விஷ்ணுவும் அனுவிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் அவள் கோபத்தை தீர்த்து விட வேண்டும் (உண்மை அறியாமல்) என்று அன்று முழுவதும் எவ்வளவோ முயன்றான், ஆனாலும் முடியவில்லை.
அடுத்து வந்த 12 நாட்களும் அப்படியேதான் சென்றது. விஷ்ணுவும் அனுவும் தன் மனதில் இருந்ததை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொல்லவில்லை. அனு விஷ்ணுவை விட்டு விலகி இருந்தாலும் மனதளவில் அவனை விட்டு விலக முடியாமல் தவித்தாள். இருவரின் இரவுகளும் கண்ணீரிலே கழிந்தது. தன் காதலை மறைத்துவிட்டு இல்லை இல்லை தன் காதலைப் புதைத்துவிட்டு திபக்குடன் திருமணத்திற்குத் தன்னை தயார் படுத்தி வைத்திருந்தாள் அனு.
90 வது நாள்.
அதுதான் விஷ்ணு பூமியில் வாழப் போகும் கடைசி நாள். எமனிடம் போட்ட சாவலின் படி அன்று இரவுக்குள் அவன் அனுவை காதல் சொல்ல வைக்க வேண்டும். கடந்த சில நாட்களாக நடந்த மகிழ்ச்சியான மற்றும் சோகமான சம்பவங்களால் அவன் நாளைக் கணக்கிட மறந்து போனான்.
அன்று மாலை அனுவின் திருமணத்தில் முதல் விஷேசமான பெண் அழைப்பு. அனுவின் வீடு உறவினர்களால் நிரம்பி இருந்தது. அனைவர் முகத்திலும் உள்ளத்திலும் சந்தோஷம். ஆளுக்கு ஒரு வேளையாக எடுத்துச் செய்து கொண்டிருந்தனர். வீடு முழுதும் நிறைந்திருந்த சந்தோஷ தேவதை அனுவை மட்டும் அரவணைக்க மறுத்து விட்டாள்.
அனு வெளியே அனைவருக்காகவும் சிரித்தாலும் அவள் உள்ளம் மட்டும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. பற்றாக் குறையாக விஷ்ணு வேறு அந்த வேளைச் செய்கிறேன் இந்த வேளைச் செய்கிறேன் என்று அவ்வப்போது அனுவிற்கு காட்சி அளித்துக் கொண்டே இருந்தான்.
அவனை எவ்வளவுதான் திட்டினாலும், வெறுக்க நினைத்தாலும், அவன் முகம்ப் பார்த்தவுடன் அனைத்தும் வெயில் கண்ட பனி போல் உருகி அவன் மேல் கொண்ட காதல் தான் மேலிடும்.
20 நாட்களுக்கு முன்னால் காதல் அரும்பியவளின் நிலையே இப்படி என்றால், 20 வருடமாகக் காதலை செல்லப் பிள்ளை போல் வளர்த்த விஷ்ணுவின் நிலைமை? வெளியே காட்டி கொல்ல வில்லை என்றாலும், அவன் மனமும் அவளுக்காக ஏங்கிக் கொண்டுதான் இருந்தது. இத்தனை நாள் அவனுக்கு பெரியதாக தெரியவில்லை. இன்று ஏனோ அவன் மனம் அவனைப் பாடாய் படுத்தியது. திபக்கோடு மணக்கோலத்தில் அனு நிற்பது போன்று அவனால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.
அங்கிருந்து செல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. இனி எதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அனு அவனுக்குக் கிடைப்பாள்.
அன்று மாலை, விஜயசேஸ் மஹால் அலங்கார மின் விளக்குகளால் அழகாய் மின்னிக் கொண்டிருந்தது.
உற்றார் உறவினர், தெரிந்தவர்கள், நண்பர்கள் என மெல்ல மண்டபம் நிரம்ப ஆரம்பித்தது. அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் திபக் அனு தனி தனியாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மணக் கோலத்தில் தேவதை போல் தோன்றினாள் அனு. மேடையில் இருவரும் அமர்ந்திருக்க, பார்த்த அனைவரும் கூறிய ஒரே வார்த்தை “இருவரும் சரியான ஜோடி” என்பது தான்.
அங்கிருந்தவர்களின் கண்கள் முழுக்க மாப்பிளை பெண் மீது இருக்க, அனுவின் கண்ணோ விஷ்ணுவையே சுற்றி வந்தது. அவள் எவ்வளவோ தடுத்தும் அவள் மனமும் கண்களும் கேட்காமல் அடம்பிடித்தது.
விஷ்ணுவின் நிலைமையும் அதே தான். எந்தக் காட்சியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று வருந்தினானோ அந்தக் காட்சி அவன் கண் முன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தன் தோழிக்கு நல்ல வாழ்க்கை அமைகிறது என்பதை விட தன் காதலி தனக்கு இல்லை என்பதுதான் மேலோங்கி நின்றது.
ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்ள அவ்வப்போது இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. ஒருவர் கண்ணில் இருக்கும் காதல் மற்றவருக்குத் தெரிந்தாளும் அவர்களின் மூளை அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
அனுவின் மணக் கோலத்தை பார்த்து ராஜ சேகரின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்தாலும், அனு சந்தோஷமாக இல்லையோ என்ற ஒரு சிறு உறுத்தல் அவர் மனதிற்குள். அதை தன் மனைவியிடம் கேட்டும் விட்டார்.
“பார்வதி, நம்ம பொண்ண இப்படி பாக்குரதுகு எவ்வளவு சந்தோஷமா இருக்கு. என்னமோ நேத்துதான் நர்சு என் கையில பெண் குழந்தை பிறந்திருக்கா னு கூடுத்த மாதிரி இருக்கு. நாள் எவ்வளவு வேகமா ஓடிடுச்சு” என்று தன் மகள் தன்னை விட்டுப் பிரிய போகின்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.
“ஆமாங்க, எனக்கு அப்படிதான் தோனுது” என்றார் பார்வதி.
“நான் ஒண்ணு கேட்டா தப்ப நெனச்சிக்க மாட்டியே” என்று ராஜ சேகர் பீடிகை போட, “என்ன” என்பது போல் அவரைப் பார்த்தார் பார்வதி.