கிரண் தேவி சட்டென்று அங்கிருந்த திரைசீலை ஒன்றின் பின்னால் மறைந்து கொண்டாள்.
கதவின் வழியே அக்பரும் மற்றுமொரு வீரனும் உள்ளே வந்து இருந்தனர்.
இன்றைய நாளின் ஆரம்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றாலும், அந்தச் சுரங்கத்தினுள் மாட்டிக் கொண்டவுடன் , கிரண் தேவி அது அக்பரின் வேலையாகத் தான் இருக்கும் என்று உணர்ந்து கொண்டாள். அதனால் பெரிய அளவில் வியப்படையவில்லை.
ஆனால் அதற்குப் பின் அவளுக்கு வியப்பைத் தவிர வேறு எதுவும் வரவில்லை. அக்பரும், அவரோடு இருந்த மற்றவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர்.
அக்பர் அவையின் நவரத்தினங்களில் ஒருவரான பகிர் ஆசியோ அக்பரிடம்
“பேரரசே. தங்கள் செயல் தவறு.” என்றார்.
பகிர் அக்பரின் ஆலோசகர்களில் முக்கியமானவர். அவரிடத்தில் இருந்து வந்த வார்த்தைகளை அக்பர் தவறியது இல்லை.
தற்போது அவர் கூறியதைக் கேட்டவுடன் அக்பர் பஹீரைப் என்ன என்பதாகப் புரியாத பார்வைப் பார்த்தார். அந்தப் பார்வையிலேயே பகிர் புரிந்துக் கொண்டார். இந்த விஷயத்தில் அக்பர் தன் பேச்சைக் கேட்க மாட்டார் என்று. என்றாலும் தன் கடமை என்று எண்ணிக் கூற ஆரம்பித்தார்.
“அந்தப் பெண்ணின் மேல் கைவைப்பது நமக்கே ஆபத்தாக முடியும்”
ஹ ஹ. என்று சிரித்த அக்பர்,
“முகலாயர்களின் பேரரசர் அக்பருக்கு ஒரு சிறு பெண்ணால் ஆபத்தா?” என்று மீண்டும் சிரித்தார்.
மீண்டும் ஒரு பெருமூச்சுடன்
“அந்தப் பெண்ணைப் பற்றிக் குறைத்து மதிப்பிட வேண்டாம் அரசரே”
“அப்படி என்ன அவளிடம் இருக்கிறது அழகைத் தவிர”
“மகாரானாவின் வளர்ப்பு. அத்தோடு சித்தூர்க் கோட்டையின் ஒட்டு மொத்தப் பெண்களின் தீக்குளிப்பு சம்பவத்திற்குப் பின் தான் நமக்கு மிகப் பெரிய எதிரியானார் ராணா. தற்போது அவர் சகோதரன் மகளைத் தாங்கள் சிறைப் பிடிக்க எண்ணியிருப்பது தெரிந்தால் , இன்னும் அவரின் தாக்குதல் பலமாக இருக்கும்”
“நான் அந்தப் பெண்ணைச் சிறைப் பிடித்து , உறவுக்குத் தூது அனுப்பப் போகிறேன் பஹீர். அதனால் அவர்களின் பகை சில படிகள் இறங்கி விடும்”