உரையாடலை முடித்துக் கொண்டான்.
இரவு உணவு முடித்தபின் கூடத்தில் இருந்த சோபாவில் அதிரதன் படுத்துக் கொள்ள, அவனுக்கு எதிரே இருந்த அறையில் கட்டிலில் அதிதி உறங்கினாள்.
தனித்து படுத்திருந்தவன் உறங்குமுன் அந்த விசயங்களை நினைத்து பார்த்தான். ஏனோ தெரியவில்லை அதிதியின் அம்மாவிடம் தவறில்லை என்று நிருபிக்க விரும்பினான். அவரை அப்படி செய்ய வைத்த சூழலை ஆராய நினைத்தான்.
இனிமேலும் அதிதி தனித்திருக்கக் கூடாது. சிறிய வயதில் நடந்த அந்த சம்பவம் அவளுடைய வாழ்க்கையை அழித்துவிடக் கூடாது என்று நினைத்தான்.
அவனுக்குள் வித்தியாசமான எண்ணம் ஒன்று தோன்றியது. தவறு ஏதுவும் செய்யவில்லை எனில் தன்னிலை விளக்கம் ஏதும் தராமல் அதிதியின் அம்மா துளசி உடனேயே தற்கொலை செய்து கொண்டது ஏன்? இரண்டு சிறிய குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு இறந்து போகும் முடிவை ஏன் எடுத்தார்கள்? அதுதான் தவறான ஊகங்களுக்கு வழி வகுத்து இருக்கும். இறந்து போனவர்களின் ஆன்மா பேசும் என்பார்களே… அதுபோல துளசி அத்தையின் ஆன்மா இங்கு வந்து உண்மையை பேசினால் நன்றாக இருக்கும்.
உடனேயே அவனுக்கு சிரிப்பும் வந்தது. ஒரு விஞ்ஞானியாக இருந்து கொண்டு இப்படி அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்புவது முட்டாள்தனம் அல்லவா? ஏன் இப்படி தோன்றுகிறது? அதிதியின் மீது உள்ள அன்பா… அல்லது துளசி அத்தையின் மீது உள்ள பரிதாபமா? சிந்தனை வயப்பட்டவன் உறங்கி போனான்.
திடீரென்று ஒரு உள்ளுணர்வு உந்த விழித்தான். எதிரே அதிதியின் அறை கதவு திறந்திருந்தது. காற்றில் திறந்திருக்குமோ? எண்ணியபடியே உறங்கிக் கொண்டிருந்த அதிதியை பார்த்தான்.
மை காட்… அது என்ன?
அதிதியின் தலைமாட்டில் ஏதோ ஒரு உருவம் அமர்ந்திருந்தது போல தெரிகிறதே…. அதுவும் குறிப்பிட்ட வடிவம் என்று சொல்ல முடியாமல் புகை பரவியதுபோல கொஞ்சம் சாம்பல் நிற புகை….!
அதை புகை என்றும் ஒதுக்கி விட முடியாது. இரண்டு கண்களால் அவனையே அது பார்த்துக் கொண்டிருப்பதுபோல தோன்றியது. உண்மையில் அது கண்கள்தானா?
கண்ணை கசக்கியபடி எழுந்தான். இப்போது அதிதியின் தலைமாட்டில் எதுமே இல்லை! இரண்டு அடிகள் எடுத்து வைத்து அறைக்குள் உற்று நோக்கினான். நத்திங்!
ஒருவேளை இல்யூசனா? ஹாலுசினேஸனா?... அவன் குழம்பினான்.
தொடரும்