(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி

Kaathalana nesamo

ஷ்யாம் வேதனைக்கு காரணம் மித்ராவின் வாய்ஸ் மெசேஜ் தான். அவள் தன்னுடைய மெசேஜில் தன்னுடைய நிச்சயம் பற்றி மட்டும் இல்லாமல், தன் மனதில் இருக்கும் குழப்பங்களையும் சேர்த்து சொல்லிருந்தாள். இதை மட்டும் அவன் முதலில் கேட்டு இருந்தால், இன்றைக்கு அவளை நல்ல மனநிலையில் இந்த நிச்சயத்தை எதிர்கொள்ள முயன்றிருப்பான். இப்போதோ அவளின் நிலைமை என்னவோ என்ற பதற்றம் தான் அவனுக்கு இருந்தது. அந்த மெசேஜில் இருந்த விவரம்

“ஹாய்.. அத்தான்.. ஜெர்மனி போன நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு மாமா சொன்னங்க. வீட்டுக்கு கூட நீங்க பேசறதில்லைன்னு அத்தையும் சொன்னாங்க. ஆனா எனக்கு இப்போ உங்க கிட்டே பேசியே ஆகணும் போலே இருக்கு. அதான் என்ன செய்யன்னு தெரியாம உங்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பறேன்.

அத்தான் எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுது. ஓரளவிற்கு நல்லா பண்ணிருக்கேன். எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாள் அப்பா மேலே என்ன பண்ண போறேன்னு கேட்டாங்க. நான் நீங்க வந்ததும் என்ன செய்யறதுன்னு கேட்டுக்கறேன்னு சொன்னேன்.

அப்போ எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கிறதாவும், முதல் முதலில் வரும் சம்பந்தம், அதனால் தட்டி விடவேண்டாம். அவங்க வந்து உன்னை பார்க்கட்டும். உனக்கும், அந்த பையனுக்கும் பிடிச்சுருந்தா மேலே பேசலாம், அப்படி இல்லைனா அப்புறம் யோசிக்கலாம்னு சொன்னாங்க. அப்பா சொன்னதுக்காக சரின்னு சொன்னேன்.

ஆனால் சொல்லிட்டு, ரொம்ப யோசனையா இருந்துச்சு. உங்களுக்கே தெரியும் நான் காலேஜ் போனதுலேர்ந்து நிறைய பேர் என்னை வித்தியாசமா நினைக்கிறாங்கன்னு உங்ககிட்டே சொல்லிருக்கேன். அத எல்லாம் யோசிச்சா, கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனால் இத நான் யார்கிட்டயும் சொல்லல. ராம் மாமா, அத்தை எல்லாம் கூட சரின்னு சொன்னதா கேள்விபட்டேன். அதனால் சரி பார்துக்க்கலாம்ன்னு இருந்தேன்.

ஆனால் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு , அந்த மாப்பிள்ளை அவர் பேர் சரவணன். அவர் பற்றிய மற்ற விவரம் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும். சரவணன் அவங்க அம்மாகிட்டே என்னை பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டு, மேலே ஏற்பாடு செய்ய சொல்லிட்டாங்க. அப்பா ரெண்டு நாள் டைம் கேட்டாங்க தான். ஆனால் என்னோட பாட்டி அங்கியே உடனே எங்கிட்ட மாப்பிள்ளைய பிடிச்சுருக்கான்னு கேட்டுடாங்க. என்னாலே அவங்கள முன்னாலே வச்சுக்கிட்டு என்ன சொல்லன்னு தெரியாம மண்டைய ஆட்டிட்டேன். பாட்டி இப்படி கேட்டது எனக்கு பிடிக்கல. அட்லீஸ்ட் தனியா எங்கிட்ட வந்து ரூம்லேயாவது கேட்ருக்கலாம். நம்ம பாட்டி அவங்க போன பின்னாடி இதை கேட்டதுக்கு என்னோட பாட்டி வெடுக்குன்னு பேசிட்டாங்க. அதனால அதுக்கப்புறம் யாரும் எதுவும் பேசலை.

எல்லோரும் போனதுக்கப்புறம் என் பாட்டி என்கிட்டே தனியா ரொம்ப பேசினாங்க. ஒழுங்கா இரு, உன் மந்தபுத்திய மூட்டை கட்டிவை, போற இடத்தில்லே நல்ல பேர் வாங்கு அப்படின்னு ஏகப்பட்டது சொன்னாங்க. கிட்டத்தட்ட காலேஜ்லே சில பேர் பேசினாங்கலே அத மாதிரி இருந்தது.

அதுக்கு பிறகு எனக்கு ஒரே யோசனையா இருந்துச்சு நமக்கு இப்போ கல்யாணம் அவசியமான்னு? அம்மா, அத்தை எல்லாம் பார்க்கும்போது அந்த அளவிற்கு நான் பொறுப்பா இருப்பேனா, இது எல்லாம் எனக்கு தெரியல.

நிச்சயத்திற்கு புடவை எடுக்க போகும் போது பாட்டி மறுபடி ஒரே அட்வைஸ் நல்லதா எடு, ஏனோ தானோன்னு எடுக்காத அப்படின்னு. அன்னைக்கு எந்த புடவை எடுக்கன்னு தெரியாம யோசிச்சுட்டு இருந்தப்போ மைதிலி அத்தை தான் செலக்ட் பண்ணி கொடுத்தாங்க. அப்போ உன் வுட்பிக்கு எது பிடிக்குமோ அத எடுக்க்கலாமேன்னு கேட்டாங்க. அப்போ அவங்க கிட்டே பேசினதே இல்லையேன்னு சொன்னேன். அத்தை அப்போ ஒருமாதிரி ஆயிட்டாங்க.

இது எல்லாம் சேர்ந்து இப்போ எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அத்தான். நீங்களே சொல்லுங்க நான் இப்போ என்ன செய்யட்டும்? நீங்க எப்போ வருவீங்க? ப்ளீஸ் சீக்கிரம் வாங்க”

என்று கிட்டத்தட்ட இருபது நிமிடம் பேசி இருந்தாள். இதை கேட்டவுடன் ஷ்யாமிற்கு மிகவும் கஷ்டமாக போய் விட்டது. அவள் ஏதாவது பாட்டு ஷேர் பண்ணிருப்பா, அல்லது ஸ்ம்யுல்லே பாடி லிங்க் அனுப்பி இருப்பான்னு நினைச்சு ஓபன் பண்ணாமல் விட்டுட்டோமே. அட்லீஸ்ட் ரெண்டு நாள் முன்னாடி கேட்ருந்தா கூட, மித்ரா கிட்டே பேசி அவளின் குழப்பத்தை தீர்த்து இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.

இப்போ யோசனை செய்து ஒன்றும் பிரயோஜனமில்லை. அங்கே நிச்சயம் நல்லபடியாக முடியட்டும். பிறகு எல்லாம் பேசி அவளை தெளிவாக்கலாம் என்று எண்ணிக் கொண்டவனாக, காத்து இருக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் ஏனோ ஒரு இனம் புரியாத கவலை. அதை விட எதையோ இழந்த ஒரு பீல் அவனுக்கு வந்தது. ஆனால் அதை பற்றி அவன் எதுவும் யோசிக்கவில்லை. அவனுடைய எண்ணம் எல்லாம் மித்ராவை பற்றி மட்டுமே.

வன் நினைத்தது போல் போல் அல்லாமால், நிச்சயம் நல்ல விதமாகவே நடந்து கொண்டு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.