தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 07 - பூஜா பாண்டியன்
யார் இந்த காப்ரிலா? என்று உத்ரா யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, அவள் அபிக்கு கை அசைத்து காட்டிய படி தள்ளியிருந்த ஒரு சொகுசு காரில் ஏறி சென்று விட்டாள்.
அப்பொழுதும் நம்பிக்கை இழக்காமல், மனதிற்குள், என் காதலின் அளவை சோதிக்கின்றாயா கிருஷ்ணா? என்று கடவுளிடம் சண்டை இட்டபடி, எதோ பாலை வனத்தின் நடுவே நின்று, சோலையை தேடுவது போன்று, அபியிடம் இருந்து “அவள் என் தோழி தான்” என்ற ஒற்றை வாக்கியதிற்காக, அவனை நோக்கி நடக்க துவங்கினாள். அவளது அவசரம் புரியாமல், கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு, அவளை தாமதப் படுத்தியது.
அபியை நெருங்கியதும், “யார் அது அபி?” என கேட்ட பொழுது, அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“என் முன்னாள் காதலி” என்ற அபி, உதட்டோர புன்னகையுடன் கூறிவிட்டு, அவள் முகத்தை பார்த்த பொழுது, உத்ரா கண்கள் சொருக, நிலத்தில் சரிந்து கொண்டு இருந்தாள். ஓடிச் சென்று அவளை தாங்கிய பொழுது, முழுவதும் மயங்கி அவன் மேலே சரிந்தாள் உத்ரா.
உத்ரா, கண் விழித்த பொழுது, அவர்கள் வீட்டின் படுக்கையில் இருந்தாள். தலை வின், வின் என்று வலித்தது. வாய் கசந்து காய்ச்சலில் உடல் கொதித்தது. இவ்வளவு நாள் பெரிதாக தெரியாத இந்த அமெரிக்கா குளிர், இன்று எலும்பு வரை சென்று, குளிர் ஜுரமாக மாறி இருந்தது.
இரண்டு நாள் உத்ரா கண் விழிக்கவே இல்லை. அபிமன்யு கூட கொஞ்சம் பயந்து தான் போனான். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்துக் கொண்டே, உத்ராவையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டான்.
அவனது நண்பனின் மனைவி மருத்துவராக இருந்ததால், வீட்டிற்கே வந்து பார்த்து, சாதா காய்ச்சல் தான், ஊருக்கு எல்லாம் சென்று அலைந்து வந்ததால் இருக்கும், என்று கூறி அவர்களிடம் இருந்த மாத்திரைகளையே கொடுக்க சொல்லி சென்றார். அங்கெல்லாம், டாக்டரை பார்க்க வேண்டும் என்றால், முன் பதிவு செய்து, ஒரு வாரம் காத்திருந்து தான், மருத்துவரையே பார்க்க முடியும். அதற்குள் நமக்கு வந்த காய்ச்சல் சரியாகியே விடும். நல்ல வேலையாக அவனது நண்பன் அர்ஜித் சிங்கின் மனைவி நீத்து சிங்கே மருத்துவராக இருந்ததால், வசதியாக போயிற்று.
இரண்டு நாள் கழித்து கண் விழித்த உத்ரா, அவனிடம் அதிகம் பேசவில்லை. அவளுக்கு அசதியாக இருக்கும் என்று அபியும் அவளை ஏதும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை.
கேப்ரிலா பற்றி எதுவும் கேட்பாள் என்று நினைத்ததும் நடக்கவில்லை. பெரிதாக சண்டையை எதிர் பார்த்தான், அதுவும் இல்லை. ஆனால் அவளிடம் ஒரு விலகல் தெரிந்தது. மறுநாளில் இருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தான் அபி.
ஒரு வாரம் கழித்து அலுவலகம் சென்றதால், அதிக வேலையின் காரணமாக, வீட்டிற்கு சீக்கிரம் வர முடியாமல் சற்று தாமதமாகவே வந்தான். காரில் இருக்கும் ரிமோட் மூலமாகவே திறந்து காரை கராஜில் விட்டு உள்ளிருக்கும் கதவின் மூலமாகவே வீடிற்குள் வருவதால், யாரும் வந்து கதவை திறந்து விட தேவையே இருப்பதில்லை.
அவ்வாறு உள்ளே வந்த பொழுது, சாப்பாட்டு மேசையின் மேல் இரவு உணவு இருந்தது. சாப்பிட எதுவாக ஒரு தட்டு மட்டுமே இருந்தது. உத்ரா சாப்பிட்டு உறங்க சென்று விட்டாளா? என்று எண்ணியபடி, அவர்கள் அறைக்கு சென்று பார்த்த பொழுது, உத்ரா அங்கு இல்லை என்றதும் சற்று பயம் கூட வந்தது. எங்கு சென்றிருப்பாள், என்று யோசித்த படி அடுத்த அறை கதவை திறந்து பார்த்த பொழுது, அங்கிருந்த படுக்கையில் படுத்து இருந்தாள் உத்ரா.
அருகில் சென்று பார்த்த பொழுது, நன்கு உறங்குவது போல் தெரிந்தது. அபியும் அவளை தொந்தரவு செய்யாமல் உடை மாற்றி, கீழே சென்று உணவருந்தி, உறக்கம் வராவிட்டாலும், உத்ரா இருந்த படுக்கை அறைக்கு சென்றான். ஐ பேடில், ஹெட்போனை மாட்டி, இன்டர்நெட்டில் தமிழ் நாட்டு செய்தி சானலை பார்த்தபடி படுக்கையில் சாய்ந்து படுத்தான் அபி.
அவன் படுக்கையில் படுத்த அடுத்த நொடி, டக்கென்று எழுந்தாள் உத்ரா. “இங்கு எதுக்கு வந்தீங்க?, உங்க ரூமில் படுக்க வேண்டியது தானே” என்று எங்கோ சுவற்றை பார்த்தபடி பேசினாள் உத்ரா.
“ஹேய் என்னடா, நீ தானே உனக்கு தனியா படுத்தால் பயமாக இருக்கும், என்று சொல்லி இருக்க. அதனால் தான் உனக்கு துணைக்கு படுக்க வந்தேன்” என்று கூறியதைக் கேட்டு எரிச்சலுற்றாள் உத்ரா.
“அது அப்போ. இப்ப தான் எனக்கு வீடு பழகி விட்டதே, அதனால் நான் தனியா படுத்துக் கொள்வேன்.” என்றாள்.
“எனக்கு பயமாக இருக்குமே, அதனால் நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன்” என்றான் அபி.
“என்னை கடுப்பேத்தாதிங்க அபி. நீங்க தானே முதலில் என்னை இந்த அறையை பயன்படுதிக் கொள்ள சொன்னீங்க?”
“நான் தான் சொன்னேன், ஆனால் இப்போ நிலைமை வேற மாதிரி ஆகிடுச்சே”
“இப்போ உள்ள நிலைமைக்கு என்ன கேடு வந்தது?” என்று கேட்டாள் எரிச்சலுடன்....
“உன்னோட அப்பா, அம்மாவை அப்படி சொல்லக் கூடாதுடா”
“அப்பா , அம்மாவை நான் ஏன் அப்படி சொல்லப் போறேன்.”