நீங்க ஐயா ரூம் பக்கம் நிக்குறதை பார்த்தவுடனே கோபத்துல ஏதோ பேசிட்டான்.மன்னிச்சுக்கோங்கம்மா..”
“இட்ஸ் ஓ.கே”,என்றவளின் பார்வை அவனிடத்திலேயே நிலைத்திருக்க கல்யாணி அவனை வேகமாய் அங்கிருந்து துரத்தினார்.
“போடா போய் தோட்டத்து வேலையை பாரு..போ..”,என்றவர் அவன் அங்கிருந்து நகர்ந்த பின்னே இவளைப் பார்த்து சிரித்தவாறே அங்கிருந்து நகர முற்ப்பட்டார்.
“அக்கா ஒரு நிமிஷம்”
“சொல்லுங்கம்மா..”
“இவர் இங்க என்ன பண்றாரு?”
“பெரியய்யா இருந்த வரை அவருக்கு எல்லாமே இவன் தான்.இவனில்லாம அவருக்கு ஒரு வேலையும் ஓடாது.ஆனா நம்ம சின்னையாக்கு இவனை கண்டாலே பிடிக்காது.அதனாலேயே வீட்டுக்குள்ள அவ்வளவா வரமாட்டான்.
தோட்ட வேலை எல்லாம் பாத்துக்குறான்.சின்னய்யா கிளம்பி போனப்பறம் வந்து சாப்பிட்டுட்டு போய்டுவான்.”
“ஓ!!உங்க. வீடு?”
“எனக்கு இங்க இருந்து பக்கத்துல தான் மா..அஞ்சு நிமிஷம் ஆகும்.இவன் இங்க தான் பின்னாடி இருக்குற கெஸ்ட் கவுஸ்ல இருக்கான்.”
“இங்கயா??”
“ஆமா மா..இவனும் இன்னொரு தோட்டகாரரும் மட்டும் இருக்காங்க..ஏன் என்னாச்சு?”
“இல்ல ஒண்ணுமில்ல.இன்னும் வீட்டை முழுசா பார்க்கல இல்லையா அதனால கேட்டேன்.நான் கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு வரேன்.”,என்றவள் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வெளியே வந்தவள் தோட்டத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணி அங்கிருந்த புல்தரையில் கால் பதித்தாள்.பரந்து விரிந்த மைதானம் போன்று அத்தனை பெரிய புல்வெளி அதில் அங்கங்கு போடப்பட்டிருந்த மார்ப்பிள் பென்ஞ்சுகள் ஓர் ஓரமாய் வட்ட வடிவ மேஜையும் அதைச் சுற்றி நான்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்த இடது புறத்தில் ஆர்ச் வடிவ கம்பிகள் முழுவதுமாய் செடியும் பூக்களும் படர விடப்பட்டிருக்க அதைக் கடந்து உள்ளே சென்றால் அப்படி ஒரு இயற்கை மணம் நாசியைத் துளைத்தது.அந்த இடம் முழுவதும் வெயிலில் செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க பச்சை நிற ஷெட் போடப்பட்டிருந்தது.