சஇருவருக்கும்ந்தேகம் வர வாய்ப்பு உண்டு என்றுப் புரிந்து கொண்டாள்.
எனவே “உதய்பூர் ராஜ்ஜியத்தில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தேன் ராணி. தற்போது என் தாய், தந்தை இருவரும் இறந்து விடவே, ஆதரவிற்காக காமினியின் குடும்பத்தை நாடி வந்துள்ளேன். அவர்களுக்கு உதவியாக இங்கேயே பணியிலும் சேர்ந்து விட்டேன்”
என்றுக் கூறினாள்.
“ஓஹோ. உதய்பூர் என்றவுடன் அரண்மனையில் வேலை செய்து இருப்பாயோ என்று எண்ணினேன்” என்று சற்று ஏமாற்றத்துடன் கூறினாள். ஆம்பர் ராணியைக் கூர்ந்து நோக்கிய கிரண் தேவி, ராணி அவள் பக்கம் திரும்பவும், சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.
பின் அவள் கரிதுகள்களால் வரைந்த அந்த அரண்மனையின் முகப்பைப் பார்த்து வியந்த ராணி ஜோதா,
“மிகவும் அழகான, நேர்த்தியான ஓவியம். எங்கே கற்றுக் கொண்டாய்?” என்றுக் கேட்டாள்.
“உதய்பூரில் ஒரு ஓவியக் கலைஞரின் வீட்டில் தான் வேலை செய்து கொண்டு இருந்தேன். அவரிடமே கற்றுக் கொண்டேன் ராணி”
“நல்ல திறமை. வெறும் கரித்துகள்களால் மட்டுமே வரைவாயா? வண்ணக் கலவைகளிலும் பரிச்சயம் உண்டா?”
“வண்ணக் கலவைகளிலும் சித்திரம் தீட்ட இயலும் ராணி”
“எனில் நீ என்னோடு பாதேபூர் சிக்கிரிக்கு வருகிறாயா? உன் போன்ற கலைஞர்களின் திறமைக்கு அங்கே தக்க சன்மானம் வழங்கப்படும்”
சற்றுத் தயங்குவது போல் பாசாங்கு செய்து விட்டு “என் அநாதரவான நிலையில் என்னை ஆதரித்தவர்களை விட்டு விட்டு நான் மட்டும் வருவது தவறு ராணி. “ என்றுக் கூறினாள் கிரண் தேவி.
சிரித்துக் கொண்டே “உன் எண்ணம் புரிகிறது. காமினியின் குடும்பமும் வரட்டும்” என்றுக் கூறவும், தன்னை மகிழ்ச்சியாகக் காட்டிக் கொண்டு
“நன்றி ராணி” என்றாள்.
“காமினி, நாம் நாளை ஆம்பரிலிருந்து புறப்பட வேண்டியதாக இருக்கும். உன் குடும்பத்தாருடன் தயாராக இரு” என்றுக் கூற,
“உத்தரவு ராணி” என்றாள் காமினி.
பின் ராணி ஜோதா அவள் பரிவாரங்களுடன் கிளம்பவும், இவர்களும் தங்கள் இல்லங்கள் நோக்கிக் கிளம்பினர்.