பூபதியைக் குதிரையில் படுக்க வைத்து அவன் ஏறும் போது "நில்!" என்று முகமூடி மனிதனின் குரல் தடுத்தது. "பரணைச் சாய்த்து விடு" என்று அவன் கூறினான். அவனும் கையில் இருந்த வாளால் பரணின் கால்களை வெட்டி அதைச் சாய்த்தான்.
பின் அந்த மூவரையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டார்கள். சம்யுக்தனின் கண்கள் பாதி மூடியபடி திறந்திருந்தன. அவன் ஓர் இடத்தை நோக்கிய படி குதிரையில் படுத்திருந்தான்.
சிறிது நேரத்தில் சண்டை நடந்த இடம் அமைதி ஆனது. எங்கும் அமைதி. அப்பொழுது, மறைந்திருந்த சம்யுக்தனின் குதிரை வெளிவந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
சம்யுக்தனை நினைத்துக்கொண்டிருந்த பூங்கொடியின் மனதில் எண்ண அலைகள் சுழன்று சுழன்று அடித்தன. அவள் உடலைத் தென்றல் தீண்டியும் மனது குளிரவில்லை. படுக்கையில் இருந்த அவள் எழுந்து நடந்தாள். மீண்டும் படுக்கையில் படுத்தாள். தூக்கம் வரவில்லை. கண்களை மூடினாள். ஏதோ கெட்ட கனவு வருவது போலிருந்தது. கண்களைத் திறந்தாள்; எழுந்தாள்; நடந்தாள். இப்படியே செய்து கொண்டிருந்தாள் பூங்கொடி.
அவள் அறைக் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். அவளுடைய தாய் தந்தை தூங்கிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து மெதுவாக ஓசை எழுப்பாது தோட்டத்திற்குச் சென்றாள்.
அங்கே சம்யுக்தன் மண்ணில் வரைந்த ஓவியம் நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். நாழிகைகள் நகர்ந்தன. அவள் கண்கள் அந்த ஓவியத்தில் இருந்து விலகவில்லை. அதையே பார்த்துக்கொண்டிருந்தன.
அப்பொழுது வீட்டின் முன்னே குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்ட அவள், ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்த்தாள். சம்யுக்தனின் குதிரை முன்னங்கால்களைத் தூக்கி அவளைப் பார்த்துக் கனைத்தது.
என்ன இது? இது அவருடைய குதிரை அல்லவா? ஆனால், அவரைக் காணவில்லையே? என்று பூங்கொடி பதறினாள். என்ன செய்வது என்று குழம்பினாள். திடீரென்று அவள் கண் முன்னே மின்னல் வெட்டியது. ஓடிச் சென்று ஓவியத்தைப் பார்த்தாள். அந்த ஓவியத்தில் ஒரு குதிரை தனியே ஓடி வருவது போல் இருந்தது. அதைப் பார்த்து மேலும் திடுக்கிட்டாள்.
சம்யுக்தன் வீசி எறிந்த முத்துமாலை இன்னும் அந்தச் செடியில் தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்தாள். அந்தச் செடியின் அருகே சென்றாள். காற்றில் முத்துமாலை அசைந்து செடியில் இருந்து கீழே விழுந்தது. அதை அவள் எடுத்தாள்.
திடீரென்று ஏதோ தோன்றியது போல் அந்த மண்ணை கைகளால் வாரினாள். அவள் கைகளில் ஒன்று தட்டுபட்டது. அது ஒரு ஓலை. ஆச்சர்யம் கலந்து மணலைத் தட்டி விட்டு ஓடிச் சென்று வீட்டு பூஜை அறையில் இருக்கும் தீபத்தின் வெளிச்சத்தில் அந்த ஓலையைப் படித்துப் பார்த்தாள். சம்யுக்தன் எழுதிய ஓலை தான் அது. அவன் அவளுக்காக எழுதி இருந்தான்.
"நான் காவல் புரிந்த இடத்திற்கு இளவரசரையும் படையையும் அனுப்பவும்!"
பூங்கொடி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
தொடரும்...
{kunena_discuss:1135}