நிலவொளி இருப்பினும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கடியில் இருளின் தாக்கம் அதிகமே. அதிலும் இதுவரை பழக்கபடாத ஒரு காட்டில் ஓடுவது சுலபமாக இருந்திடுமா என்ன? எதிலாவது கால் இடறி விழுந்துவிட்டால் அவன் கைகளுக்குள் சுலபமாக சிக்கிவிடுவாளே. அதனால் மிகவும் கவனமாக ஒவ்வொரு எட்டையும் வைத்துக்கொண்டிருந்தாள்.
அப்படி சரிந்திருந்த ஒரு பெரிய மரத்தை இவள் தாண்டி ஓடியிருக்க, துரத்தி வந்த கிரண் கால்கள் அதனடியில் மாட்டிக்கொள்ள மரத்தின் மேலேயே விழுந்தான்.
மூக்குடைந்து இரத்தம் வழிய, வலது புருவத்திற்கு மேல் நெற்றியிலும் சற்று கிழிந்து இரத்தம் கசிந்திருக்க... உதடு கன்னமென முகமெங்கும் சிராய்ப்பும் அதிலிருந்த எரிச்சலும் அவனை மிருகமாக மாற்றியது.
“என்னை மண்ணை கவ்வ வக்கிறீயா சரயூ? என் கைலை மாட்டுவயில்லை அப்ப இதுக்கும் சேர்த்து உன்னை கவனிக்குற...” என்று கர்ஜித்தவன் சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றி இவளைத் தேடினான்.
பெயரறியா பூச்சுகளின் சிறு சத்தத்தை தவிர அமைதியாக இருந்த காட்டை உலுக்கியது கிரணுடைய வார்த்தைகள்.
அருகருகே இரு பெரும் மரங்கள். அதிலொன்று நிமிர்ந்து நேராக நின்றிருக்க... மற்றொன்றின் தண்டோ ஒரே சமமாக இல்லாது சற்று வெளிபுறமாக வளர்ந்து உள்வாங்கி... மனித உடலின் முன் கழுத்து எலும்பை செங்குத்தாக நிறுத்தினால் கிடைக்கும் வளைவை ஒத்திருக்க... அதன் உட்பகுதியில் தன்னை பொருத்திக் கொண்டாள்.
மெதுவாக எழுந்து தன்னை சுதாரித்தவன், மறுபடியும் சரயூவைத் தேடி அலையத் தொடங்கிவிட்டான். அவன் தன்னை சமாளிக்க செலவழித்த காலத்தை கணக்கிட்டு, அவள் நெடுந்தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைச் சுற்றி வர... அவள் ஒளிந்திருந்த மரத்திடம் மூன்று முறை வந்திருந்தாலும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.
கிரண் ஒவ்வொரு முறை அவளிருந்த மரத்தருகே வரும்போதும் அவளின் வயிற்றுப் பகுதி புயலில் சிக்கித் தொலைந்திட்ட உணர்வோடு நெஞ்சம் தடதடத்தது.
அவ்விடத்தை விட்டு ஒவ்வொரு முறை அவன் நகர்ந்த போதும் இவளுக்குள் நிம்மதி பிரவாகம். ஜெய் வரும் வரை இவள் சமாளித்து விட்டால் போதும்... பிறகு எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும்... அடுத்து தானாக அப்பா அம்மா ராகுலென எல்லோரின் முகங்களும் அவர்களின் பாசமும் ஆக்கிரமிக்கிறது.
அப்பாவிடம் இவளுக்கான சலுகைகள், கண்டிப்பான வார்த்தைகளுக்கு பின்னிருக்கும் அம்மாவின் அன்பு, ராகுலிடம் இவளின் செல்ல சண்டைகளும், சீண்டல் விளையாட்டுகளும். மனம் அதன் பாட்டில் அவர்களோடான சந்தோஷ பொழுதுகளை அசைப்போட... அவள் உயிரோடு சேர்ந்து கண்களும் கசிந்தது.
சரயூ தனக்குள் கலங்கி கரைந்து கொண்டிருக்க... சரெலென மரங்களுக்கிடையில் நுழைந்து இவளை அசையாவிடாது சிறை செய்துவிட்டான் அவன்.
மூக்கும் வாயும் இரத்ததில் குளித்திருக்க, காயங்களோடு வீங்கியிருந்த முகத்தோடு அவனுடைய தற்போதைய குணமும் சேர இவளுக்கு கதைகளில் படித்திருந்த அந்த காலத்து இராட்சனாகவே தோன்றியது.
அதிர்ச்சியில் உறைந்து விழித்தவளை ரசித்து, “ஏன்டி இப்படி ஓடி நேரத்தை வீணாக்கின...?” என்று கேட்டவன், “பரவாயில்லை விடு... இதுவும் இன்ட்ரெஸ்டிங்காதா இருக்கு” அவன் சிரிக்க...
மூக்கு உடைந்திருப்பதாலோ என்னவோ அவனுடைய பேச்சும் சிரிப்பும் குரூரத்தை வெளியிட... அந்த நொடி இவன் இராட்சன் என்பதை முழுமையாக நம்பிய சரயூவின் மனது இவனை வதைத்தாலும் தவறில்லை என்று நினைத்து.
இதுவரையிலும் தன்னை காத்து கொள்வதையும் இங்கிருந்து தப்பிப்பதிலுமாக சிந்தனை சென்றிருக்க.. இவனை கொல்லும் எண்ணம் துளியும் இருக்கவில்லை.
அவனை தடுத்த இவளின் கைகளை சமாளித்து கழுத்து வளைவில் வாசம் பிடித்து, “ம்ம்... என்ன வாசம்டி! இந்த பெர்ஃப்யூமை தயாரிச்சவனுக்கு நன்றி சொல்றதா இல்லை வாங்கின உனக்கு நன்றி சொல்றதானு தெரியலை... இது மட்டுமிருக்கலை, இந்த காட்டை திரும்ப திரும்ப சுத்திட்டு சும்மாதா கிளம்பியிருப்ப” என்று அவளை பிடித்த கதையை சொல்லி மீண்டும் வாசம் பிடித்தான்.
அவன் மூச்சுக்காற்று மேனியில் படர... புழுக்களை இவள் மேல் கொட்டிய உணர்வில் அருவருத்து அவனை தள்ளிவிட...
“இப்படி தள்ளினா என்னடி செய்றது? வாடி செல்லம்” இவள் அழகில் போதையேறியிருந்த அவன் வார்த்தைகளில்...
“விடுடா என்னை! உனக்கு என்மேல இன்ட்ரெஸ்ட் இருக்குற ஒரே காரணத்துக்காக நானும் உன்னை ஏத்துக்கனும்னு நினைக்குறது சரியா? ப்ளீஸ் கிரண்... புரிஞ்சுக்கோ. இந்த மாதிரி சீப்பா பிஹேவ் செய்றதுக்கு கூசலையாடா உனக்கு? நீ ஒரு பொண்ணாயிருந்து இப்படி உன்னை யாராவது ஃபோர்ஸ் பண்ணா உனக்கு பிடிக்குமா என்ன? யோசிச்சு பாரு கிரண். இது தப்பு”