பூர்வியின் விண்ணப்பத்தைப் பார்ததுமே ஹர்ஷா ஹரிணிக்கு உடனேயே போன் செய்து சொன்னான். எப்போதும் ஹரிணி இசையின் மகத்துவம் குறித்து சிலாகிப்பது உண்டு. பூர்வியின் தீசிஸ் ஆராய்ச்சி தலைப்பு அவளையும் வெகுவாகவே கவர்ந்திருந்தது. நீண்ட நேரம் அந்த தலைப்பு குறித்து ஹர்ஷாவிடம் ஹரிணி உரையாடிக் கொண்டிருந்தாள். பூர்வியையும் அவளது ஆராய்ச்சியையும் ஹரிணி தான் ஆவலாக எதிர்நோக்கி இருந்தாள்.
ஆனால் பூர்வி தமிழ் பெண் என்பதோ அவளது மற்ற விவரங்களோ இருவரும் அறிந்திருக்கவில்லை. ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இந்தோனேசியா சென்றிருந்த போது சுனாமியில் அவளது பெற்றோரைப் பறிகொடுத்து இவள் மட்டும் பிழைத்திருந்தாள். அவளது ஒரே சொந்தமான சித்தப்பா கலிபோர்னியாவில் ஒரு தேவாலயத்தில் பாஸ்டராக இருந்ததால் அவருடன் அமெரிக்கா வாசம் என்றானது. கடுமையான டிப்ரஷனுக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டு அதையே தனது படிப்பாக மாற்றிக் கொண்டு அதில் பிஹெச்டி செய்யும் அளவுக்கு அவள் தன்னை வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் பாசத்திற்கு மிகவும் ஏங்கிப் போயிருந்தாள்.
ஹர்ஷாவின் போனின் ரிங் டோனாக இளைய நிலா பாடலைக் கேட்டதும் அவளை அறியாமலேயே அவன் அவளுக்குச் சொந்தாமகிப் போயிருந்தான். அது அவளது தந்தை அவளுக்காக பாடிய தாலாட்டு அல்லவா.
எதிர்முனையில் யார் பேசியது என்று பூர்விக்கு தெரியவில்லை. ஆனால் ஹர்ஷாவின் முகம் சந்தோஷமாய் மலர்வதைப் பார்த்தவள் அவனுக்குப் பிரியமான யாரோ என்று அனுமானித்துக் கொண்டாள். ஏனோ அந்த முகம் தெரியாத நபருடனும் ஒரு வித சொந்தம் ஏற்படுவதை உணர்ந்தாள். அந்த சொந்தத்தை உறுதி செய்வது போல ஹர்ஷாவின் இதழ்கள் முத்தான மொழிகளை உதிர்த்தன.
“நம்ம குட்டிப்பொண்ணு பூர்வி தான் ஹனி”
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}