தற்போது கிரண் தேவி வாய் திறந்தாள்.
“அவர் பிகானர் இளவரசர் வீரரே. நம் ரானா மகாராஜால் இங்குள்ள விவரங்கள், படை பலம் பற்றி அறிய தேர்ந்தெடுக்கப் பட்டவர்” என்றுக் கூறவும்,
“அஹா.. இளவரசரின் வீரமும் நான் நன்கு அறிந்து உள்ளேன். தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பும் , உடனிருப்பும், ரானவிற்கான வெற்றியை நிச்சயப் படுத்துகின்றன.” பதில் சொன்னான் வியாபாரி.
“உண்மைதான் ராம்சந்த்” என்றாள் ராணி.
“தங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதா ராணி?”
“ஏன் இல்லை ராம்சந்த்? சிறு வயதில் காகூவின் மடியில் நான் அமர்ந்து இருக்கும் போது, நீங்கள் இருவரும் ரகசியமாக பேசிக் கொள்வீர்களே. “
“ஆம் ராணி. நான் தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை. அதிலும் இப்படி ஒரு வேடத்தில் வருவீர்கள் என்று எண்ணவேயில்லை.”
“போதும் ராம்சந்த். நாம் அதிக நேரம் தாமதிக்க முடியாது. விவரங்கள் மட்டும் சொல்லு”
“உத்தரவு இளவரசே” என்ற ராம்சந்த், “எனக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை, இங்கே அக்பர் இருப்பிடம் பற்றிய விவரங்கள் அறியவேண்டும். நாங்கள் ஒரு குழுவாக இந்த நகரை முழுதும் சுற்றி வருகிறோம். கோட்டை வாயில் அருகில் கூட செல்ல முடியவில்லை. ஆனால் மற்ற விவரங்கள் வீரர்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.”
“சொல்”
“லட்சத்திற்கும் அதிகமான படை வீரர்கள் அக்பரிடம் இருக்கிறது இளவரசே. யானைப் படையும், புரவிப் படையும் மட்டுமே இருபதினாயிரத்திற்கு மேல் இருக்கிறது. மேலும் ஆயுதக் குவியலும் தனியாக இருக்கிறது. ஒரு வீரருக்கு குறைந்த பட்சம் பதினைந்து ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன.”
“ஒஹ். எனில் அக்பர் போரிடுவதில் ஏன் இன்னும் தயக்கமாக உள்ளார்?”
“அதைப் பற்றிய எனக்கு ஒரு யூகம் உண்டு. தவறாகவும் இருக்கலாம்.”
“சொல்லு”
“அவர் நம் ராணாவை இத்தனைப் படைக் கொண்டு வெல்வது எளிது. ஆனால் ராணா கைது செய்யப்பட்டாலோ, போரில் இறந்தாலோ, மேவார் ஸ்தம்பித்து விடும். அதன் பின் விளைவுகள் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்ற எண்ணம் இருக்கலாம். அதனால் தான் விட்டுப் பிடிக்கிறார்களோ என்றுத் தோன்றுகிறது”