“என்ன படிக்கலாம்னு யோசிச்சியாடா?
“அது ஷ்யாம் அத்தான் கிட்டே கேட்கலாம்னு நினைச்சேன்..”
“ஹ்ம்ம். சரிடா.. ஆனால் இந்த இடம் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்காங்க.. அவங்க வந்து பார்க்கட்டும். உனக்கும் பிடிச்சு, அவங்களுக்கும் பிடிச்சா மேற்கொண்டு பேசலாம். அப்படி இல்லைனா நீ உன் விருப்பம் போல் செய்”
“சரிப்பா.. ஆனால் வர பையன் எனக்கு பிடிக்கலைன்னா நீங்க கட்டாயபடுத்த மாட்டீங்க தானே”
“நிச்சயமா.. ஆனா ஒரு நிபந்தனை.. அவங்கள பார்க்கும் முன்னாடி நீ எந்த எதிரான எண்ணமும் வச்சுக்க கூடாது “
“ஓகேப்பா. நீங்க என்ன சொல்றீங்களோ செய்யுறேன்.“ என்று கூறிவிட, சபரி, முரளி இருவரும் அவளை அணைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டனர்.
விஷயம் முதலில் அஷ்வினுக்கு தெரியபடுத்தபட, அவன் மகிழ்ச்சி அடைந்தாலும், தன் தங்கையிடம் அவன் பங்கிற்கு பேசி உறுதி படுத்திக் கொண்டான்,
பிறகு சபரியின் அண்ணன், அண்ணியான ராம், மைதிலிக்கும், சபரியின் அத்தை மகனாக இருந்தாலும் உடன் பிறந்தவனை போலேவே என்னும் சந்தோஷ் மற்றும் அவன் மனைவி ஸ்ருதிக்கும் விஷயத்தை சொன்னார்கள்.
ஷ்யாம் வெளிநாட்டில் இருந்ததால் இந்த இடம் நல்லபடியாக முடிந்தால் அவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர்.
மித்ராவின் சம்மதம் கிடைத்த பின் , சபரியின் கணவன் முரளி மாப்பிள்ளை வீட்டினரிடம் பேச, அவர்கள் பெண் பார்க்க வருவதாக கூறி இருந்தனர்.
அவர்களிடம் இருந்து தகவல் வந்ததும் ராமின் அப்பாவிற்கும் சொல்லி விட, அவரும் ஊருக்கு சென்று இருந்தவர் தன் மனைவியோடு வந்து விட்டார்.
மித்ராவின் பெற்றோர் மட்டுமின்றி மொத்த குடும்பமே இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்தது.
சபரிக்கு எல்லோரையும் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ராம் மற்றும் மைதிலியின் ஆலோசனைப்படி மித்ரா வீட்டினரை தவிர குடும்பத்திற்கு பெரியவர்களான முரளியின் பெற்றோர் மற்றும் சபரியின் பெற்றோர் மட்டுமே இருந்தனர்.
மித்ராவிற்கு இதமாக இருக்க, சைந்தவி வந்து இருந்தாள். சுமித்ராவிற்கு எக்ஸாம் இன்னும் நடப்பதால் அவளை டிஸ்டர்ப் செய்யவில்லை.
மித்ராவை பெண் பார்க்க வந்த குடும்பம் முரளியின் ஊரான மதுரையில் நல்ல செல்வாக்கானவர்களே.
அவர்கள் மொத்தம் ஐந்து கார்களில் வந்து இருக்க, மாப்பிள்ளை குடும்பத்தோடு, அவர்களின் சகோதரர்கள் முறையில் இருந்தவர்களும் வந்து இருந்தார்கள்.
முதலில் சற்று திகைத்தாலும் சபரி, முரளி இருவரும் சுதாரித்து அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.
மித்ராவிற்கு பார்த்த மாப்பிள்ளையான சரவணனின் அம்மா
“வணக்கம்மா.. என்னடா இத்தனை பேர் வந்து இருக்காங்களேன்னு நினைச்சுக்காதீங்க. எங்க வீட்டில் எல்லோருக்கும் பெண்ணை பிடிச்சுதுன்னா இன்னைக்கே உறுதி பண்ணிரலாம்னு தான் முக்கியமான சொந்தக்காரங்கள கூட்டிகிட்டு வந்துட்டோம். நாள பின்ன ஒரு பேச்சு வந்துரக்கூடாது பாருங்க” என்று கூற,
சபரியின் மாமியார் “அதுக்கென்னங்க? நல்ல காரியம் தானே “ என்று பதில் சொல்லிவிட்டார்.
சபரிக்கோ இத்தனை பேரை எப்படி சமாளிக்க என்று கவலையாகி விட்டது. சபரியின் அம்மா கெள்சல்யாதான் கொஞ்சம் இனிப்புகளை முதலில் ஒரு முறை கொடுத்து விட்டு வர சொல்லிவிட்டு , காரத்திற்கு வேறு ஏற்பாடு செய்து எல்லோருக்கும் டிபன் கொடுத்து முடித்தனர்.
பின் மித்ராவிடம் காபி ட்ரே கொடுத்து அனுப்ப, சற்று தயங்கினாலும், முதல் நாளே சபரி என்ன என்ன செய்யவேண்டும் என்று கூறி இருந்ததால் அவர் சொல்படி செய்தாள்.
காபி கொடுத்த மித்ராவை பார்த்த அந்த சரவணனுக்கு அவளை மிகவும் பிடித்து விட, மெதுவாக தன் அன்னையிடம் தெரிவித்து விட்டான்.
அவனின் அன்னை மற்றும் தந்தை இருவரும் நேரடியாக முரளியிடம் பேச ஆரம்பித்தனர்.
“எங்களுக்கு பெண்ணை பிடிச்சு இருக்கு? எப்போ நிச்சயம் வச்சுக்கலாம்?
“ரொம்ப சந்தோஷம். ஆனால் எங்களுக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. நாங்க எங்க வீட்டில் கலந்து பேசிட்டு சொல்றோம்” என்று முரளி கூற,
அவனின் அன்னையோ “இதுலே கலந்து பேச என்ன இருக்கு முரளி? நம்ம ரெண்டு வீட்டு பெரியவங்களும் இங்கே தான் இருக்கோம். பையன் பிசினஸ் பத்தி படிச்சு இருக்கான். அவங்க தொழில் விவரம் தெரியும். நேர்லயும் பார்த்தாச்சு. இப்போவே சொல்லிடவேண்டியதுதானே” என்று இடையிட,
சற்று மெல்ல தன் அன்னையிடம் “அம்மா.. மித்ராவிற்கு பிடிச்சு இருக்கானு கேட்கவேண்டாமா? “
“அத இப்போவே கேட்கவேண்டியதுதானே”
“எல்லோரும் இருக்கும் போது எப்படி கேட்க முடியும்? அவளிடம் மெதுவாகத்தான் கேட்கணும்”
“எல்லா விவரமும் அவகிட்ட சொன்னபின்னடிதானே அவங்கள வர சொன்ன. அப்போ நேர்லே உருவத்தை பார்க்கிறது தான் பிரச்சினை.. அதுவும் முடிஞ்சிட்டு.. வேறே என்ன? இதோ நானே கேக்கறேன்.. அம்மாடி மித்ரா.. உனக்கு இந்த பையன பிடிச்சு இருக்க?” என்று எல்லோர் எதிரும் கேட்க,
என்ன சொல்ல என்று புரியாத மித்ரா “பிடிச்சுருக்கு” என்று கூறி விட, சபரி முரளி இருவருக்கும் சந்தோஷம் என்றாலும், அவளுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்து இருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தது. அது ஏன் என்று அவர்களுக்கே தெரியவில்லை
தொடரும்
{kunena_discuss:1187}