30. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
கண்விழித்தவளுக்கு மலர்ந்த முகத்தோடு காட்சியளித்தான் ஜெய். இரவின் ஆதரவான வார்த்தைகளும், பாதுகாப்பளித்த அவனுடைய இறுகிய அணைப்பும், பயத்தை துரத்தியிருக்க...விரிந்த இதழ்கள், “குட் மார்னிங்க் சஞ்சு!” தூக்க கலக்கத்தில் மெதுவாக முணுமுணுக்க...
“குட் மார்னிங்க் சரூ!” உற்சாகமாக சொன்னாலும் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தான்.
கேள்வியாக பார்த்தவளுக்கு தானாக வந்தது பதில்,
“சீக்கிரமா குளிச்சிட்டு வாடா சாப்பிட்டுட்டு கிளம்பனும்.. க்விக் க்விக் அப்போதா சரியான நேரத்துக்கு போக முடியும்”
“எங்க போறோம் சஞ்சு?” ஆவலாக வினவ..
கட்டிலருகே வந்தவன், “எங்க போறோம்னு உனக்கு தெரியாமலா? நீ முதல்ல எழுந்து ஃப்ரெஷ் பண்ணிட்டு வருவியாம்...” அவள் இடது கையை பற்றி எழுப்ப...
“எங்கனு சொன்னாதா வருவே” அவள் பிடிவாதத்தில் முகம் இறுக அவளை தன்னோடு சேர்த்து பிடித்து...
“டாக்டர் நீலா வேந்தனை பார்க்க போறோம்” என்றவனின் குரலின் வித்தியாசத்தில் யோசனையாக தலை நிமிர்த்தி பார்க்க..
நீலா வேந்தன மிகப் பிரசித்தி பெற்ற மனநல மருத்துவர். அவ்வப்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மக்களோடு கலந்துரையாடி அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் விளக்கமளிப்பார். இவள் கூட ஓரிரு முறை அந்த நிகழ்ச்சியை பார்த்ததுண்டு. இருந்தாலும் அவரை ஏன் பார்க்க வேண்டுமென்ற கேள்வி..
ஆதுரமாக தலையை தடவிட, “எதுக்கு?”
‘கேள்வி கேட்காம எதையும் செய்றதில்ல. அதே நாம கேள்வி கேட்டா பதில் சொல்றதில்ல’ எரிச்சலுற்றவன்
“வேறென்ன செய்ய சொல்ற? எத்தனை முறை கேட்ட, வாயை திறந்தியா? எல்லாத்தையும் மனசுல வச்சுக்கிட்டு அவஸ்தை படுறியே கண்டா ஒரு வார்த்தை இது தான் பிரச்சனைனு சொன்னாதா என்னடி? நைட்டு நீ கத்தினதுல உயிரே போச்சு! தினம் தினம் நீயும் செத்து பிழச்சு, என்னையும் கொல்றதுல என்ன சந்தோஷமோ? சொல்லுடி என்ன நடந்தது?” கோபத்தில் ஆவேசமாக அவளை உலுக்க... தலை தாழ்ந்தது.
“ம்ஹீம்...சொல்ல மாட்டல்ல...நீ சொல்ல மாட்டல்ல...” கண்களை மூடி திறந்தவன், “எங்கிட்ட சொல்ல வேணா! ஒழுங்கு மரியாதையா கிளம்பு, டாக்டரிட்ட போவோம்....அவங்க கேள்வி கேட்பாங்க, அப்பவாவது பேசித் தொலைக்கிறீயா பார்க்கலாம்”
சட்டென எழுந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்தவள், “சபாஷ்! கடைசில என்னை பைத்தியமாக்கி, நீ நினைச்சத சாதிச்சிட்ட! பழிவாங்க நினைச்ச பாம்பு தானே நீ! அதான் சந்தர்பத்துக்காகக் காத்திட்டிருந்திருக்க...இது தெரியாம என்னென்னவோ கனவு கண்டனே... நான் ஒரு முட்டாள்! அன்னைக்கு மன்னிப்பு கேட்கவும், நீ மாறிட்ட... பழசையெல்லாம் மறந்து மனசு திறந்து பேசினனு நினைச்சது தப்புதா...”
கண்களில் எரியும் கோபத்தீயில் முகம் சிவந்திருக்க...ஆவேசத்தில் உதடு துடிக்க, அவனை கொன்றுவிடும் உக்கிரத்தை பறைசாற்றிய அவளின் கைகளின் இறுக்கத்தை சட்டையில் உணர்ந்தவன் திகைத்து போனான்.
இத்தனை நாட்களாய் இவன் வெளிகொண்டு வர நினைத்த சரயூதான்! ஆனால் இவனை பற்றிய அவளுடைய நினைப்பு என்னவாம்? பழிவாங்குகிறானாம் அவளை...அதுவும் சரியான தருணத்திற்காகக் காத்திருந்து பழிவாங்குகிறானாம்..
‘என்னிடம் சொல்லாம மனசுல வச்சு மருகுறதை டாக்டரிட்ட சொன்ன பிறகாவது உன்னோட இயல்புக்கு திரும்பிவியோனு... நினைச்சத தப்பா புரிஞ்சுக்கிட்டு, ஏன்டி இப்படியெல்ல பேசுற? உன்னை பைத்தியமாக்கிட்டு நான் என்ன செய்ய? அப்படியே செய்தாலும் அதுக்கு பிறகு என்னோட வாழ்க்கை என்னனு ஒரு நிமிஷம் யோசிச்சியா? என்னோட உலகமே நீதானே சரூ! நீயில்லாம நானில்லைனு உனக்கு புரியலையா? என்னோட காதலை நீ உணரவேயில்லையா? இல்லை அதை கூட உனக்கு உணர்த்தாம போயிட்டேனா இந்த பாவி!’
“ஏன், நடந்தது உனக்கு தெரியாதா என்ன? திட்டம் போட்டு, பக்கவா காய் நகர்த்தின உனக்கு தெரியாமதா இருக்குமா? அது சரிதா...திட்டத்துல சின்ன சருக்கல்... நீ நினைச்சது நடக்கலை! எங்க தப்பா போச்சுன்னு என் வாயாலயே தெரிஞ்சுக்கனும்...அப்போ தானே அடுத்த முறை ப்ளான் போட்டா இன்னும் பக்கவா பண்ணமுடியும்!” ஏளனத்தை ஒட்டுமொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்த அவள் முகமும் குரலும் இவனுள் ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணியது.
“என்னவோ நடந்ததை முதமுதலா தெரிஞ்சுக்க முயற்சி செய்ற மாதிரி என்னவெல்ல பண்ணுற? எப்படியெல்லா நல்லவனா நடிக்கிற? நான் கூட அந்த நடிப்புல கொஞ்ச மயங்கிட்டேன்னா பாரே! அந்த வகையில கண்டிப்பா உன்னையும் உன் நடிப்பையும் பாராட்டியே ஆகனும்! ஆனா ஒரு விஷயத்தை நீ மறந்துட்ட சஞ்சய்! எங்கப்பா அடிக்கடி சொல்லுவாங்க நல்லது நினைக்குறவங்களுக்கு நல்லதே நடக்கும்னு. அவர் சொன்னப்போ புரியாதது... உன்னோட சூழ்ச்சில மாட்டி இன்னமும் உனக்கே சவாலா நிற்கிறேனே, இப்போ புரியுது!” ஏளனம் மறைந்து உண்மையின் நிமிர்வோடு நின்றவளின் சிவந்த முகத்திற்கு காந்தி சேர்த்த புன்னகை கீற்றை ரசிக்காமல் இருக்க முடியவில்லை பாழும் மனதால்.