தவறாக தோன்ற ஆரம்பித்து விட்டது. அதற்கேற்றார் போல் நம்மிலும் மாற்றம் வந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன ஒரு சில இடத்தில் மெதுவாக ஆமை வேகத்தில் என்றால், ஒரு சில இடங்களில் ராக்கெட் வேகத்தில் இருக்கு”
மற்றவர்களும் ஒத்துக் கொள்ள, இப்போது மாணவர்களில் திலிப் எழுந்து,
“பாஸ், நமக்கு ஏன் இது எல்லாம் பாடமா இல்லை. குறிப்பிட்ட ஒரு சிலதுதான் தெரிஞ்சிக்கிறோம். “ என்றுக் கேட்டான்.
“இது ஒரு விதத்தில் சிக்கலான விஷயம். நாம பன்முகத்தன்மை கொண்ட நாடுன்னு சொல்லிருக்கோம். அப்போ நிறைய கலாச்சாராம், மொழின்னு வேறுபாடுகள் அதிகம். அதில் எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லைன்னு இருக்கோம். அது சரி தவறு என்பதைத் தாண்டி நடைமுறையில் தற்போதைக்கு இது மட்டுமே பாசிபிள். ஆனால் நம்ம கல்வி முறையில் பொது மொழின்னு ஆங்கிலமும், தாய்மொழின்னு அவரவர் வட்டார மொழியும் கற்றுக் கொள்கிறோம். அதோட ரிசல்ட் நம்ம நாட்டு இலக்கியம், வரலாறு எல்லாமே நமக்கு அரைகுறையா மட்டுமே தெரியும். “
இதையும் எல்லோரும் ஆமோதித்தனர். அதற்குப் பின்னும் மேலும் அவர்கள் ஷோவில் பார்த்த சில சம்பவங்களுக்கும் விளக்கம் கேட்க, ப்ரித்வியும் தனக்குத் தெரிந்தவரை பதில் கூறினான்.
இந்த இடைவெளியில் நன்றாகத் தன்னைச் சமாளித்துக் கொண்ட கிருத்திகா, தனக்கு என்ன ஆயிற்று என்ற யோசனையோடு ராகவியிடம் கேட்கக் போக, அவளைக் கண்ணாலே தடுத்து நிறுத்தினான் ப்ரித்விராஜ்.
அதற்குப் பிறகு உதய்பூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மான்சூன் அரண்மனை நோக்கிச் சென்றனர். மேகங்களை அருகில் பார்க்கவும், பருவ காலநிலைகளை அனுபவிக்கவும் சாஜான் சிங் என்ற ராஜாவால் கட்டப்பட்டது இந்த அரண்மனை. எந்தக் காலத்திலும் இனிமையான காலநிலையில் இருக்கும். சித்தூரை தூரத்தில் இருந்தாவது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் ஜன்னல்களும், தாழ்வாராங்களும் அத்தனை அருமையாய் இருந்தது. அத்தோடு அரண்மனையில் உள்அலங்காரம் வியப்படைய வைத்தது. இதுவும் முற்றிலும் சலவைக் கல்லால் ஆன மாளிகையே.
அன்றையப் பொழுது அத்தோடு முடிந்து போக, மறுநாள் பார்க்க இருக்கும் இடங்களைப் பற்றி மேலோட்டமாக குறிப்புக் கொடுத்து விட்டு எல்லோரையும் அவர்கள் அறைக்கு அனுப்பிவைத்தான் ப்ரித்விராஜ். கிருத்திகாவும் தங்கள் அறைக்குச் செல்ல முயல, அவளைப் பேர் சொல்லித் தடுத்து நிறுத்தினான்.
என்னவென்றுத் திரும்பிப் பார்த்தவளை,
“ஹேய், இன்றைக்கு உன் கனவில் என்ன நடக்குதுன்னு காலையில் சொல்லு. அத்தோட அந்த ப்ரித்வி என்னை மாதிரி பெர்சொனலிட்டியான்னும் சேர்த்துப் பாரு” என்றுக் கூறவும், கிருத்தி சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றாள்.
தொடரும்!