"அப்படியொரு ஞானக்கண்ணா உனக்கு? அந்த கண்ணை நான் பாக்கணுமே"
"இதோ பாத்துக்க ஜெஸ்ஸி" என்று கண்களை அகல திறந்து காட்டினான் ஜான்.
கைப்பையில் இருந்த ஸ்பிரேயை எடுத்து ஜானின் கண்களில் அடித்தாள் ஜெஸிகா. ஜான் வலியால் துடித்தான். அவனது அலறல் விண்ணைப் பிளந்தது.
ஜெஸிகா வசந்தை நோக்கினாள். "இப்போ விஷயத்துக்கு வருவோம்"
"அந்த ஸ்பிரேயை உள்ள வை"
ஜெஸிகா அமைதியாக வசந்தையே பார்த்தாள்.
"உள்ள வை. எல்லாத்தையும் பேசலாம்"
தன் கைப்பையில் ஸ்பிரேயை வைத்தாள் ஜெஸிகா.
"உனக்கு என்ன தெரியணும்?"
"அன்னைக்கு ஏன் அப்படி ஓடின?"
"அந்த விஷயத்தை எப்படி சொல்லுறது? அவளுக்கு ஒரு பிரச்னை இருக்கு"
"என்ன பிரச்னை?"
"அவன் தனிமையில இருந்தா ஒரு மாதிரி ஆயிடுவா. அதை எப்படி சொல்லுறது..."
"சொல்லு"
"தனிமையில பயம் வந்து அதனால அவளுக்கு வலிப்பு வரும் "
"யூ மீன் ஃபிட்ஸ்?"
"யா, அதான் எனக்கு பயம் வந்து அவளை பாக்க போனேன். ஏற்கனவே எங்க வீட்டுல ஒரு முறை அப்படி நடந்திருக்கு"
"அப்படியா?"
"ஆமா. நீ எதுவும் அவகிட்ட கேக்காத"
"ஆனா. அன்னைக்கு வீட்டுல சாப்பாடு இல்லைனு தான ஓடின"
"சாப்பிடலைனாலும் அவளுக்கு ஃபிட்ஸ் வரும்"
ஜெஸிகா நெற்றியை தேய்த்தபடி சிந்தித்தாள்.
"இப்போ சொல்லு ஜெஸ்ஸி. நான் செஞ்சது சரியா தப்பா?"
"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல"
"ஒரு பொண்ணா யோசிச்சு பாரு"
"பெண்ணா? இவ பிசாசு! என் உயிரை எடுக்குறதுக்குன்னே பிறவி எடுத்து வந்திருக்கா" வலியால் துடித்தபடி ஜான் கத்தினான்.
"அவனை விடு. அமேலியா விஷயத்துல நான் செஞ்சது சரி தான?"
"அமேலியாவை நம்ம கூட வச்சிக்கமுடியாது வசந்த். அது சரி கிடையாது"
"ஏன்?"
"அவளை யாராவது பார்த்தா என்ன ஆகும்? அவளை யாருன்னு அறிமுகப்படுத்துவ?"
வசந்த் சிந்தித்தான்.
"எனக்கு என்னவோ அமேலியா வந்ததுல இருந்து நம்ம சுதந்திரத்தையும் நிம்மதியையும் இழந்துட்டு வரோம்னு தோணுது"
"உனக்கு அமேலியாவை பிடிக்கல. அதான் இப்படி பேசுற"
"உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கா?"
ஜெஸிகாவின் இரட்டை அர்த்த கேள்வி வசந்த்தை திக்குமுக்காட வைத்தது.
"நான் அவளை புரிஞ்சிகிட்டேன்"
ஜெஸிகா வெறுப்பான மூச்சை வெளியேற்றினாள்.
"அவ ஒரு ரெண்டு நாளாவது சுதந்திரமா இருக்கட்டும். அப்புறம் அவ தலையெழுத்து. ஜெயில்ல அடைச்சு வச்சிடலாம்"
"ஜெயிலா?"
"வீட்டை சொன்னேன்"
"என்னவோ பண்ணு"
ஜானின் கண் எரிச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. ஜெஸிகாவை ஓங்கி அறையவேண்டும் போலிருந்தது. 'எவ்வளவு கொடுமை பண்ணிருப்பா. கன்னத்திலயே பளார்னு வச்சாதான் எனக்கு நிம்மதி கிடைக்கும்'. ஆனால், என்ன செய்வது? அவன் பார்வை தான் தற்காலிகமாக தடைபட்டுவிட்டதே. அந்த எரிச்சலிலும் ஜெஸிகாவை உடனடியாக அடிக்கவேண்டும் என்று ஜான் முடிவெடுத்தான்.
ஜெஸிகாவின் குரலைப் பின்பற்றி தட்டு தடுமாறியபடி அவளை நோக்கி சென்றான். 'அவளை அடித்த பின் அவள் எவ்வாறு நடந்து கொள்வாள். அழுவாளா? அவள் அழுதா உலகம் அல்லவா அழிந்து போகும். பிறக்கும் போதே சிடுமூஞ்சோடு தான் பிறந்திருப்பாள். ஒருவேளை அடி வாங்கிய அடுத்த கணம் அவள் மீண்டும் அடித்துவிட்டால்?!. வசந்தின் முன்னால் தன் மானம் அல்லவா போகும். அடித்தபின் அவள் கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். தான் கோபமாக ஏதேனும் மனதில் தோன்றிய வார்த்தைகளை பேசினால் அவள் அடங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது'.