அந்த ஃபைல் விஷயத்தைப் பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தியவள், கார்த்திக் காபி கோப்பையை கீழே வைக்கவும், ஒரு முடிவுக்கு வந்தவளாக,
"மாமா நீங்க சொன்ன ஃபைல் கொடுத்தனுப்பனுப்பினேனே, அவர் நேரத்திற்கு எடுத்துட்டு வந்தாரா மாமா?" என்று வந்தவன் சொன்ன பெயரைச் சொல்லி விஷயத்தை கேட்கவும்,
"என்ன சொல்ற? யாரு வந்தது? நான் யாரையும் அனுப்பலையே, எந்த ஃபைலை கொடுத்தனுப்பின?" என்று அவன் பதட்டமாக கேட்கவும்,
ஏதோ தவறு நடந்திருப்பது புரிந்து, நடந்ததை அவள் கூறவும், அதே பதட்டத்தோடு எழுந்தவன், "அப்பா, யார் வந்தது? செக்யூரிட்டிக்கிட்ட என்ன சொன்னான்? அவன் வந்தது சிசிடிவி கேமரால பதிவாகியிருக்கா எல்லாம் பாருங்கப்பா?" என்று கட்டளை பிறப்பித்தவன், அவசரமாக தன் அலுவலக அறைக்கு செல்ல, ஞானசெல்வம் காவலாளியை பார்க்க நுழைவு வாயிலுக்குச் சென்றார்.
"நித்திம்மா, யார் வந்தது? எங்கக்கிட்ட எதுவும் நீ சொல்லலையே," என்று குறிஞ்சியம்மாள் கேட்க,
"அது அந்த சமயம் ஞாபகத்துக்கு வரல பாட்டி, மாமா வரவும் தான் இந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு பாட்டி," என்று முழுதாக சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு வார்த்தை தந்தியடித்தது.
சற்று நேரத்தில் கார்த்திக் கீழே இறங்கி வரவும், ஞானசெல்வமும் வந்தார். "என்னப்பா? செக்யூரிட்டிக்கிட்ட கேட்டீங்களா?" என்று அவன் கேட்க,
"வந்தவன் அவனோட போட்டோவோட நம்ம கம்பெனி ஐடி கார்ட் காட்டியிருக்கான் கார்த்தி, முக்கியமான விஷயம்னு நித்யாக்கிட்ட சொன்னதை தான் அவர்க்கிட்டேயும் சொல்லியிருக்கான். அதான் அவர் உள்ள விட்ருக்காரு. பதிவாகியிருக்க வீடியோல பார்த்தா, நமக்கு தெரிஞ்ச ஆள் போல் இல்ல," என்றவர்,
"வந்தவன் என்ன எடுத்துட்டு போனான் கார்த்தி," என்றுக் கேட்க,
"முக்கியமான ஃபைல்ஸ் எல்லாம் பத்திரமா தான் இருக்குப்பா, அவன் என்ன எடுத்துட்டு போனான்னு தெரியலையே?" என்றவன்,
"ஆமாம் அவன் என்ன எடுத்துட்டு போனான்னு பார்த்தீயா நித்தி?" என்றுக் கேட்க,
"இல்ல அவர் எதையோ எடுத்து பார்த்தாரு? அப்புறம் தண்ணீர் கேட்கவும் கொண்டு வரப் போனேன். அதுக்குள்ள தேவையானதை எடுத்துக்கிட்டேன்னு சொல்லி கொண்டு போயிட்டார்." என்றாள்.