சரி.. இளாவிடம் கேட்கலாம் என்று அவனுக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தாள்.
“ஹாய் இளா.. “
“ஹாய் .. விழி டார்லிங்.. “
“ப்ரீயா இருக்கீங்களா இளா ? கால் பண்ணட்டும்மா?”
“இரு நானே கால் பண்றேன்..” என்று டைப் செய்தவன், அவளுக்கு உடனே கால் செய்தான்.
“சொல்லுடா.. என்ன ஆச்சு..? “
“ஒண்ணுமில்லை.. “ என்றவள் வீட்டில் நடந்ததை சொன்னாள்.
“இதில் என்னமா ப்ரோப்லேம் வரபோகுது.. கோவிலுக்குத்தானே கூப்பிடறாங்க.. “
“இல்ல இளா.. எனக்கு என்னவோ .. ஆச்சி மனசில் என்னவோ இருக்கிறதா படுது..”
“அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது.. உனக்கு ஏதும் முறை மாப்பிள்ளை அப்படி யாரும் இருக்காங்களா ?”
“எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் இல்லை இளா... இருந்து இருந்தா இத்தனை நாள் விட்டு வச்சிருக்கவும் மாட்டாங்க.. அட்லீஸ்ட் பேச்சு வார்த்தையாவது நடத்தனும்னு ஆரம்பிச்சு இருப்பாங்க..”
“ஹ்ம்ம். தென்... என்ன பயம்.. ஒருவேளை உனக்கு கல்யாண பேச்சு எடுக்கிறதுக்கு முன்னாடி கோவில்லே போய் சாமி கும்பிட்டு ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறாங்களோ என்னவோ ?’
“அப்படியும் இருக்கலாம்.. “ என்றாள் யோசனையோடு...
“சரி .. இதுக்காக டென்ஷன் ஆச்சா உனக்கு ?”
“ஹ்ம்ம்.. நம்ம கல்யாணத்துக்கு வீட்டில் சம்மதிக்கிற வரை கொஞ்சம் பயமாதான் இருக்கு இளா..”
“கவலைப் படாதே.. எப்படியும் சம்மதம் வாங்கிடலாம்.. இந்த மாசக் கடைசியில் எனக்கு ரிசர்ச் வொர்க் வைவா இருக்கு.. அது முடிந்ததும் நான் எங்க அப்பா கிட்டே பேசிருவேன்”
“ஓகே..பா.. நீங்க உங்க வேலைய பாருங்க.. நான் போன் வைக்கிறேன்.. பாய்..” என,
“ஹேய்.. இரு.. நீ எந்த ஊருக்கு போகப்போறே ?’
“எனக்கு ஊர் பேர் சரியா நியாபகம் இல்லை.. திருநெல்வேலி பக்கம் எங்கியோ போவோம்”
“சரி.. சரி.. நீ சொல்ற தேதிலே நானும் கூட ஊருக்கு போயிட்டு வருவேன் மலர்” என
“உங்க வீட்டிலேயும் பிரச்சினையா இளா?”
“அப்படி எல்லாம் இல்லைமா.. சொந்தக்காரங்க ஒருத்தங்கள பார்க்க வேண்டியது இருக்கு.. மத்த நாள் எனக்கு டைம் கிடைக்கிறது கஷ்டம்.. இது மூணு நாள் லீவ் சேர்ந்து வரதாலே.. அந்த வேலைய முடிச்சிட்டு வந்துரலாம்ன்னு பார்க்கறேன்.”
“ஓகே.. இப்போ நீங்க வேலைய பாருங்க.. வேற எதுவும் மெசேஜ் இருந்த உங்களுக்கு சொல்றேன்” என
“பாய் டியர்.. “
மலர் பேசி வைத்ததும் , செழியனிற்கு வடிவேல் மாமா நினைவு வந்தது. அவரிடம் பேசவில்லையே என்று எண்ணியவன், மணியை பார்க்க இன்னும் உறங்கி இருக்க மாட்டார் என்று எண்ணியவனாக அவரின் போன் நம்பரை தேடி எடுத்து டயல் செய்தான்.
“ஹலோ.. யாரு பேசறது?” என்று satru தடித்த குரல் கேட்க,
“ஹலோ .. யாரு வடிவேலு ஐயாவா பேசுறதுங்க?
“ஆமாம்.. நீங்க யாரு?”
“ஐயா.. நான் சிவஞானம் மகன் செழியன் பேசுறேன் “
“சிவஞானம் மகனா.. தம்பி நல்லா இருக்கீங்களா? “
“நல்லா இருக்கேன் ஐயா”
“என்ன தம்பி ஐயான்னுகிட்டு.. நல்லா வாய் நிறைய மாமான்னு கூப்பிடுங்க..”
“எனக்கு நீங்க என்ன உறவு முறைன்னு ஒரு சந்தேகம் ..அதான் பொதுவா ஆரம்பிச்சேன் மாமா..”
“நல்லது தம்பி.. வீட்டில் அப்பா , அம்மா எல்லோரும் நல்லா இருக்காங்களா ?”
“எல்லோரும் நல்லா இருக்கோம் மாமா..”
“என்ன விஷயம் தம்பி..? இந்நேரம் போன் பண்ணிருக்கீங்க..?”
“மாமா.. உறவுன்னு சொல்லிட்டு நீங்க , வாங்கன்னு மரியாதையா பேசிட்டு இருக்கீங்க.. உங்க பையன கூப்பிடற மாதிரி பேசுங்க..?”
“அதுவும் சரிதான்.. என்ன விஷயம் சொல்லுப்பா ?”
“மாமா..” என்று தயங்கியவன், “அது வந்துங்க.. அப்பா உங்ககிட்டே ஒரு வேலை சொல்லிருந்தாங்களாமே..”
“ஆமாம்.. பா.. அது அனேகமா முடிஞ்சா மாதிரிதான்.. யாரு, என்ன என்ற விவரம் எல்லாம் கிடைச்சுட்டு.. நேர்லே போய் பேச வேண்டியதுதான் பாக்கி..”
“ஒஹ்.. சரி மாமா... இந்த விஷயத்துலே எனக்கு கொஞ்சம் நீங்க உதவனுமே.. “
“என்ன சொல்லு..?”
“அவங்கள கண்டுபிடிச்ச விவரத்த இப்போதைக்கு நீங்க அப்பா கிட்டே சொல்ல வேண்டாம்..”
“ஏன்பா.. ? உனக்கு இந்த பொண்ண பாக்கிரதுலே அவளோ இஷ்டம் இல்லையோ?”
“அது நான் உங்ககிட்டே நேர்லே தான் சொல்ல முடியும்..”