தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 08 - சகி
சில பொழுதுகளில் நெருங்கிய ஒருவரின் விலகலானது நமது வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்துவிடும். காலம் உள்ளவரை இவர் உடனிருப்பார் என்ற எண்ணத்தில் நாம் பழகியவர் சந்தர்பங்களால் நம்மை தியாகம் செய்யும் பொழுதினில் உலகமே நமக்கு எதிராக சுழல்வதாய் எண்ணம் தோன்றும், உறவுகள் அற்ற அச்சம் உணர்வுகளை பாதிக்கும். சிலர் வாழ்வையே முடிக்க பிராயதனம் மேற்கொள்வர், சிலர் அன்பிற்காக மண்றாடுவர், சிலர் உலக வாழ்வினை வெறுப்பில் ஆழ்த்துவர். இவ்வாறு செயலாற்றுவதால் என்ன பலன் கிட்டிவிடும்? வேண்டிய அன்பு கிட்டிவிடுமா? தெளிவாக சிந்தனை செய்யுங்கள், ஒருவர் தங்களின் பவித்ர அன்பிற்கு மரியாதை அளிக்கிறார் என்றால் அங்கு யுத்தங்கள் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்றாலும், தங்களின் பவித்ர பிரியத்தை அவர் தலைக்கவிழ அனுமதிக்க மாட்டார். அப்படி அனுமதிக்கிறார் எனில், தலை நிமிர்த்தி அவர் விழிகளை நோக்கி கூறுங்கள், காலம் எனக்கான நியாயத்தை மீட்க உன்னை ஒருநாள் குற்றவாளியாய் நிற்க வைக்கும் என்று!!விலக முயற்சிப்பதை விடவும், நிகழ்ந்த அசுபத்தை ஏற்றுக் கொள்ள முயற்சிப்பதே அத்துன்பத்திலிருந்து நம் ஆன்மாவை மீட்பதற்கான சிறந்த வழியென இருக்கும். அன்பு என்று தூய்மையானது தான்! அன்பை பெற நாம் தேர்ந்தெடுக்கிறவர்கள் மட்டுமே களங்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
மனதினில் சஞ்சலங்களோடு கோவில் மணியை அடித்தான் ஆதித்யா. அனைத்துத் துயரத்தையும் இறைவன் பாதத்தில் சமர்ப்பிக்கும் போது அவ்வளவு நிம்மதி இதயத்திற்கு கிட்டிவிடுகிறது!! நீண்ட நேரமாக தனது இறைவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பரந்த குணம் கொண்ட பரம்பொருளுக்கு தன் பக்தனை விடவும் வேறு கதி உண்டோ? தூய்மையான அன்பு பக்தியும், சமர்ப்பணமும் உள்ள இடத்தில் அல்லவா விளைகிறது!! எனில், தன்னையும், ஆலய வாயிலையும் பரபரப்பாக நோட்டமிட்ட அந்த வயது முதிர்ந்த அர்ச்சகரை அவன் கவனிக்காமல் இல்லை. குழப்ப நிலை நீங்கியதும், இரு கரம் இணைத்து இறைவனை பணித்தவன், இல்லம் செல்ல இயன்று நின்றான்.
"தம்பி! ஒரு நிமிடம்பா!" எதிர்நோக்கியது போல தடுத்தார் அர்ச்சகர்.
"சொல்லுங்க!" பணிவோடு ஒலித்தது அவன் குரல்.
"வர கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை வர பிரதோஷம்..." நேரம் கடத்த வேண்டும் என்றே பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிந்தது அவருக்கு! திடீரென அவர் முகம் பளிச்சிட,
"ஒண்ணுமில்லைப்பா, கொஞ்சம் விஷேசமான பிரதோஷம்! இங்கே இருமுடி கட்டுவாங்க, நீயும் வந்து பார்த்துட்டு போ சரியா?" சரியென தலையசைத்து திரும்பியவனின் எதிர்பட்டார் இராகவன். வந்தப் பணி முடிந்துப் போக விலகிக் கொண்டார் அந்த அர்ச்சகர். மனம் விலகிய குழப்பங்கள் யாவும் மதி ஏறி கொண்டன. தனயனைக் காணும் மாத்திரத்தில் ஏற்பட்ட அன்பு கண்ணீராய் மாறி வெளியேறியது அவருக்கு! எப்படி வளர்ந்துவிட்டான் அவன்! பலமுறை தொலைக்காட்சியில் இவனைப் பற்றி கூறி கௌரவப்படுத்துவர், அவன் என் மகன் தான் என்பது அந்தத் தந்தையின் மனதையும் கௌரவப்படுத்தியது.
தன்னைக் காண இவர் வந்திருக்கிறாரா என்பதே அவன் கட்டுப்படுத்திய பந்தத்தை கரை உடைய வைத்தது. தந்தையின் கண்களிலிருந்த கண்ணீர் மனதை காயப்படுத்தியது. எத்தனை வருட அன்பிற்கான ஏக்கம் அதில்!!! எனினும், அங்கிருந்து விலகவே முயன்றான் அவன்.
"ஆதி! ஒரு நிமிடம்! கொஞ்சம் தனியா பேசணும்! ஒரு பத்து நிமிடம் தான்! ப்ளீஸ்...".குரல் அடைத்தது அவருக்கு! மறுக்க முனைந்தும் மறுக்க இயலவில்லை அவனால்! தந்தையின் அன்பிற்கு அவனும் ஏங்கி இருக்கிறான். தாயாரின் அன்பு, தந்தையின் இடத்தினை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.
"வாங்க!" எவருமே இல்லாத குளக்கரையை அடைந்தனர் அவர்கள். இலக்கே இன்றி தடாகத்தினை வெறித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.
"எப்படி இருக்க ஆதி?" அவனிடம் பதில் இல்லை.
"த...தர்மா எ...எப்படி இருக்கா?" கேட்கும் போதே கண்ணீர் பீறிட்டது அவர் குரலில். அவர் குரலில் இருந்த காதலை அவன் மனம் உணர்ந்துக் கொண்டது.
"நல்லா இருக்காங்க!" வேறு எந்த உரையாடலும் நிகழவில்லை சில நொடிகளுக்கு!!
"இத்தனை வருடத்துல என்னை மன்னிக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா?" அவனிடம் பதில் இல்லை.அடுத்து பேச தயங்கினார் இராகவன்.
"தோணுச்சு!" மௌனத்தை உடைத்தது அவன் குரல்!
"ஆனா, மன்னிக்கிற அதிகாரம் என்கிட்ட இல்லை. அம்மாக்கிட்ட இருக்கு! அன்னிக்கு நடந்தது எல்லாம் விபத்து தான்! ஆனா, நீங்க உண்மையை ஏற்று இருக்கலாம்! பழியை பார்க்காம பாசத்தை பார்த்திருக்கலாம். அம்மா நிச்சயம் உங்களை மன்னித்திருப்பாங்க! இன்னிக்கு வரை உடையானுக்குத் தன்னுடைய அப்பா யாருன்னு தெரியாதுப்பா! அவன் உலகமா நினைத்துக் கொண்டிருக்கிறது எல்லாம் அம்மாவை மட்டும் தான்! நீங்க உயிரோட எங்கோ இருக்கீங்கன்னு அவன் தெரிந்துக் கொண்டிருப்பதே அம்மா கழுத்துல கட்டி இருக்கிற தாலியையும், நெற்றியில் வைக்கிற குங்குமத்தை பார்த்துத் தான்! ஆனா, இப்போ கூட அவனைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்க கேட்கலையேப்பா!" கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது அவனுக்கு!!
"நான் உங்களை எப்போதும் வெறுத்தது இல்லை. ஆனா, அவன் என்னுடைய தம்பி ! அவனுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரம் கிடைக்காம நான் உங்களை நிச்சயம் ஏற்றுக்க