என்னனா, ஏதோ ஒரு வகையில் செல்வம், நீ, உன்னோட கனவு மூணும் லிங்க் ஆகுது. இது நமக்குப் பாதுகாப்புதான். உன்னோட கனவில் சில நிகழ்வுகள் முன்னாடியும், சிலது பின்னாடியும் வருவதாக சொன்னதால், பெரியதாக தீங்கு நடப்பதாக இருந்தால், அந்தக் கனவே உனக்கு எச்சரிக்கை கொடுக்கும் என்று தோன்றுகிறது. இந்த செல்வம் பிரச்சினை முடிஞ்சதும், உனக்கு கனவு வர்றதும் நின்னுடும். “ என்று நீளமாகப் பேசியவன் , கிருத்தியின் முகத்தைப் பார்க்க அவள் கிட்டத்தட்டத் தூங்க ஆரம்பித்து இருந்தாள்.
கையில் இருந்த போனினால் அவள் கையைத் தட்ட, திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள். எதிரே ப்ரிதிவி முறைத்துக் கொண்டு இருக்கவும், ஏன் என்று யோசித்தவள், அவன் ஏதோ சொல்லிக் கொண்டு இருந்ததை உணர்ந்தாள். அசடு வழிந்தபடி,
“சொல்லுங்க பாஸ்” என்றாள்.
“எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கேன். தூங்கறியா நீ?” என்றான் ப்ரித்வி.
“ம்ம்ச். நானே நீங்க சொன்னதை எல்லாம் யோசித்துப் பார்த்துப் புரிஞ்சிகிட்டேன். இப்போ எனக்கு என்ன கேள்வின்னா, நான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டப் போகனுமா? “
“ஹேய், அது எல்லாம் வேண்டாம். ஒரு வகையில் கனவு வருவது உனக்கு ஒரு முன்னெச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். அதனால் இப்போத் தேவை இல்லை. “
“சரி பாஸ். நான் சொல்ல வேண்டியதச் சொல்லிட்டேன். இனிமே என்ன பண்ணணுமோ பார்த்துப் பண்ணுங்க. “ என்றுக் கிளம்ப முயன்றாள்.
“கிருத்தி, ப்ளீஸ் கேர்புல்லா இரு. எங்கியும் தனியாப் போகாத. முடிந்த வரை பிரெண்ட்ஸ் கூடப் போயிட்டு வா. “ என்று பரிதவிக் கூற, சரி என்று தலையாட்டினாள்.
இவர்கள் மீண்டும் ஷோ நடக்கும் இடத்திற்குச் செல்ல, அங்கே ஷோ முடிந்து இருந்தது. மாணவர்கள் அனைவரும் வெளியில் வர, ஒரு சிலர் முகம் வருத்தத்தைக் காமிக்க, ஒரு சிலரின் முகமோ பிரமிப்பைக் காட்டியது. மீதி இருப்பவர்கள் பெரிதாக எதுவும் காமிக்கவில்லை.
எல்லோரும் மீண்டும் ராணாவின் சிலை அருகே வந்து செல்பி எடுத்துக் கொண்டனர். முதலிலும் எடுத்தாலும், அது ஒரு ஆர்வத்தில் எடுத்ததே. தற்போது அவரைப் பற்றித் தெரிந்த பின்பு, ஆச்சர்யத்தில் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.
ராகவி மற்றும் அவள் தோழிகள் சிலர் கிருத்தி இருக்குமிடம் வர, ப்ரித்வியும் அங்கிருந்து கிளம்ப முயன்றான். அப்போது ராகவி
“சார், ராணாப் பற்றித் தெரிந்து கொண்டது ரொம்ப நிறைவா இருக்கு. ஆனால் சில இடங்கள் கஷ்டமா இருக்கு. அதைப் பற்றிக் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணலாமா?” என்றுக் கேட்டாள்.