“அதற்கென்ன செய்வது? ஏகப்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கோர்ட்டிலும் இழுபறியாகிறது”
“ரொம்பவும் உணர்வுபூர்வமான உறவு இதுதானே. அதனால் எதிர்பார்ப்புகள் ஏராளம். அது இல்லை எனும்போது உறவை முறித்து கொள்வது நல்லது என்று தோன்றுமல்லவா?“
“காலத்திற்கும் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி வரும்போது முடிவு இன்னும் உறுதியாகிறது. அதிலும் இந்த உறவு மனம் சார்ந்தது. ஆத்மார்த்தமானது எனும்போது மனதின் தேவை அதிகரிக்கிறது. எனக்கு மட்டும்தான் நீ… உனக்குதான் நான்…” அவளுடைய குரல் மெலிந்து கேட்க ஆரம்பித்தது.
“மனம் சார்ந்த தேவையில் உடல் சார்ந்த விசயங்களும் சத்தியத்திற்கு உட்படுகின்றன. அந்த சத்தியம் தவறும்போது… உறவு மட்டுமல்ல குடும்பமே சிதைந்து போய் விடுகிறது. எண்ணம், சொல், செயல் அனைத்தும் ஒரே திசையில் பயணிக்கும்போது எப்படி பாதை மாறிப் போகின்றனர்?. அப்படி உறுதியாக இருக்க முடியாதவர்கள் ஏன் திருமணம் என்றொரு ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும்? குடும்பம் என்ற பந்தத்திற்குள் வரக் கூடாது அல்லவா?”
“அப்படி சொல்லக் கூடாது அதிதி. சில சமயம் மனம் சொல்வதை உடல் கேட்காது. அப்படிப்பட்ட சூழலில் நம்முடைய மூளைதான் அந்த எண்ணங்களை கட்டுபடுத்தும் நினைவுகளை… செய்திகளை… கவனத்திற்கு கொண்டு வரும். அதை மனம் கவனிக்கும்போது கட்டுபாடு வந்துவிடும். மனமோ… மூளையோ செயல்படாத இடத்தில் விதி மீறல்கள் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை தடம் புரண்டு விடுகிறது. அந்த சூழலை யாராலும் ப்ரடிக்ட் செய்ய முடியாது.”
“அப்படித்தான் இருக்குமோ… என்ன நடக்கும்?... நாம் என்ன செய்ய போகிறோம்? என்பதில் உறுதியான நிலைபாடு இல்லாதவர்களுக்கு இந்த உறவு தேவையில்லை. ஆரம்பத்திலேயே தவிர்த்து விடுவதால் மோசமான பின் விளைவுகளை தவிர்த்து விடலாம்….”
“அது மாதிரி முடிவிற்கெல்லாம் வரக் கூடாது. அப்புறம் திருமணம் என்ற விசயமே போலியானதாகி விடும். நான்தான் சொன்னேனே மனமோ மூளையோ செயல்பட்டால் அது போன்ற ஆபத்தை கடந்து விடலாம் என்று. உண்மையான அன்பு ஆழமான நம்பிக்கை இருந்தால் போதும் இல்லறம் சொர்க்கம்தான்”
“பிறகு ஏன் அன் அம்மா அப்படி செய்தார்கள்?”
“எப்படி?” அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு எழுந்தாள். கையிலிருந்த முல்லை சரத்தை தாத்தாவின் படத்திற்கு சூட்டினாள்.