“இல்லை சுடர் லண்டனுக்கு போகக் கூடாது.. அவளை நான் போகவிடமாட்டேன்..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், உடனே சுடரின் அலைபேசிக்கு முயற்சித்தான்.. ஆனால் அது அணைக்கப்பட்டிருந்தது. இப்படியே நின்றிருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து, உடனே கிளம்பினான்.
அவன் சிறிது நேரமாகவே இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்ததால், அவன் வீட்டிலிருந்து வெளியே சென்றதை, பெரியவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். வெளியில் நின்றிருந்த புகழேந்தியும் வீட்டுக்குள் வந்துவிட்டிருந்தார். வாசலுக்கு சென்ற மகியோ, தன் பைக்கை தேடினான்.. தன்னுடைய வண்டியில் கொஞ்சம் பிரச்சனை என்பதால், அறிவு மகியின் பைக்கை தான் எடுத்து போயிருந்தான்.. இவன் தேடிக் கொண்டிருந்த போதே, வெளியே போயிருந்த அறிவு அங்கு வந்தான்.
“ஹே எங்கடா போன.. கொஞ்சம் வண்டியக் கொடு” என்று அறிவு இறங்கியதும், வண்டியை மகி கைப்பற்றிக் கொண்டான்.
“ஹே ஆமா நீ இப்போ எங்கப் போற?”
“ஒரு முக்கியமான வேலை..”
“சரி இரு நானும் வரேன்..”
“வேண்டாம்.. நான் தனியாவே போறேன்..”
“எதுக்கு.. நீ வர்றதுக்குள்ள இங்க இருப்பவங்க, என்னை ஒரு வழிப் பண்றதுக்கா.. நானும் கூட வரேன்.. ஒரு நிமிஷம் இரு.. பெரியம்மா சொன்ன வேலையை முடிச்சிட்டேன்.. அதைப்பத்தி அவங்கக்கிட்ட சொல்லிட்டு வந்துட்றேன்..”
“இப்பவே வர்றதுனா வா.. இல்ல நான் தனியாவே போய்க்கிறேன்..” என்று மகி பிடிவாதம் பிடிக்க, அவன் எங்கே போகிறான் என்பது தெரியாமலேயே அறிவு அவனோடு கிளம்பினான்.
இவர்கள் வீட்டிலிருந்து கிளம்பிய அதே நேரம், விமான நிலையம் போகும் வழியில், தனக்கான விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்திருந்த ஏஜென்சியிடம் இருந்து வாங்கிக் கொண்டவள், திரும்ப ஆட்டோவில் ஏறினாள் சுடரொளி.ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பும் போது எடுத்த முடிவு தான், மகிழ்வேந்தனின் பதிலைப் பொறுத்து , அவள் செய்ய வேண்டியதை தீர்மானித்திருந்தாள்.. இதோ மகிழின் பதிலும் தெரிந்துவிட்டது. ஏற்கனவே தந்தையின் ஒதுக்கம்.. இப்போது மகியின் ஒதுக்கமும் சேர்ந்துவிட்டது.. இதற்கு மேலும் இவள் இந்த உலகத்தில் வாழ வேண்டுமா? அவள் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்தவளாய், தன் கைப்பையில் இருந்த விஷத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}