினார்கள்.
“இந்த வருஷம் தலைவருக்கு நிறைய அவார்டு கிடைக்கனும் மச்சி” – பிரபா
“மணிரத்னமும் அவரும் சேர்ந்தே இருக்கனும் மச்சி”- கதிர்
“நம்மள மாதிரி” – கார்கி.
நெகிழ்ச்சியாய் கார்கி சொல்ல மற்ற இருவரும் அவன் தோளில் கைப்போட்டு “நம்மள மாதிரியே தான்” என்றனர்.
“ செம்ம வியூ மச்சி.. இந்த பக்கம் வீட்டு ..இந்த பக்கம் கடல்.. எவ்வளோ அமைதி?” சிலாகித்தபடி சொன்னான் கதிரவன்.