தொடர்கதை - எனதுயிரே - 03 - மஹா
இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த நேரம், அன்புவின் கைபேசி அலற இருவரும் நடப்புக்கு வந்தனர். தமிழை விட்டு விலகியவன் தன் கைபேசியை நோக்கி நகர்ந்தான். அவன் தூரம் சென்ற பின்பும் அவளின் இதயம் வேகமாக துடிப்பதை நிறுத்தவில்லை. சற்று முன் நடந்ததையே மனதில் திரும்ப ஓட்டி பார்த்து கொண்டிருந்தாள். வெட்கத்தில் அவள் முகம் சிவந்து கொண்டிருந்த நேரம்,
தமிழ்...
அவனின் அழைப்பில் நடப்புக்கு வந்தவள் அவனை நோக்கி நடந்தாள்.
"என்ன மாமா..."
"நா குளிச்சிட்டு வந்துடறேன் நீ ரெடியா இரு", என்று கூறி விட்டு குளியலறைக்கு சென்றான்.
அவன் குளித்து முடித்து வருவதற்குள் தமிழ் வீட்டை சுத்தம் செய்தாள்.
சற்று நேரத்தில் இருவரும் கிளம்பி கீழே சென்றனர்.
அங்கே வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்த கேசவன்,
"ஈஸ்... ஈஸ்... நம்ம மேல் வீட்ல இருந்து யாரோ வராங்க... சீக்ரம் வா..." என கேசவன் கத்த அதை கேட்ட அன்புவும் தமிழும் அங்கேயே நின்று விட்டனர்.
வீட்டினுள் இருந்து வெளியே வந்த ஈஸ்வரி,
"யோவ்... யோவ்... எதுக்கு இப்டி கத்துற, இவங்க மேல் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காங்க" என்றார்.
"குடி... வந்து... இருக்...காங்களா?... ஏன் ஈஸ் என் கிட்ட சொல்லல", கேசவன்.
"ம்.... நல்லா குடிச்சிட்டு தூங்குனா வீட்ல நடக்கறது எப்டி தெரியும்?", ஈஸ்வரி.
"அதுல்ல ஈஸ்...", கேசவன் .
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"எது இல்ல ஈஸ்?... இவங்க இன்னைக்கு காலைல தான் குடி வந்தாங்க. இனிமே இங்க தான் இருக்க போறாங்க. இப்போ தெரிஞ்சிடுச்சுல?, நீ போய் கை, கால் கழுவிட்டு வா, நா உனக்கு சாப்பாடு எடுத்து வக்கிறேன்", ஈஸ்வரி.
கேசவன் உள்ளே சென்றதும், இருவரிடமும் திரும்பிய ஈஸ்வரி, "நீங்க ஒன்னும் தப்பா நெனைச்சுக்காதீங்க. அவரு என் வீட்டுக்காரர் கேசவன்.ரொம்ப நல்லவர் என்ன ஒன்னு இந்த குடி பழக்கத்த மட்டும் விட மாட்றாரு.அவர் மட்டும் இந்த பழக்கத்த விட்டுட்டு ஒழுங்கா வேலைக்கு போனார்னா அவரை மாதிரி ஒரு நல்ல புருஷன எங்கேயுமே பாக்க முடியாது ஹ்ம்ம்ம்... என்ன பண்றது என்ன பண்ணியும் இத மட்டும் என்னால மாத்தவே முடியல. நா வேற ஒருத்தி நீங்க எங்கயோ வெளிய போறீங்க போல இந்த நேரத்துல இதுலா பேசிட்டு இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க.", என்றார் ஈஸ்வரி.
"அதுலா ஒன்னும் இல்லமா வீட்டுக்கு தேவையான பொருள் தான் வாங்க போறோம். நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க எல்லா சீக்ரம் சரி ஆகிடும்", தமிழ்.
"ம்ம்... பாக்கலாம் மா. ரெண்டு தெரு தள்ளி கடை இருக்கு பாத்து போய்ட்டு வாங்க", என்று அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே சென்றார் ஈஸ்வரி.
கடைக்கு சென்ற இருவரும் வீட்டிற்கு அடிப்படையாக தேவைப்படும் சில பொருட்களை மட்டும் வாங்கி கொண்டு வீடு திரும்பினர்.
வீட்டிற்கு திரும்பியவர்கள் வாங்கி வந்த பொருட்களை அடுக்க ஆரம்பித்தனர்.
முதலில் பூஜை அறைக்கு சென்று அவர்கள் வாங்கி வந்த சாமி படத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூ வைத்து விளக்கேற்றினாள் தமிழ். இருவரும் இறைவனை வணங்கிய பின் அன்புவின் கையில் குங்குமத்தை குடுத்தாள். அதை வாங்கியவன், அவளின் நெற்றி வகுட்டிலும் திருமாங்கல்யத்திலும் வைத்தான்.
எத்தனை நாள் கனவு இது. மாமன் கையால் தாலி, அவன் கையால் இடும் குங்குமம் என்று அவள் ஆசை ஒவ்வொன்றாக நிறைவேறினாலும் எதோ ஒரு இனம் புரியாத சோகம் அவள் மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது அது அவளின் கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர் வழியே வெளிப்பட்டது.
அவளின் கண்ணீரை துடைத்தவன் அவளின் கைப்பற்றி , "நா இருக்கேன்" என்று கூறி அவன் கண்களை மெல்ல மூடி திறந்தான் . பிறகு, ஹாலில் மாட்ட பட்டிருக்கும் அவனின் அம்மா தனலக்ஷிமி படத்திற்கு அருகே அழைத்து சென்றவன்,
"நம்ம ஒன்னு சேரனும்னு நம்மள விட ரொம்ப ஆச பட்டவங்க அம்மா தான். அவங்க நிச்சயம் நம்ம கூட தெய்வமா இருந்து நம்மள நல்லா வாழ வப்பாங்க. மனச போட்டு கொழப்பிக்காத தமிழ்", என்று அவன் கூற சரி என தலை அசைத்தாள்.
பிறகு ஏதேதோ பேசி அவளை சமாதானம் செய்தவன் அவளோட சேர்ந்து மற்ற பொருட்களை அடுக்க ஆரம்பித்தான்.
ஒரு வழியாக எல்லா வேலையையும் முடித்த போது மாலை நேரம் ஆகிவிட்டது.பால் காய்ச்சுவதற்காக அனைவரையும் அழைக்கலாம் என்று முடிவெடுத்தனர். முதலில், பெரியவர்களாகிய குருமூர்த்தி தாத்தாவையும் கஸ்தூரி பாட்டியையும் அழைத்து விட்டு, பின்னர் ஈஸ்வரியின் வீட்டிற்கு சென்றும் அழைப்பு விடுத்தனர்.
முதலில் தாத்தாவும் பாட்டியும் வீட்டிற்கு வந்தனர். சிறிது நேரத்திலேயே ஈஸ்வரி தன் கணவர் மற்றும் மகள் பூங்கொடியுடன் வந்தார். பால் காய்ச்சும் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.