எத்தனை பெரும் ஆபத்தில் சிக்கித் தப்பித்திருக்கிறாள் தன்னவள் என்ற நினைப்பு கோபத்தை தணித்து இரக்கத்தை சுரப்பிக்கிறது. அவனைக் கொன்று தப்பித்தவள், அது நடக்காது தன்னை மாய்த்து கொண்டிருந்தால்? கால்கள் தள்ளாட அருகிலிருந்த சோபாவில் சொத்தென விழுந்திருந்தான்.
அந்த சத்ததில் தெளிந்தவள், கண்களை துடைத்து கொண்டு இவனை பார்க்க...
அவன் கண்களில் அப்படியொரு வலி!
பார்த்தவளுக்கு அது உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்ற காதல் கொண்ட மனதின் ஏக்கமும்... இன்னமும் தன்னை ஏமாற்றுகிறானே என்ற கோபமும் ஒருசேர எழுந்திட...
“கொஞ்ச நேரம் முன்னாடி நான் சொன்னதை பொய்யாக்காம உன்னோட நடிப்பை மறுபடியும் நிரூபிச்சிட்ட சஞ்சய்! இதை நீ மேடையில ட்ரை செய்தீனா, நல்ல பேரும் புகழும் கிடைக்கும். ச்சே...ச்சே....நான் ஒரு பைத்தியம்! அதெல்லாம் சாதாரண மனுஷங்களுக்கு தோனுற எண்ணம். உனக்கு எல்லாமே வேற லெவெலில்ல?!” நிறுத்தி அவன் கண்களை கூர்ந்தபடி, “பாரேன் உன்னோட மிஷன் சுலபமாகிடிச்சு.... நானே என்னை பைத்தியம்னு சொல்லியாச்சு! அடுத்தென்ன? டாக்டரும் இதையே சொல்லனும், அவ்வளவு தானே?” என்று நெற்றி சுருக்கி யோசித்தவள், ஆடையை ஆங்காங்கே கிழித்துவிட்டாள்....
“கம் ஆன் சஞ்சய்! இப்படியே டாக்டரிட்ட போனா... உடனே நீ நினைச்சது நடந்திரும்! வா...வா...” அவன் கையை பற்றி அழைக்க... சுண்டி இழுத்ததில் அவன் மேல் விழுந்திருந்தவள், நடந்ததை உணருமுன்னே, வலது கை இடையை வளைத்து இறுக்க, இடது கை பின்னந்தலையை அழுத்தி அசையவிடாது பிடித்திருக்க...இதழ்கள் அவன் வசமாகியிருந்தன.
மார்பில் குத்தி, கன்னங்களை அறைந்து, தலைமுடியை இழுத்து, கால்களை ஸோஃபாவில் உந்தி திமிறியவளின் எல்லா முயற்சியும் தோல்வியுற, காதல் கொண்ட மனம் மெல்ல விழித்து கொள்ள, கண்களில் அருவி.
மானங்கெட்ட மனமே! அவன் உனக்கு செய்த கொடுமைகளை அறிந்தும், அவனிடம் மயங்குகிறாயே! உண்மையான காதலுக்கு இருக்க வேண்டிய சக்தி இங்கெப்படி சாத்தியம்?! வியந்தவளுக்குள் இவன் காதல் உண்மையோ என்ற கேள்வியும் இல்லையென்பதற்கான சாட்சிகளும் ஒரே சமயத்தில் எழுந்தாட அழுகை முட்டிக்கொண்டு முன்னேறியது.
பெண்மையை காத்துகொள்ள அவளின் போராட்டமும், கிரணின் நம்பிக்கை துரோகமும், அதில் அவள் உயிர் பிரிந்திருந்தால் என்ற இவன் உயிர்க் குடிக்கும் வேதனையும், யாருடைய சூழ்ச்சியாலோ பொய்யாக்கப்பட்ட அவன் காதலை அவளுள் உண்மையென உயிர்த்தெழ செய்திடும் வேகமும் ஜெய்யை முரடனாக மாற்றியிருந்தது. அவள் வாய்வழி வெளிவந்து நெஞ்சை கிழித்த வார்த்தைகளுக்கு அவளின் வாயையே வடிகாலாய் மாற்றியிருந்தான்.
எத்தனை மணித்துளிகள் கடந்தனவோ தெரியாது... மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்தவன், இடம் வலமாக தலையசைத்து, கண்களில் வழிந்த நீரை துடைத்து, ‘அழக்கூடாது!’ என்றான் பார்வையால்.
சிவந்து தடித்திருந்த அவள் கண்களுக்கு மென்மையான முத்தத்தை பதிக்க... அது அவளின் உயிரைத் தீண்டிச் செல்ல, “இப்போ சொல்லுடா! என் காதல் பொய்னு உனக்கு இப்பவும் தோனுதா?” கேட்க... இமைகளை மெதுவாக பிரித்து, ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் சுமந்திருந்த அவன் கண்களை சந்திக்க முடியாது ஏதோ செய்ய... அவள் சம்மதமின்றியே தலை இடவலமாக அசைந்து அவனை குளிர்வித்தது.
சற்று முன் கோபத்திலும், வருத்தத்திலும், ஒருவகை இயலாமையிலும் அவன் சிறைப்பிடித்திருந்த இதழ்களை இப்போது மகிழ்ச்சியில் விழுங்கிகொண்டான்.
சிறிது நேரம் கழித்து, அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் விலக, “என்னடா?” அந்த நேர சுகத்தை இழக்க விரும்பாது கேட்டிட... அவனிடமிருந்து பிரிந்து எழுந்தவள், எதையோ தேடினாள்.
‘என்ன தேடுறா?’ கேள்வியோடு பார்க்க...
கைபேசியை எடுத்து, காணொலி ஒன்றை ஓடவிட்டு, அவனிடம் கொடுத்தவள் அறையைவிட்டு வெளியேறினாள்.
“அந்த ஸ்கூல்ல அத்தனை பேர் முன்னாடி என்னை மாட்டிவிட்டு அசிங்கபடுத்திட்டா! அவளை பழித்தீர்க்கதான் இந்த காலேஜுக்கு வந்த... இன்னைக்கு அவளை ப்ரபோஸ் பண்ண போற மச்சா! அதை அவள் அக்செப்ட் செய்யட்டும்....அப்றம் அவளை என்ன செய்றேனு பாரு! வாழ்நாள் முழுக்க சரயூவை ஓடவிட்டு ரசிக்கனும்! அவளோட நிம்மதியை கெடுத்து அவளை தற்கொலைக்கு தூண்டனும்... ஆனா சாகக்கூடாது... செத்துட்டா அவள் நிம்மதியா போய் சேர்ந்திருவாளே... நான் உயிரோட இருக்க வரைக்கும் அது நடக்காது! அவளை நம்ப வச்சு அடிக்கனும் மச்சா... அதுக்கான முதல் படிதா இந்த காதல் நாடகம்”
அந்த காணொலியை பார்த்தவனிடம் அதிர்ச்சியும், ஆத்திரமும்...
இருக்காதா பின்னே! அவன் காதல் நாடகமென்று அவனே சொல்ல கேட்டவனுக்கு வேறெப்படி இருக்குமாம்?
இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களில் இத்தொடர் நிறைவுபெறும்.
அப்பாடா... ஒருவழியா முடியபோகுதுனு நீங்க சொல்றது எனக்கு கேட்குது. இதுவரைக்கும் நான் கிறுக்கினதையெல்லாம் பொறுமையா படிச்சு, கமெண்ட் போட்டு... இந்த மூஞ்சுக்கு கமெண்ட் ஒன்னுதா குறைனு கமெண்டு போடாமலும் போன எல்லாருக்கும் நன்றி மீதமிருக்கும் எபியையும் மறக்காம படிச்சிட்டு கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்கனா எனக்கு சந்தோஷமா இருக்கும்
இந்த எபி எப்படியிருந்ததுனும் கண்டிப்பா சொல்லுங்க. ஏதாவது கேள்விகளிருந்தாலும் கேளுங்க. அப்போதா நான் எதையாவது மிஸ் செய்திருந்தாலும், அதை சரி செய்ய முடியும்.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}