பார்த்தாள். ஏதாவது வித்தியாசமாகத் தெரிகின்றதா என்று. ஒன்றும் தெரியவில்லை.
இந்தச் சுவற்றில் தான் வழி இருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் எங்கே , அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திகைத்தாள். சுற்றிப் பார்தவளுக்குப் புரியவேயில்லை.
சற்று நேரத்தில் சோர்வாக இருக்கவும், உட்கார முடியுமா என்றுக் கீழே பார்க்க, அங்கே ஒரு சிறு பாறை போல் இருந்தது. அதில் அமர்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவளின் பார்வை தரையில் பதிய, அங்கே ஒரு இடத்தில் இசைக் கருவிப் போன்ற குறியீடு இருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும் வண்ணம் இருந்தது.
தவறி யாரவது இந்தச் சுரங்கத்தினுள் வந்து விட்டாலும் கூட இந்தக் குறியீடுகளை வைத்து கடைசி வரை வருவதே கடினம் தான். வந்த பிறகும் தரையில் தேடினால் மட்டுமே அதேக் குறியீடு தெரியும்.
கிரண் தேவி மெதுவாக அந்த இசைக் கருவியின் ஓவியத்தைத் தடவிப் பார்க்க, ஒரு இடத்தில் மட்டும் வித்தியாசமான மேடு தட்டுப் பட்டது. அதை அழுத்திப் பார்க்க, கிரண் தேவி அமர்ந்து இருந்த இடத்திற்கு எதிரில் உள்ள பாறை விலக ஆரம்பித்தது.
ஒருவர் செல்லும் வழி வரைக் கிடைக்கவும் வினாடி கூட தாமதிக்காமல் , அதில் நுழைந்து வெளியேறினாள். அவள் எண்ணம் சரியே போல் , கிரண் தேவி வெளியில் வந்த அடுத்த நொடி பாறை மூட ஆரம்பித்து இருந்தது.
முதலில் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், சற்று தன்னை சமன்படுத்தியப் பின்பே , முன் புறம் திரும்பிப் பார்த்தாள்.
பார்த்தவள் வியந்து நின்றாள். கிரண் தேவி எண்ணியது போல் இது ஒரு அரண்மனையின் நிலா முற்றத்தில் தான் இருந்தது. அந்த முற்றத்தில் அழகான கருப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் திண்டுகள் போன்ற அமைப்பில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. கீழே தரை முழுதும் சிவப்பு நிறத்திலான பாரசீகக் கம்பளம் விரிக்கப் பட்டு இருந்தது.
அந்த இருக்கைகளுக்கு இடையில் அங்கே அங்கே அழகான கலைப் பொருட்கள் வைக்கப் பட்டு இருக்க, மதிலில் பாரசீக ஓவியங்கள் இடம் பெற்று இருந்தது. ஒருபுறம் சிறு பலகையில் கனி வகைகள் வைக்கப் பட்டு இருந்தது.
அமைப்பைப் பார்த்ததும் கிரண் தேவி இது அக்பரின் அரண்மனை என்று உணர்ந்துக் கொண்டாள்.
ஆஹா. சிங்கத்தின் குகைக்குள்ளே மாட்டிக் கொண்டோமே. இங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க, நிலா முற்றத்தின் ஒரு புறம் இருந்த கதவு திறக்கும் சப்தம் கேட்டது.