“நீங்க சொல்றது சரிதான் நானும் கேள்விபட்டிருக்கேன் . .ஆனா மூலிகை மருத்துவத்துல உடம்பு குணமாக ரொம்ப டைம் எடுக்கும் இல்லயா? . . சோ பிராக்டிகலா இது சரிபட்டு வருமா?”ஆகாஷ் நிதானமாக பேசினான். “தப்பா நினைக்காதீங்க என்னோட சந்தேகம் இது அதனால கேட்டேன்” என முடித்தான்.
“செல் போன் லேப்டாப் இப்படி எல்லாத்துக்கும் ஒரு கட்டத்தை தாண்டினா அதுக்கு சார்ஜ் தேவை . . ஆனா இந்த உடம்புக்கு என்னிக்காவது தேவையான . . அதுவும் சரியான அளவு சார்ஜ் கிடைச்சிருக்கா . . ஐ மீன் சரியான அளவு உறக்கம் உணவு பழக்கவழக்கங்கள. எதையும் வாழ்க்கை முழுக்க சரியா செய்ய மாட்டீங்க ஆனா ஒரு செகண்டுல எல்லாம் சரியாகணும் . . இது என்ன மேஜிக்கா?”
“நம்ம முறையற்ற வாழ்க்கை முறைதான் எதிரிக்கு மூலதனம்”
“ சிலர் நம்ம நாட்டுல இருந்து ரொம்ப அபூர்வமான மருத்துவ மூலிகையை கடத்தி அதையே வேற மருந்தா மாத்தி . . கோடி ரூபாய்க்கு விக்கறான் . . நாமளும் வெளி நாட்டுல இருந்து வரதுதான் உசத்தின்னு முட்டாள்தனமா வாங்கறோம்”
“இங்க இருக்கற மூலிகைகளோட அருமை நம்மளைவிட அவனுக்கு தெரிஞ்சிருக்கு . . அதனாலதான கடத்திட்டு போறான்”
ஆகாஷால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பாலும் இருக்க இயலவில்லை. அவன் முகமே அதை காட்டியது.
“நாம வாங்குற சில மருந்துகள்ல கம்போசிஷன்னு இருக்கும் . . அதை என்னிக்காவது பார்த்தது உண்டா? அதுல அந்த குறிப்பிட்ட மருந்து தயாரிக்க தேவையான பொருட்களும் அதன் சதவீதமும் இருக்கும். மூலிகைகளுக்கு கெமிகல் நேம் கொடுத்து சில சமயங்கள்ல பேரு புரியாத மாதிரி வரும்.”
“எல்லா மருந்துகளையும் குற்றம் சொல்ல முடியாது . . ஆனா சிலது கடத்தபட்டது”
“ஒ.கே. போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாம் இல்லனா இங்க ஆசிரமம் இருக்கு அங்க இருக்கிற சுவாமிஜிகிட்ட சொல்லலாம்” என்றான்
அவர் விரக்தியான புன்னகையைதான் பதிலாக கொடுத்தார்.
அவருடன் பேசியவனுக்கு பல அரிய மற்றும் அதிர்ச்சி தகவல்கள் தெரிந்தது. தன் நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற வேதனையும் மேலோங்கியது. வெறுமே வெளிநாட்டில் இருந்தபடி விளையாட்டிற்கு சப்போர்ட் செய்தால் மட்டும் போதாது என தோன்றியது.
மூன்று மணி நேரம் கழித்து ஆசிரமத்திறக்கு வந்தவனுக்கு பசி தாள முடியவில்லை. உணவை முடித்தவனுக்கு அப்போதுதான் யாரும் அறியா வண்ணம் தன்னோடு அறையில் இருக்கும் மற்றொருவரின் நினைவு வந்தது.
கொஞ்சம் உணவை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தவன். அவருக்கு உணவை அளித்தான். இத்தனை நேரம் பசியில் விட்டதால் கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.
“ஸாரி ஸாரி சுகி . . முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருந்த்துல மறந்துட்டேன்” என கிசுகிசுத்த குரலில் மன்னிப்புக் கேட்டான்.
அத்தனை சீக்கிரம் சுகிக்கு கோபம் குறையவில்லை.
“கமான் சுகி . .சாப்பிடு உனக்கு இங்க நிறைய வேல இருக்கு . . சாப்பிட்டு ஹெல்தியா இருந்தாதானே . . வேல செய்ய முடியும் . . நீ என் ஸ்வீட்ஹார்ட் தானே” என தாஜா செய்து ஒருவழியாக சாப்பிட வைத்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் ஆசிரமத்தை சுற்றி வருவது மட்டுமே வேலையாகக் கொண்டான். மூலிகையை கடத்திய இருவரும் ஆசிரமத்தில் எந்த கட்டுபாடும் இன்றி சகஜமாக உளாவினார்கள்.
மூலிகையை மருந்தாக மாற்றும் அறைக்கு மட்டும் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த அறைக்கு சாளரங்கள் எதுவும் இல்லை. சராசரியைவிட உயரம் அதிகமாக இருந்தது.
முதியவர்களுக்கு தானும் உணவை தட்டில் வைத்து எடுத்துக் கொடுத்தான். தண்ணீர் கொடுப்பது போன்ற வேலைகளை செய்தான். ஒருநாள் தனக்கு அருகில் சுவாதி நின்று வேலை செய்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் இவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவள் கவனம் வேண்டியே தண்ணீர் கோப்பையை கீழே போட்டான்.
“பரவாயில்ல விடுங்க நான் பாத்துக்கிறேன்” என அவள் உதவிக்கு வந்தாள்.
“ஸாரி இந்த வேலை அவ்வளவா பழக்கமில்ல” என ஆகாஷ் கூற
“ஸாரிலாம் எதுக்கு?” என இடத்தை துடைத்தாள்.
தன்னை அறிமுகப்படுத்தி அவள் பேரை கேட்டான் தெரியாத்தைப் போல …
“நீங்க இங்க என்ன பண்றீங்க?”
“நீங்க இங்க ரெண்டு நாளா என்ன பண்றீங்களோ அதையே தான்” என சாதாரணமாக சொன்னாள்.
அவனுக்கு சுருக்கென்றது தன்னை அவள் நோட்டமிடுகிறாளா என சந்தேகம் ஏற்பட்டது.
“நீங்க சொன்னது புரியல” என்றான்
“அமைதிய தேடி இங்க வந்திருக்கேன் . . நீங்களும் இதை தானே சொன்னீங்க சுவாமிஜிகிட்ட” என சாதாரணமாய் பேசினாள்.