பிரசன்னலீலாவுக்கும் சற்றே நிம்மதியாகவே முடிந்தது.
சுவாரஸ்யமான தினத்தை அவர்களுக்கு வழங்கும் ஆர்வத்தோடு பொழுது புலர்ந்தது!
" அப்பா இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?"
" உன் இஷ்டம் டா செல்லம் "என்றார் வித்யாவின் அப்பா.
" தினமும் இதையே சொன்னா என்ன தான் பண்ணுவேன் நான் ?"
"என்னடாமா பண்ண முடியும்? உண்மையை சொல்லனும்னா எனக்கு என் கையாலே என் பொண்ணுக்கு சமைச்சு கொடுக்கணும்னு ஆசையா இருக்கு! ஆனால் என் நிலைமையை பாத்தியா?" கட்டிலில் படுத்திருந்தபடி அவர் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.
எப்போதும் அவர் இதைக் கூற கேட்டதாலோ என்னவோ இதுபோன்ற சூழ்நிலையில் சோகமாக மாறுவதை நிறுத்த கற்றுக்கொண்டாள் நித்யா.
" இப்ப என்னப்பா? நீங்க நல்லா ஆயிட்ட பிறகு எல்லா வேலையும் நீங்கதானே செய்ய போறீங்க? அப்படி இல்லன்னா கூட நல்லா வீட்டு வேலையெல்லாம் செய்கிற பையனா பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஓகே வா ?" என்றாள் குறும்புடன் .
" கல்யாணமா? அதை நீ எப்போ பண்ணுவேனு தானே நானும் காத்திருக்கேன் ? ஆனா நீதான் பிடி கொடுக்கமாட்டேன்னு இருக்கியே . இப்ப சொல்லு செல்லமா.. நீ கல்யாணத்துக்கு ரெடினு சொன்னாலே நான் பாதி குணமாயிடுவேன் . உனக்கு ஒரு நல்ல ராஜகுமாரனை பார்த்து கட்டி வைப்பேன்" என்று மீசையை நீவி கொண்டார் அப்பா .
" அதானே! எனக்கு கல்யாணம்னு சொன்னா மட்டும் உங்களுக்கு தெம்பு வந்திடுமே ! அட போங்கப்பா ! அப்படி ராஜகுமாரன் யாரும் வர வேணாம் " என்று அவள் சொல்லி வாயை மூடுவதற்குள் கார்முகிலனின் விசையுந்து அவள் வீட்டில் சரேலென்று வந்து நின்றது.
" இருங்க அப்பா யாருன்னு தெரியல! நான் போய் பார்க்கிறேன்.." என்றவள் ஏதோ ஒரு உள்ளுணர்வில் தனது தந்தை இருந்த அறை கதவை லேசா சாத்திவிட்டு வாசலுக்கு சென்றாள்.
இவனா? அது எப்படித்தான் காதல் , கல்யாணம் இதெல்லாம் பேசும்போது நேரடியாக வந்துவிடுவானோ தெரியல ! மோப்ப சக்தி இருக்கா தெரியல ! இதை வாய்விட்டுச் சொன்னால் நடக்கும் களேபரத்தை உணராதவள் இல்லையே நித்யா! அதனால் மைண்ட் வாய்ஸ்இல் இன்னும் கொஞ்சம் அவனை தாளித்துவிட்டு வெளியே என்னவென்று கண்டுபிடிக்க முடியாத பாவத்தோடு அவனருகே சென்றாள்.