இதையெல்லாம் கேட்ட போது அருள்மொழிக்கு மிகவுமே குற்ற உணர்வாகிவிட்டது. நிச்சயதார்த்தம் அன்று அவள் தானே சுடரிடம் அதிகப்படியாக பேசிவிட்டாள். அதற்குப்பிறகு அவள் முகமே மாறிவிட்டதை அவளும் கவனித்தாளே, அதன்பின் அமுதன் சுடரைப்பற்றி சொல்லி அவளுக்கு புரிய வைத்த பின் சுடரொளியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள்.
ஆனால் அதற்குள் கதிரவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே அந்த பதட்டத்தில் அப்போது அவளால் மன்னிப்பு கேட்க முடியவில்லை. அதன்பின் சுடர் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை.
“நான் இன்னும் சுடர்க்கிட்ட மன்னிப்பு கூட கேட்கல அமுதன்..” என்று அமுதனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது,
“முடிஞ்சதை விடு.. இனி நீ சுடர்க்கிட்ட நல்லப்படியா நடந்துக்கோ.. நடந்ததுக்கு மன்னிப்பு கேட்கணும்னு சுடர் எதிர்பார்க்கமாட்டா.. அன்னைக்கு நடந்ததை சுடர் யார்க்கிட்டயாச்சும் சொன்னாளா? இல்லல்ல, அதனால அதை நீயும் மறந்திடு..” என்று அவன் சொல்லியிருந்தான்.
ஆனால் அது இப்படி ஒரு பிரச்சனையை கொண்டு வந்து சேர்த்திருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. புகழேந்தியும் பூங்கொடியும் வருவதற்கு முன்பு தான், மகி இப்போதெல்லாம் எப்போதும் ஏதோ சிந்தனையோடு சோர்வாக இருப்பது போல் தெரியவும், அறிவழகனிடம் என்ன என்று அவளும் இலக்கியாவும் கேட்டுக் கொண்டிருந்த போது,
“சுடர் எதுக்கோ மகி மேல கோபமா இருக்கா போல.. அவனுக்கு என்ன காரணம்னு கூட தெரியல..” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போதிலிருந்தே அவளுக்கு உறுத்தல் தான், இதில் புகழேந்தி சொன்ன விஷயத்தை கேட்டு அந்த உறுத்தல் இன்னும் அதிகமாக, உடனே விஷயத்தை மகியிடம் சொல்வதற்குச் சென்றாள்.
புகழேந்தி விஷயத்தை சொன்ன போது மகியும் அங்கு தான் இருந்தான். சுடரின் பதில் என்னவென்று தெரிந்ததும் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். இப்படி ஏதோ வரப்போகிறது என்று அவனுக்கு தெரிந்து தான் இருந்தது. ஆனால் சுடர் இப்படி ஒரு முடிவெடுத்த காரணம் புரியாமல் அவன் தவித்துக் கொண்டிருக்க, அறைக்குள் வந்த அருள்,
“மகி நீ அத்தை மாமாக்கிட்ட சுடர் சொன்ன பதிலை நினைச்சு தானே கவலைப்பட்ற.. எதனால் அவ இப்படி நடந்துக்கிறான்னு உனக்கு தெரியலல்ல.. ஆனா எனக்கு காரணம் தெரியும் மகி..” என்று கூறிய போது,
“என்ன காரணம் தெரியுமா? என்ன சொல்ற அருள்.. எதுக்காக சுடர் இப்படியெல்லாம் நடந்துக்கிறா..” என்றுக் கேட்டான்.
“அதுவந்து மகி.. சுடர் இப்படி நடந்துக்கிட்டதுக்கு காரணம் நான் தான் மகி.. நான் தான் சுடர்க்கிட்ட மோசமா நடந்துக்கிட்டேன்..” என்றவள், நிச்சயம் அன்று நடந்த விஷயத்தையும் அதன்பிறகு அமுதனோடு சுடர் பற்றி பேசியதையும் கூறினாள்.
அதைக்கேட்ட மகி அப்படியே தளர்ந்து போய் அமர்ந்துவிட்டான். அருள் இப்படி பேசியிருப்பாள் என்று அவன் நினைத்து பார்க்கவேயில்லை, அந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவனாக,
“என்ன அருள்.. நீ இப்படி சுடர்க்கிட்ட பேசியிருப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. சுடர் உன்னை பத்தி யோசிக்காம ஒரு தப்பு செஞ்சிருக்கா தான், நான் இல்லன்னு சொல்லலை.. ஆனா அன்னைக்கு உனக்கும் எனக்கும் நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திட்டு சுடர் கழுத்துல தாலி கட்டினது நான் தான்.. அப்போ நீ என்மேல தானே கோபமா இருக்கணும்..
அப்போக்கூட அந்த நிச்சயம் நடக்கறதுல உனக்கும் விருப்பம் இல்லை தானே.. அப்போ எதுக்கு கோபம்? நான் சுடர் கழுத்துல தாலி கட்டினது தப்புன்னு சொல்லல.. அப்படி ஒரு சூழ்நிலையை நானே உருவாக்கிட்டேனே அதை தான் தப்புன்னு சொல்றேன்.. யாராச்சும் இரக்கத்துல தாலி கட்டுவாங்களா? நான் சுடரை காதலிக்கிறேன் அருள்.. அதை அவளால தான் புரிஞ்சிக்க முடியலன்னா.. உன்னாலயுமா புரிஞ்சிக்க முடியல..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
இப்போதுமே உன்மேலேயோ சுடர் மேலேயோ தப்பு சொல்ல முடியாது. அன்னைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் பேசினப்பவே உன்கிட்ட வெளிப்படையா என்னோட மனசுல என்ன இருந்ததுன்னு சொல்லியிருக்கணும்.. இல்ல அன்னைக்கு சுடர் கேட்டப்பாவவது சொல்லியிருக்கணும்.. ஆனா இந்த ரெண்டையும் நான் செய்யல.. அதுதான் இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு..
இப்போதும் சுடர் இப்படி ஒரு முடிவெடுத்ததுல எனக்கு கோபமோ வருத்தமோ இல்ல.. ஆனா பயமா இருக்கு.. இதுவரைக்கும் என்னோட மனசுல இருந்ததை யார்க்கிட்டேயும் சொன்னதில்ல.. இப்போ உன்கிட்ட சொல்றேன்.. அன்னைக்கு சுடர் லண்டன் போக முடிவு செய்யல.. இந்த உலகத்தை விட்டே போக முடிவு செஞ்சுட்டா தெரியுமா?
“அய்யோ என்ன சொல்ற மகி..”
“ஆமாம் அருள்.. அவ தூக்கத்துல உளருனா.. எனக்கு இந்த விஷயம் தெரியும்னு அவளுக்கு தெரியாது. அன்னைக்கு நான் மட்டும் அவளுக்காகன்னு போகாம இருந்திருந்தா, சுடர் இன்னேரம் நமக்கு இல்ல அருள்.. எந்த கடவுள் என்னை இயக்கினாரோன்னு எப்போதுமே நினைச்சுப்பேன்.. அதனால தான் அவளை எப்போதுமே என்கூடவே வச்சிக்கணும்னு நினைக்கிறேன்.. இப்போ இப்படில்லாம் அவ முடிவெடுத்துட்டு அதால அவளே கவலைப்பட்டு ஏதாச்சும் செஞ்சுக்குவாளோன்னு எப்போதும் திக் திக்னு இருக்கு அருள்..”
“கவலைப்படாத மகி.. இப்போ சுடர் இப்படி ஒரு முடிவெடுத்ததுக்கு காரணம் நான் தானே.. அதனால நானே போய் அவளுக்கு பேசி புரிய வச்சு, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்..”
“நீ போய் பேசுனா அவ மனசு மாறுவான்னு எனக்கு தோனல.. ஏன் இப்போ நானே போய் பேசினாலும் வீம்பு பிடிச்சிக்கிட்டு இதையே தான் சொல்லுவா.. அதான் ரொம்ப கட்டாயப்படுத்தினா லண்டனுக்கே போயிடுவேன்னு மிரட்டினாளாம்மே..
அதனால் சாதாரணமாக பேசினா சரியா இருக்காது.. இதுக்கு வேற வழி தான் யோசிக்கணும்.. இப்போ உனக்கு சுடர் மேல கோபம் இல்லல்ல.. அதனால அவக்கிட்ட போய் நீ பேசினதுக்கு மன்னிப்பு கேளு.. அவளோட ப்ரண்ட் ஆகு.. எப்படியும் இந்த கல்யாணத்துக்கு அவ வர மாட்டேன்னு சொல்லி அடம்பிடிப்பா..
அதனால அவளை கல்யாணத்துக்கு வர வைக்கிறது உன் பொறுப்பு.. அதுக்குப்பிறகு நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.. என் மேல கோபம், வருத்தம்னு இருந்தாலும் முன்ன போல தப்பான முடிவுக்கு போக மாட்டான்னு தான் நினைக்கிறேன்.. ஆனாலும் கொஞ்சம் எப்போதுமே அவக் கூட யாராச்சும் இருங்க.. அவளை தனியா விட்றாதீங்க.. ஏதாவது விபரீதமா யோசிக்கப் போறா.. கல்யாணம் வரைக்கும் இதெல்லாம் செஞ்சா போதும், அதுக்குப்பிறகு நான் பார்த்துக்கிறேன்.. என்ன செய்வீயா அருள்..” என்று கேட்டதும் அருள் ஒத்துக் கொண்டாள்.
அதன்பின் அருள்மொழியின் அடுத்த வேலை சுடரொளியை சந்தித்து மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல், ஒரு நல்ல தோழியாகவும் சகோதரியாகவும் நடந்துக் கொண்டாள். மகி சொன்னது போல திருமணத்திற்கு வர மாட்டேன் என்று அடம்பிடித்தவளை, எதையெதையோ பேசி திருமணத்திற்கு வர வைத்தாள். இனி மகி என்ன செய்யப் போகிறான்?