அதிரதனுக்கு அந்த ஒரு விசயத்தை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அஞ்சலை போன்ற ஒரு பெண்மணியின் வார்த்தைகளை. நம்ப தேவையில்லை. ஆனால் அதிதியின் வார்த்தைகளில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. உண்மை இருந்தது. அந்த உண்மை கண்ணால் கண்டதா இல்லை பிறரால் நம்ப வைக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான்.
“அதிதி நீ உன் அம்மாவைபற்றி ஏதோ சொல்லிக் கோண்டே இருக்கிறாய். அது என்ன? சும்மா கதை கேட்கும் ஆவலில் நான் கேட்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.” என்றவன் அன்று மாலை அவளுடைய சித்தியை சந்தித்ததைபற்றி சொன்னான்.
“அந்தம்மா சொன்னதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. நான் மனித மரபணு தொடர்பான ஆராய்ச்சியில் இருப்பவன். பெற்றோரிடமிருந்து வரும் ஜீன்கள் அவர்களின் குணாதிசயங்களை பிள்ளைகளுக்கு தரும். உன்னை வைத்து உன் பெற்றோரின் குணங்களை புரிந்து கொள்ள முடியும். ரிவர்ஸ் ப்ராஸஸ்…! உன்னை வைத்து உருவாக்கப்பட்ட உன் அன்னையின் இமேஜ் எனக்கு தவறான செய்தியை தரவில்லை. யாரோ சொன்னதை வைத்து…”
“இல்லை… இல்லை. நானே என் கண்களால் பார்த்தேன். அந்த கண்ராவியை என் கண்களால் பார்த்தேன். நான்… என் அப்பா… அக்கா அனைவரும் பார்த்தோம். அம்மாவின் அறையிலிருந்த அவனை பார்த்தோம்… மிக மோசமான காட்சி அது” அவள் அழ ஆரம்பித்தாள்.
“பிறகு என்ன நடந்தது?”
“பிறகு பிறகு… அம்மா தூக்கு மாட்டி இறந்து போனாள். அப்பா எங்களை அழைத்துக் கொண்டு…”
“எங்களை என்றால் யார் யாரை?”
“என்னையும் என் அக்காவையும் அழைத்துக் கொண்டு… அதோ அந்த மலையுச்சிக்கு சென்றார். எங்களை கையிரண்டிலும் பிடித்துக் கொண்டு அங்கிருந்த கிடுகிடு பள்ளத்தில் குதித்து விட்டார்.”
“ஐயோ…”
“நான் மட்டும் அருகிலிருந்த ஓடையில் விழுந்து அருவியில் வழியாக கீழே வந்து கரையில் ஒதுங்கி விட்டேன். மயக்கத்தில் இருந்த என்னை மீட்டு என் தாத்தாவிடம் சேர்த்து விட்டார்கள். அப்பாவுடைய உடல் இரண்டு நாட்கள் கழித்து கிடைத்தது. அக்கா என்ன ஆனாள் என்றே தெரியலை. சிறிய பெண் என்பதால் காட்டு விலங்குகளுக்கு அவளுடைய உடல் இரையாகி இருக்கும் என்று சொன்னார்கள்”