“என்னால நம்ப முடியல.. ஊருக்குப் போறதா சொல்லி இப்போ என்ன திட்டம் போட்ருக்காளோ! நீயும் அதுக்கு உடந்தையா எழில்.. உண்மையை சொல்லு, மகிக்கிட்ட நீ சுடர் பத்தி தானே பேசின?” கலையரசி சந்தேகத்தோடு கேட்டதும்,
“என்ன எழில்.. சுடர் விஷயத்தை நீ மகிக்கிட்ட பேசினியா?” என்று கதிரும் கோபமாக கேட்டார்.
“நான் எங்க மகிக்கிட்ட சுடர் பத்தி பேசினேன். அவன் தான் என்கிட்ட சுடர் எழுதின லெட்டர எடுத்துட்டு வந்து கொடுத்தான். சுடர் வீட்டு வெளிய வச்சு புவிக்கிட்ட லெட்டர கொடுத்து விட்ருக்கா, அதை புவிக்கிட்ட இருந்து வாங்கி மகி தான் என்கிட்ட கொடுத்தான். அப்போக் கூட சுடர் லண்டன் போறது தான் நல்லது. இதோட இதை விட்டிடுவோம்னு தாங்க சொன்னேன்.”
“புவி நீயேன் லெட்டரை மகி மாமாக்கிட்ட கொடுத்த?” தன் மகனை கூப்பிட்டு கதிரவன் கேட்டார்.
“இல்லப்பா நான் அம்மாக்கிட்ட கொடுக்கறது தான் எடுத்துக்கிட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள மாமாவா வந்து தான் என்கிட்ட லெட்டரை வாங்கிட்டாங்க..” என்றவன், “உங்க சுடர் அக்காவை நான் லண்டனுக்கு போக விடமாட்டேன்” என்று மகி சொன்னதை இப்போது நிலவும் சூழ்நிலை காரணமாக அவன் சொல்லவில்லை.
“அண்ணா.. இவங்கல்லாம் பேசிக்கிறத பார்த்தா, மகி சுடரை பார்க்க ஏர்ப்போர்ட்டுக்கு போயிருக்கனும்னு தோனுது.. இங்க நிச்சயத்தை வச்சிக்கிட்டு மகி இப்படி செய்றது நல்லாவா இருக்கு?” என்று கலை கேட்பதற்கு, புகழேந்தி, பூங்கொடியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதற்குள் பக்கத்து வீட்டு ராமகிருஷ்ணன் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். காலையிலிருந்து இந்த நிச்சயதார்த்ததிற்கென புகழேந்திக்கு உதவியாக இருந்தவர் அவர். விழா ஆரம்பிக்கும் போது வருகிறேன் என்று வீட்டில் இருந்தவர் இப்போது வந்ததை பார்த்தால் வேறு ஏதோ காரணம் இருப்பதாக புகழேந்திக்கு தோன்றியது. அதற்கேற்றார் போல்,
“புகழ் இங்கப் பாரேன்.. நம்ம மகி பத்தி ஒரு விஷயம் வீடியோவில் வந்திருக்கு..” என்று அலைபேசியை காட்டினார். அதில் மகி சுடரிடம் பேச ஆரம்பித்ததிலிருந்து, கழுத்தில் தாலி கட்டும் காட்சி மற்றும் அவன் அறை வாங்கும் காட்சி வரை ஒளிப்பரப்பானது. அடுத்தடுத்து ஒவ்வொருத்தராக அந்த காணொளியை பார்த்தனர். தங்களுக்கென முகநூல் வைத்திருந்தவர்களும் அவர்கள் முகநூல் பக்கங்களிலும் இப்படி ஒரு காணொளி வந்திருக்கிறதா? என்று பார்வையிட்டனர். புவிக்கும் தன் சகோதரன் மூலம் அந்த காணொளியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்க, “அக்கா இனி லண்டனுக்கு போகாது.. மாமா போக விடமாட்டாங்க” என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.
எழிலுக்கும் அந்த காணொளியை பார்த்ததில் மனதில் இனம் புரியாத நிம்மதி வந்து சேர்ந்தாலும், அடுத்து எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகளை நினைத்து அவள் மனதில் பயம் சூழ்ந்தது. அதே கவலையுடன் அவள் கதிரவனை பார்க்க, அவர் மனதில் என்ன இருக்கிறது? என்பதை அப்போதும் அவளால் கண்டுக் கொள்ள முடியவில்லை.
புகழேந்திக்கும் பூங்கொடிக்கும் கூட அடுத்து நிலைமையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் நின்றிருந்தனர். இதில் முத்து பாட்டியிடமும் அந்த காணொளியை காட்ட, “எங்கிருந்தோ வந்து எங்க குடும்பத்துல இப்படி கலவரம் செய்யறாளே!” என்று அவருக்கு சுடரொளி மீது கோபம் இன்னும் அதிகமானது.
“பார்த்தீங்களா? நான் சொன்னது நடந்துதா? என் பொண்ணோட வாழ்க்கையை சுத்தமா அழிக்கன்னு அந்த சுடர் வந்தா போல.. ஏற்கனவே பேச்சளவுள முதலில் என் பொண்ணு கல்யாணம் நின்னுப் போச்சு.. இப்போ நிச்சயதார்த்தம் வரை வந்து நின்னுப் போச்சு.. இனி எப்படி கல்யாணம் நடக்கும்? என்று கலையரசி தான் முதலில் வெடித்தார்.
இங்கு இவ்வளவு பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்க, அங்கே அறையில் தனியாக விடப்பட்டிருந்த அருள்மொழியும் இலக்கியாவும் கதைப் பேசியபடி இருந்தனர்.ப்இரண்டுபேரும் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தன் முகநூல் பக்கத்தில் போடுவதற்காக இலக்கியா முகநூல் பக்கத்தை திறந்த போது தான் அவர்களும் அந்த காணொளியை பார்த்தனர். ஒரு நொடி இருவரும் அதிர்ச்சியாக, அதற்குள் மணிமொழி வெளியில் நடக்கும் விஷயத்தை அவர்களிடம் சொல்ல வந்தாள். அதைக் கேட்டு இலக்கியா பதட்டத்தோடு எழுந்து போக, அருள்மொழியோ அப்போதும் அங்கேயே அமர்ந்திருந்தாள். அந்த காணொளியை திரும்ப திரும்ப ஒளிக்கவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படியோ நிச்சயதார்த்தம் நடக்க போவதில்லை என்பதாலும், இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை அவர்கள் முன்னிலையில் குடும்பத்தார் பேசிக் கொள்ள தயங்குவார் என்பதால், மணி, மலர் வீட்டினரும் கொஞ்சம் நெருக்கமில்லாத உறவினர்களும் கிளம்பிவிட்டனர். புகழேந்தி அமைதியாக அமர்ந்திருக்க, கலையரசி புலம்பிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தவிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.
அப்போது டாக்ஸியும் பைக்கும் ஒன்றாக வந்து வாசலில் நிற்க, மூவரும் இறங்கிய போது வீட்டு வெளியிலேயே தமிழும் புவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் மூவரை பார்த்ததும் புவி அவர்களை நோக்கி செல்ல, தமிழோ வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை சொல்ல சென்றான்.
“மாமா.. ஏர்ப்போர்ட்ல நடந்த விஷயமெல்லாம் ஃபேஸ்புக்ல வந்திருக்கு.. வீட்டுக்கு வந்த கெஸ்ட்ல்லாம் போயிட்டாங்க.. பெரியம்மா உக்கார்ந்து அழுதுகிட்டு இருக்காங்க” என்று அவசரம் அவசரமாக புவி விஷயத்தை சொன்னான். “அதுக்குள்ள மேட்டர் தெரிஞ்சிடுச்சா?” என்று மகியும் அறுவழகனும் அதிர்ச்சியடைந்தனர். புவி சொன்னதைக் கேட்டு சுடருக்கு பயத்தால் உடல் நடுங்க, அவளை அறியாமல் மகியின் கைகளை பற்றிக் கொண்டாள். அவனுக்குமே கொஞ்சம் பயமாக தான் இருந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவளுக்கு ஆறுதல் கூறுவது போல் அவள் பற்றிய கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டான். அப்போது தான் அவன் மேல் கோபமாக இருப்பது நினைவு வந்தவளாக கைகளை விலக்கப் பார்க்க, அவனோ அதற்கு இடம் கொடுக்காமல் பிடித்தப்படியே இருந்தான்.
அறிவழகனோ தன் தந்தையை நினைத்து இன்னும் பயந்தான். மகி செய்த செயலுக்கு தானும் உடன் இருந்ததற்கு அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று மனதிற்கு திகிலாகவே இருந்தது. தைரியத்தை வரவைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அதற்கு முன்பே வீட்டிற்குள் வந்திருந்த தமிழ் தன் அன்னையிடம் சென்று, “அம்மா அக்காவும் மகி மாமாவும் வர்றாங்க..” என்று சொன்னதும் எழில் கொஞ்சம் பதறி தான் போனாள். இருந்தும் சுடரொளியால் மேலும் பிரச்சனைகள் வருவதில் அவளுக்கு கோபமும் வந்தது.