நினைக்க வேண்டிய பெண்ணை பற்றி தவறாக பேசும் இந்த பெண்மணிகு இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் தரலாமா?
“நாங்க காதலிச்சபோதே இந்த விசயத்தை அதிதி என்னிடம் சொல்லி விட்டாள் அவள் என்னுடைய உயிரல்லவா. என்னிடம் எதையும் மறைத்ததேயில்லை.”
“காதலிச்சீங்களா?”
“ஆமாம், இங்கு யாருக்கும் தெரியாது. என் அப்பா அம்மாவிடம் சொல்லி பெண் கேட்க வைத்து திருமணம் செய்து கொண்டேன்” ரகசியம்போல பேசினான்.
“ஓ” என்றவள் ஒரு விரைவுடன் திரும்பி நடந்தாள். இனிமேல் அதிதியின் அம்மாவின் ரகசியத்தை பேசாமல் அதிதியை பற்றி பேசட்டும்!
“காதலா..?’ என்று அந்த பெண்மணி அதிர்ச்சியுடன் நிற்க,
இனிமேல் அங்கிருப்பது நல்லதல்ல என்று நினைத்து ஒரு விரைவுடன் திரும்பி வீடு நோக்கி நடந்தான்.
வீட்டின் வாசலில் இருந்த முல்லைக் கொடியில் பூக்களை பறித்துக் கொண்டிருந்த அதிதியை தாண்டி உள்ளே சென்றான்.
அவனை தொடர்ந்த அதிதி,
“என்னாச்சு?” என்றாள்.
“ஏன்? என்னாச்சு?”
“முகம் சரியான செய்தியை சொல்ல மாட்டேங்குது”
“ஆமாம் நீ பெரிய உளவியல் நிபுணர் முகம் பார்த்து மூட் கண்டுபிடித்து விடுவாய்”
“அப்படித்தான் இருக்கட்டுமே. ம்…. சொல்ல விருப்பம் இல்லை என்றால் விடுங்கள். எனக்கு வேற வேலை இருக்கு” என்றவள், பறித்து வந்திருந்த முல்லை மலர்களை தொடுக்க ஆரம்பித்தாள்.
அவள் கை விரல்கள் அசைய அசைய அழகிய மலர் சரம் உருவாவதை ரசிக்க ஆரம்பித்தான். கையில் கண்ணாடி வளையல்கள் சலசலக்க…. கால்களில் கொலுசு மின்னிட, கொண்டையாக போட்டுக் கொண்ட தலைமுடி கொஞ்சம் கலைந்து தெரிய… முகத்தில் மாலை வெயிலின் வெளிச்சம் மஞ்சள் நிறத்தை வாரியிறைக்க கிராமிய தோற்றம் தெரிய ஓவியமாக அமர்ந்திருந்த அவளிடம் பேசலாம் என்றுகூட தோன்றியது.
“ஆமாம், அது என்ன தாதிபட்டின்னு பெயர்?”
“உங்களுடைய கோபத்திற்கு அதுதான் காரணம் என்றால் நாளை காலையே ஊரில் சொல்லி பெயரை மாற்றிவிட முயற்சிக்கிறேன்.” கேலி செய்கிறாளா?