அந்த நான்கு நாட்கள் தன் மாமா வீட்டில் இருந்ததை மித்ரா சரவணனிடம் சொல்லவில்லை. அவன் போன் செய்யும்போது எடுத்து பேசிவிட்டு வைத்து விடுவாள்.
இங்கே வந்தது மித்ராவிற்கு நல்ல ரெப்ரெஷ்ஷாக இருந்தது. மைதிலி அவ்வப்போது அவளுக்கு தேவையான அறிவுரை சொன்னாலும், கல்யாண வாழ்க்கை குறித்த நல்ல பக்கங்களை எடுத்து சொன்னதால், அவளுக்கு இத்தனை நாளாக இருந்த பயம் நீங்க ஆரம்பித்து இருந்தது. அதனால் அவளின் முகத்தில் ஒரு தெளிவு தெரிய, பார்த்து இருந்த ஷ்யாம் மற்றும் அவன் வீட்டினருக்கு திருப்தியாக இருந்தது.
இந்த நிலையில் கல்யாண நாள் நெருங்க, முதலில் சபரி வீட்டில் பந்தக்கால் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதலே வீட்டில் உறவினர் கூட்டம் வர ஆரம்பிக்க, ராம் வீட்டினரும் அங்கேயே வந்து விட்டனர். ராமும், ஷ்யாமும் மட்டும் அவ்வப்போது அலுவலகம் சென்று வர, வீட்டின் மற்றவர்கள் எல்லோரும் அங்கேயே இருந்தனர்.
திருமணத்திற்கு முதல்நாள் காலை நிச்சயமும், இரவு ரிசெப்ஷனும் வைத்து இருந்ததால், மாப்பிள்ளை வீட்டார் அதற்கும் முதல் நாள் இரவு மண்டபத்திற்கு வந்து விடுவதாக கூறி இருந்தார்கள்.
நிச்சயத்திற்கு முன் மெஹந்தி இட வேண்டும் என்பதால், முதல் நாள் மாலையே மெஹந்தி ஆட்டம் பாட்டத்தோடு நடந்தது.
ராம் குடும்பமே நன்றாக பாடக் கூடியவர்கள். அதிலும் ஷ்யாம் கிடார் வாசிப்பவனும் கூட. எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களே நடத்தும் இசை குழுவே பாடுவார்கள். இப்போது அதை ஷ்யாம் நடத்தினாலும், இந்த விசேஷத்திற்கு மட்டும், ராம், மைதிலி இருவரும் பாட எண்ணியிருந்தார்கள்.
ஷ்யாம் புது பாடல்கள் பாட, ராம் இடைக்கால பாடல்கள் பாடினான். மித்ரா, சுமி, சைந்தவி மூவருமே பரதம் கற்றவர்கள். அதனால் சில பாடல்களுக்கு ஆடவும் செய்தனர்.
அவர்களின் தோழிகள் சிலர் வந்து இருக்க, அஷ்வின், ஷ்யாம் இருவரின் நண்பர்களும் சிலர் வந்து இருந்தனர்.
முதல் நாள் மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்னும்போதே, அஷ்வின் சரவணனை போனில் அழைத்து இருந்தான் . அன்றைய மெஹந்தியிலும் கலந்து கொள்ளும் படி. ஆனால் தங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று மறுத்து இருந்தான்.
அதை எண்ணியே சபரியும், மைதிலியும் சற்று சீக்கிரமாக ஆரம்பித்து முடிக்க சொல்லி இருந்தனர். எல்லாம் நன்றாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே மாப்பிள்ளை வீட்டார் வந்து விட, சற்று நேரம் மித்ரா குடும்பத்திற்கு என்ன செய்ய என்று புரியாத நிலை ஏற்பட்டது.
முதலில் சுதாரித்த மைதிலி எல்லோரையும் வரவேற்று விட்டு, வேகமாக கிட்சேன் பக்கம் சென்று வந்தவர்களுக்கு குடிப்பதற்கு ஏற்பாடு செய்ய சொன்னாள்.
அவர்கள் கிட்டத்தட்ட நாற்பது, ஐம்பது பேர் ஒரு பஸ்சில் வந்து இருக்க, இன்னும் இரண்டு பஸ் இரவு புறப்பட்டு காலையில் வரும் என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.
மைதிலியை தொடர்ந்து மற்றவர்கள் எல்லோரையும் வரவேற்று, வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டு இருந்தனர். அங்கே மெஹந்தி முடியும் நேரம் என்பதால், டான்ஸ் உச்சத்தில் இருந்தது. எல்லோரும் சேர்ந்து புகழ் பெற்ற ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டு இருந்தனர்.
இங்கே மாப்பிள்ளை வீட்டில் வந்து இருந்த சிறு வயது பெண்கள் அந்த கொண்டாட்டத்தை பார்த்து அங்கே சென்று விட, அவர்களை கவனித்த அஷ்வின் நேராக வந்து சரவணனை அழைத்துக் கொண்டு சென்றான்.
சரவணனோடு அவன் நண்பர்களும் வர, எல்லோருமாக கொஞ்சம் ஆடி விட்டு அமர்ந்தனர்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்ற நிம்மதியோடு, அனைவரும் இரவு உணவு உண்டு விட்டு தங்கள் அறைக்கு சென்று இருந்தனர்.
சரவணன் பிரெண்ட்ஸ் தங்க எங்கே ஏற்பாடு என்று அஷ்வினை கேட்க, அவன் ஷ்யாமை அழைத்தான். சரவணனிடம்
“மாப்பிள்ளை. இவர்தான் ஷ்யாம் அத்தான். எங்க மாமா பையன். சூர்யா க்ரூப்ஸ் எம்.டி.” என்று அறிமுகபடுத்த,
“ஹலோ” என்று கைநீட்டினான் ஷ்யாம்.
சரவணனோ “ம்ம்..” என்று மட்டும் சொல்லிவிட்டு, மீண்டும் நண்பர்கள் தங்குவதை பற்றி கேட்டான்.
அதற்கு ஷ்யாம் “ஒன்னும் பிரச்சினை இல்லை. இங்கே பக்கத்தில் எங்க கம்பெனி கெஸ்ட் ஹௌஸ் இருக்கு. அங்கே தங்கிக்காலாம்” என்று கூற, சரி என்று தலை அசைத்தான்.
அவர்களை அழைத்து செல்வதற்கு கார் ஏற்பாடு செய்ய அஷ்வின் செல்ல, ஷ்யாமும் தங்கள் கெஸ்ட் ஹௌஸ் கேர் டேகரிடம் பேச தள்ளி சென்றான்.
அவன் சென்று விட்டான் என்று எண்ணி, சரவணனின் பிரெண்ட்ஸ்
“ஏன் மச்சான்? உன் வுட்பியோட மாமா பையனே இவ்ளோ பெரிய அப்பாடக்காரா இருக்காரே. அவர விட்டுட்டு உன்னை எப்படி கல்யாணம் பண்ண சம்மதிச்சாங்க?