ஒரு புறமென்கும் வண்ண வண்ண மலர்கள் கண்ணுக்கும் நாசிக்கும் குளிர்ச்சி அளிக்க மறுபுறம் முழுவதும் போன்சாய் வகை மரங்கள் எலுமிச்சை ஆப்பிள் ஆரஞ்சு என கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.அனைத்து செடிகளும் மரங்களும் சீராய் பராமரிக்கப் பட்டிருந்தன.பார்வையை சுழற்றியபடியே வந்தவளின் பார்வையில் மீண்டும் அவன் தென்பட்டான்.
செடிகளுக்கு நீர் பாய்ச்சியடியே நின்றிருந்தவனின் விழி மட்டும் மொத்தமாய் இவளிடத்திலேயே நின்றிருந்தது.அதை கண்டும் காணாதவளாய் அந்த இடத்தை கடந்து வீட்டின் பின்புறம் வந்திருந்தாள்.
வீட்டைச் சுற்றிய அத்தனை இடங்களும் பச்சைப் பசேலென செடிகளால் நிரம்பியிருந்தது.பின்புறத்தில் சற்று தூரத்தில் சிறு வீடு போன்று இருந்த அந்த கெஸ்ட் ஹவுஸின் அருகில் சென்றாள்.
அதன் அருகிலேயே கார் கேரேஜ் இருந்தது ஐந்து ஆறு கார்கள் நிறுத்துமளவிற்கான இடம்.இப்போது அனைத்தும் காலியாய் இருக்க சுற்றும் முற்றும் பார்த்தவளை நோக்கி ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் தளர்ந்த நடைபோட்டு வந்தார்.
“சொல்லுங்கம்மா எதாவது வேணும்ங்களா?”
“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல.நான்?”
“கல்யாணி சொல்லிச்சு மா..ஐயாவோட சிநேகிதி வந்துருக்காங்கனு.”
“ஓ..”
“நீங்க இங்க தான் தங்கிருக்கீங்களா?”
“ஆமா மாமா..நானும் கல்யாணி தம்பியும்..ரெண்டு பேருமே ஒண்டிகட்ட அதனால பெரியய்யா இங்கேயே இடம் கொடுத்துட்டார்.”
“ஓ..வேற யாரும் இங்க வரமாட்டாங்களா?”
“இல்ல மா..சொல்லப் போனா நீங்க தான் இங்க வந்துருக்கீங்க..வீட்ல யாரும் போர்டிகோ தாண்டி வர மாட்டாங்க..”
“யாருமே வராததுக்கா இவ்ளோ பெரிய தோட்டம்!?”
“சின்ன முதலாளிங்களோட புள்ளைங்க வேணா எப்போவாவது வருவாங்க விளையாடுறதுக்கு.மத்தபடி யாரும் வரமாட்டாங்க மா.ஏன் மா இதெல்லாம் கேட்குறீங்க?”
“ம் ஒண்ணுமில்ல சும்மா தான்.சரிங்க நான் வரேன்..”,என்றவள் மறுபுறமாய் சென்று வீட்டின் போர்டிகோவை அடைந்திருந்தாள்.உள்ளே நுழைய எத்தனித்தவளுக்கு ஏதோ ஓர் பார்வை தன்னை தொடர்ந்து கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வு.ஒரு நொடி நின்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு யாரும் அங்கிருப்பதாய் தோன்றவில்லை.மீண்டுமாய் சில அடிகள் எடுத்து வைத்தவள் சட்டென நிமிர்ந்து மேலே பார்க்க யாரோ அங்கிருந்து நகர்ந்து ஒளிந்தது நன்றாகவே தெரிந்தது.
ஒரு நொடி தான் எனினும் அந்த பார்வை மனதை விட்டு நீங்காமல் அப்படியே பதிந்து விட்டிருந்தது ஷியாமாவிற்கு.
தொடரும்...