“கொஞ்சம் ரிலாக்ஸ்டாக பேசலாம்னு நினைச்சா முடியாது போலிருக்கு”
“அப்ப இது வேற விசயம். சரிங்க சார்… இந்த ஊரின் பெயருக்கான காரணத்தை சொல்லி விடுகிறேன். தாதின்னா…”
“உருது மொழியில் தாத்தா பாட்டியை ததா… தாதின்னு சொல்வாங்க. அப்படியா?”
“இது தமிழ்நாடு இங்கே உருது எதற்கு வருகிறது?. தாதின்னா சேவகி, செவிலித்தாய்… பணிப்பெண் என்று அர்த்தம். கேர் டேக்கர், பேபி சிட்டர், நர்ஸ் அப்படின்னு சொன்னால் புரியுமா?” அவளுக்கு ஆங்கிலம்கூட தெரியும் போலிருக்கிறது. ஆச்சரியமாக பார்த்தான்.
“புரிஞ்சிட்டது போல. ஒரு ஜமீன்தார் அவரை வளர்த்த செவிலித்தாய்க்கு பரிசாக இந்த கிராமத்தை தந்தாராம். அதனால் அப்படியே அழைக்க ஆரம்பிச்சிட்டாங்க” அவளே தொடர்ந்தாள்.
“தாதி வேலைங்றது ரொம்பவும் புனிதமானது. அம்மா தன் குழந்தையை கவனிப்பதைவிட உயர்வானது”
“ம்… அம்மாவைவிடவா…?”
“ஆமாம், உறவேயில்லாத முன்பின் தெரியாத ஒருவருக்கு பணிவிடை செய்வது எவ்வள்வு ஆத்மார்த்தமானதாக இருக்கணும். தன்னை தானே பார்த்துக் கொள்ள இயலாமல் இருக்கும் நோயாளிகள்… குழந்தைகள்… வயதானவர்கள்… இவர்களுக்கு உதவி செய்து அவர்களுடைய தேவையை கவனித்து துணையாக இருப்பதற்கு பரந்த இதயம் இருக்க வேண்டும் அல்லவா?”
அதிதி அவனுடைய அம்மாவை கவனித்து கொண்டது நினைவிற்கு வந்தது. நேரத்திற்கு உணவு தந்து, உடை மாற்றி… பேச்சு கொடுத்து உற்சாகமாக வைத்திருந்தாளே!.
“உண்மைதான். சிறு வயதில் ‘லேடி வித் த லேம்ப்’ கதை படித்தபோது இப்படித்தான் நினைத்தேன்.“
“அப்பாடி… இந்த விசயத்திலாவது ஒத்து போய் விட்டோம்” அவள் சிரித்தாள்.
“இதில் மட்டுமா… யார் சொன்னது? விவாகரத்து கேட்கும் விசயத்திலும் ஒத்த மனம்தானே இருந்தது”
“ஆமாம்… ஆமாம்… அந்த கோர்ட்டிலேயே சிரித்த முகத்துடன் நாம்தான் நின்றோம். மத்தவங்க போர் முனையில் நிற்பதுபோல முறைத்துக் கொண்டு நின்றார்கள்.”
“இருக்காதா பின்னே? சரியில்லாத திருமணத்தை முறித்து விட்டு சீக்கிரமாக அடுத்த கல்யாணம் செய்துக்கலாம்னு நினைத்தால் வாய்தா வாய்தாவாக போட்டால் டென்சன் ஆகாதா?.” அதிரதன் சொல்ல,