தொடர்கதை - காதலான நேசமோ - 22 - தேவி
மித்ரா பிரன்ட் ஆபீஸ் பகுதியில் இருந்து அவளுடைய பயிற்சியை ஆரம்பித்தாள். முதல் நாள் அவளுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சினையும் வரவில்லை.
மைதிலியும், மித்ராவும் மதியம் வீட்டிற்கு சென்றார்கள். ராம், ஷ்யாம் இருவருக்கும் லஞ்ச் காரியரில் கொடுத்து விட்டு, தன் மாமனார், மாமியாரை அமர வைத்து உணவு பரிமாறினாள் மைதிலி.
அவர்கள் அமர்ந்து கொண்டு
“நீ, மித்ரா இருவரும் உட்கார வேண்டியது தானே?
“இருக்கட்டும் அத்தை. நீங்கள் முதலில் சாப்பிடுங்கள்.” என்றவள், “மித்ரா, நீயும் உட்காருடா” என
“நான் உங்க கூட சாப்பிடறேன் அத்தை.” என்றவள், அவளும் சேர்ந்து மைதிலியோடு பரிமாறினாள். பெரியவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், உடனே உள்ளே செல்லாமல், அவர்களும் இவர்களோடு அமர்ந்து கொண்டார்கள்.
இவர்கள் சாப்பிடவும், இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்து பெரியவர்களை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு, மித்ராவையும் அவள் அறைக்கு அனுப்பி சற்று ரெப்ரெஷ் செய்து விட்டு வர சொன்னாள்.
மீண்டும் அரைமணி நேரம் கழித்து, இருவரும் கிளம்பி அலுவலகம் சென்றனர்.
மைதிலி அவள் வேலையை பார்க்க, மித்ரா அந்த வரவேற்பறை வேலையில் மீண்டும் இணைந்து கொண்டாள். அன்றைய வேலை எல்லாம் முடிந்து இருவரும் வீட்டிற்கு செல்ல, அவர்கள் வந்த அதே நேரத்தில் ஷ்யாமும் வந்து இருந்தான்.
பொதுவாக அத்தனை சீக்கிரம் வராதவன், அன்றைக்கு மித்ராவிற்காக வந்தான்.
அவள் வெளி இடங்களில் அதிகம் பழகியவள் இல்லை என்பதால் , அவனுக்கு சற்று கவலையாக இருந்தது. தன் அம்மா பார்த்துக் கொள்வார் என்றாலும், முதல் நாள் அவள் பயந்ததே அவன் எண்ணத்தில் ஓடியது.
வேலை நேரத்தில் அவளோடு பேசலாம் என்று நினைத்தவன், எதுவும் பிரச்சினை என்றால் அவளே கூப்பிடுவாள் என்ற நம்பிக்கையில் அந்த நினைவை கைவிட்டான்.
அவர்கள் வரவும், பாட்டி, தாத்தா இருவரும் தோட்டத்தில் இருக்கவே எல்லோருமே அங்கே சென்றனர்.
அப்போது சுமித்ராவும் வந்து விட, வீட்டு சமையல்காரர் அங்கேயே எல்லோருக்கும் சிற்றுண்டி மற்றும் காபி எடுத்துக் கொண்டு வந்தார்.
மித்ராவின் அருகில் அமர்ந்தவன்,
“மித்ரா .. அம்மா கூட ஆபீஸ் போனியே? எப்படி இருந்தது உன் முதல் நாள் அனுபவம்”
“ஒன்னும் பிரச்சினை இல்லை அத்தான். அந்த ரிசெப்ஷனிஸ்ட் சொன்னபடி கால்ஸ் எல்லாம் அந்த அந்த டிபார்ட்மென்ட்டிற்கு கனெக்ட் செய்து கொடுத்தேன். அப்புறம் என்குயரி வந்த கால்ஸ் எல்லாம் நோட் செய்து வைத்தேன். மற்றபடி அங்கே வரும் விசிட்டர்ஸ் பார்த்து அனுப்பி வைத்தேன். “
“குட்” என, மற்றவர்களும் அவளை உற்சாகபடுத்தினர்.
மித்ராவிடம் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், வேலைக்கு செல்வதை வெறுக்கவும் இல்லை என்பதைக் கண்டு கொண்டான்.
அதற்குப் பின் அன்றையப் பொழுது வழக்கம் போல் கழிந்தது.
மறுநாள் மைதிலி அலுவலகத்தில், மித்ரா வேலை செய்து கொண்டு இருக்க, அப்போது ஒரு போன் வந்தது.
“ஹலோ. வணக்கம். சுபம் எவென்ட் மானேஜ்மென்ட் “ என்று கூற, பதில் பேசியவர்
“அது தெரியாம தான் போன்லே கூப்பிடறோமா? “ என்று கேட்டார். யார்டா இது இப்படி பேசுவது என்று நினைத்தவள், இதற்கு எப்படி பதில் சொல்ல என்று முழித்தாள்.
அவளோடு கூட இருந்த பெண் , போனில் வந்த விசாரணைகளை குறித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பிரிவில் கொடுத்து விட்டு வருவதாகச் சென்றாள்.
“சார், நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல?
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“ஹான்.. சொல்றாங்க.. சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு? என்னம்மா ஏஜென்ட் நடத்துறீங்க?”
“சார், என்ன விஷயம்னு சொல்லாம பேசிட்டு இருந்தா , நான் என்ன பண்ணட்டும்?
“ஏம்மா, நேத்திக்கு போன் பண்ணி, இன்றைக்கு ஒரு கெட் டு கெதருக்கு உங்கள் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தோம் இல்லையா?” என்று கேட்டார்.
அவளுக்கு நினைவு வந்தது. அவள் தான் அந்த கால் அட்டென்ட் செய்தாள்.
அவரிடம் டிடைல்ஸ் கேட்டுக் கொண்டு, பிளானிங் பிரிவில் கால் கனெக்ட் செய்து இருந்தாள்.
“ஆமாம் சார். நினைவு இருக்கு” என்றாள்.
“அது இருந்தா, இத்தனை நேரம் நாங்க சொன்ன இடத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்து இருக்கணுமே? இங்கே யாரும் இன்னும் வரலையே”
“இருக்காதே சார். டைம் படி எல்லாம் செய்துடுவாங்களே”
“கிழிச்சாங்க. “
“இருங்க சார். நான் எங்க ஆபீசர்ஸ் கிட்டே கேட்டு சொல்றேன்”