‘சரூ! என்னம்மா என்னென்னவோ பேசுற? என்னால உனக்கு கெடுதல் நினைக்க முடியுமா? என்னோட காதலை நடிப்புன்னு சொல்லாதடா! ரொம்ப வலிக்குது! இத்தனை வருஷத்துல என்னோட காதல் உண்மைனு ஒரு முறை கூடவா தோனலை?..................”
கனத்த மனதை தூக்க முடியாது உடல் சோர்வை உணர்த்த, தளர்ந்த நடையோடு ரிசார்ட்டிலிருந்து வெளியேறினாள் சரயூ.
ஊருக்கு ஒதுக்கு புறமாக பெருமிடத்தை வளைத்து கட்டபட்டிருந்தது அந்த ரிசார்ட். இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கும் ஊரின் அந்த பகுதியில் அதிகமான போக்குவரத்து வசதியோ, ஆள் நடமாட்டமும் கிடையாது.
அவளிருந்த மனநிலையில் இதெதைப் பற்றியும் யோசிக்காது அங்கிருந்து கிளம்பிவிட்டவளுக்கு, இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால் தான் ஆட்டோவோ பஸ்ஸோ கிடைக்கும் என்பதெல்லாம் அறிவுக்கு எட்டவில்லை.
துக்கம், இயலாமை, கோபமென வேக எட்டுக்களை வைத்து நடந்து கொண்டிருந்தவளுக்கு வெகு அருகில் வந்து நின்றது அந்த கார்.
இவள் சுதாரித்து திரும்புவதற்குள் வண்டியிலிருந்து இறங்கி வந்திருந்தான் கிரண்.
“ஹாய் சரயூ!” என்று கூவியவனின் உற்சாகம் இவள் முகத்தை கண்டதும் வடிந்துவிட,
“என்னாச்சு சரயூ? ஏன் உன் முகமெல்லாம் வேர்த்திருக்கு?” துடைத்திட கையை நீட்டவும், தலையை பின்னுக்கு இழுத்து கொள்ள...
“சாரி...சாரி...இந்தா துடைச்சுக்கோ” என்று கைகுட்டையை தர...
“பரவாயில்ல இருக்கு!” என்றாளே தவிர முகத்தை துடைக்கவில்லை.
“இந்தா தண்ணியாவது குடி” அவன் கொடுத்த நீரை மறுக்காது குடித்தாள்.
அது சற்று நிதானத்தை தர, கண்கள் இப்போது சுற்றும் முற்றும் பார்த்து வைக்க... இவர்களை தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட தென்படவில்லை.
‘ச்சே...கொஞ்ச கூட யோசிக்காம என்ன செஞ்சு வச்சிருக்க? திரும்பி போயிடலாமா? ம்ஹீம்...அவன் முகத்துல முழிக்குறதா? வேணா வீட்டுக்கு போகலாம்’
வெள்ளை நிற பார்ட்டி வேரும் (party wear), அழகான வேலைபாட்டுடன் இருந்த கைப்பையையும் கண்டவனுக்கு இவள் நடுரோட்டில் நின்றிருப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
“கடைக்கு ஏதும் போகனுமா? என்ன வேணும்னு சொல்லு, நான் வாங்கிட்டு வரேன்”
நடந்ததை அவனிடம் பகிர முடியாமல், அவன் கேட்டதை தனக்கு சாதகமாக்கினாள். கடைகள் இருக்குமிடத்தில் தான் பேருந்து நிறுத்தமும். அதனால்,
“இல்லை கிரண்! நானே வாங்கிக்குற... என்னை கொஞ்ச கடைத்தெருல விட்றியா?”
“கண்டிப்பா! வா போகலாம்” என்றபடி அவன் டிரைவர் சீட்டில் உட்கார, இவள் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள்.
இப்போது கிளம்பினால், காலையில் வீட்டை அடைந்திடலாம். ஆனால் எடுத்துவந்த பெட்டியில்லாமல் வெறுங்கையில், அதுவும் இந்த உடையில் போய் நின்றால், சாரதாவின் கேள்விகளை எப்படி சமாளிப்பது?
சமுதாயத்தோடு ஒத்து வாழ் - என்பதில் நம்பிக்கையுடைய சாரதா, மேற்கத்திய ஆடை அணிகலன்களை ஆதரிப்பவர். அதே சமயம் அது மற்றவரை முகம் சுளிக்க வைக்க கூடாதென்பதை மகளுக்கு தெளிவாக கற்றுவித்திருந்தார். அப்படியிருக்க அவள் ஆடையில் பிரச்சனையில்லை. ஆனால் பார்ட்டி வகை உடையை பயணத்தின் போது உடுத்தியிருந்தால்...ஏன் என்ற கேள்வி வருமே... அதை தான் எப்படி சமாளிப்பது? யோசனையில் மூழ்கியிருக்க... கார் நின்றிருந்தது.
“தாங்க் யூ கிரண்!” என்றுவிட்டு இறங்க...
அவ்விடத்தில் சேர்ந்தார் போல் நான்கு கடைகளை பார்ப்பதே பெரிது! இப்போதோ எல்லாம் அடைக்கப்பட்டிருக்க... ஆட்களிலில்லாத சிறு டீக்கடை மட்டுமே திறந்திருக்க... இவள் எதை வாங்குவாள் என்று அங்கேயே நின்றுவிட்டான் கிரண்.
பஸ்ஸிற்காக வந்தவள் சென்று நிறுத்ததில் நின்றுகொண்டாளே தவிர சுற்றுபுறத்தையும் கிரணையும் கவனிக்கவில்லை.
அந்த டீக்கடையில் டீயை குடித்துமுடித்தவன், இவளுக்கு ஒரு டீயை வாங்கி வந்து நீட்டினான்.
கையில்லாத ஆடையில் குளிர் அவளை பதம் பார்த்திருக்க, ஆவி பரந்த அந்த டீயை மறுக்காது வாங்கி, ஒரு வாய் பருகியவள்...
“டீயா?” முகத்தை சுளிக்க
“சாரி...உனக்கு காஃபிதான் பிடிக்குமில்ல!”
ஆமென தலையசைத்தாலும், மீதமிருந்த டீயை வீணாக்காது குடித்துமுடிக்க...
“இதை குடிக்கவா கடைத்தெருக்கு வந்த?” நீ இதற்கு ஆமென்று சொன்னாலும் நான் நம்ப போவதில்லை என்பதாக அவளை பார்த்து வைக்க...
சில நொடி தயக்கத்திற்கு பின், “இல்ல... நான் பெங்களூருக்கு போகனும். அதான்.....”