தொடர்கதை - காணாய் கண்ணே - 35 - தேவி
ராணி கிரண் தேவி மற்றும் ராணாவின் உளவாளி காமினி இருவரும் ஆம்பர் கோட்டைக்குப் பணியாளாக சென்ற போது, அவர்களுக்கு முதலில் அரண்மனை மேல் வேலைகளே கொடுக்கப் பட்டது.
ராணா மற்றும் இளவரசன் ப்ரித்வி இருவருக்கும் வேண்டிய தகவல்கள் இந்த நிலையில் கிடைப்பது கடினம் என்று உணர்ந்த ராணியும், காமினியும் எப்படியாவது முக்கியமான யாருக்காவது பணியாளாக சேர்ந்து விட வேண்டும் என்று சிந்தித்தார்கள்.ராணி கிரண் தேவிக்கு ஒரு உபாயம் தோன்ற, அதை காமினியிடம் தெரிவித்தாள். காமினிக்கும் அது சரியான வழியாகத் தோன்றவே அதைச் செயல்படுத்தலாம் என்றாள்.
அதன் படி ராணியின் மாளிகையை ஒட்டிய நந்தவனத்தில், கிரண் தேவியும், காமினியும் இன்னும் சில பணியாளர்களோடு சேர்ந்து கரிதுகள்களால் சித்திரம் வரைந்து கொண்டு இருந்தார்கள். அந்த மாளிகையின் முகப்பை தத்ரூபமாக வரையவும், பார்த்தவர்கள் அனைவரும் சற்று உரக்கவே பாராட்டினர்.
அந்தச் சத்தத்தில் ஆம்பர் கோட்டையின் ராணியான ஜோதா வந்ததைக் கவனிக்காமல், அருகில் கண்டவுடன் திடுக்கிட்டனர். பணியாளர்கள் அனைவரும் பணிவுடன் சற்றுத் தள்ளி நின்று இருக்க, கிரண் தேவியும் எழுந்து நின்றாள்.
“யார் நீ? “ என்று ராணி ஜோதா வினவ, பதில் சொல்ல முயன்ற காமினியைத் தடுத்து விட்டு,
“கிரண்” என்று மட்டும் கூறினாள்.
“கிரண் என்றால் எந்த தேசத்து ராணி?”
மேவார் ராணி என்று சொல்ல வந்தவள், தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு,
“நான் தங்கள் சேவகி “ என்று மட்டும் கூறினாள்.
“உன்னை இதற்கு முன் பார்த்ததாக நினைவு இல்லையே?”
இப்போது காமினி “புதிதாக சேர்ந்து இருக்கிறாள் ராணி. என் தாயின் வழி உறவு “ என்றுக் கூறினாள்.
“ஓ. இதற்கு முன் எங்கு இருந்தாள்?”
இப்போதும் காமினியை முந்திக் கொண்டு கிரண் தேவியே,
“உதய்பூர் “ என்றாள்.
“என்ன.. உதய்பூரா?” என்று பரபரப்பாகக் கேட்ட ராணி ஜோதா “அங்கே அரண்மனையில் வேலைப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.
ஆம் என்று சொன்னால் , அக்பர் அல்லது ஜோதாவின் தந்தையான ஆம்பர் தலைவர்