கோர்ட் அஃபிஸியலா… கண்காணிப்பாளரா…? என்ன நடக்குது? அவன் என்ன பரிட்சையா எழுதிக் கொண்டிருக்கிறான்? இவர் என்ன சொல்லணுமாம்…. அவன் யோசிக்கும்போதே அதிதி,
“ஒரு நிமிடம் சார். நான் காபி கொண்டு வந்திடறேன். குடிச்சுகிட்டே பேசுங்க” எண்று சமையலறையை நோக்கி நடந்தாள்.
விருந்தோம்பலாம்! அவர் அந்த காபியை குடிச்சிட்டு அதிதி பக்கம் பல்டி அடித்து விடுவாரோ? அடிப்பாவி… என்னமா கோல் அடிக்கிறாளே…
“என்னப்பா இது குழப்பம்? நான் என்ன பரிட்சையா எழுதிட்டு இருக்கேன்? கண்காணிப்பாளர் வச்சிருக்காங்க. இது என்ன வித்தியாசமான கோர்ட்டா இருக்கு.” என்று அவரிடம் கிசுகிசுத்தான்.
“ஆமா… இந்த ட்ராமாவையெல்லாம் கோர்ட்டா செய்யும். எல்லாம் என்னுடைய அரேஞ்ச்மெண்ட்தான். நீ இங்கே எதுக்கு வந்தேங்கறதையே மறந்துட்டியே”
“ஒண்ணும் மறக்கலை. ஸ்லோவா முயற்சி செய்யலாம்ணு நினைச்சேன். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லையா?”
“இல்லை… இல்லவே இல்லை… அதனால்தான் இந்த என்ட்ரீ”
அவன் மேற்கொண்டு பேசும் முன் அங்கு வந்த அதிதி,
“காபியை எடுத்துங்க சார். மாமா நீங்களும் எடுத்துக்குங்க” என்று உபசரித்தாள்.
“இருக்கட்டும்மா…நான் எதுக்கு வந்தேன்னு சொல்லிடறேன்.. கோர்ட் எதுக்கு உங்களுக்கு அப்படி ஒரு ஆர்டரை தந்தாங்கன்னா… இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு அதற்கு பின்தான் சேர்ந்து வாழலாமா வேண்டாமான்னு முடிவெடுக்கணும். அதுதான் உறுதியான முடிவாக இருக்கும்னு நினைச்சாங்க. அதுக்கு ரெண்டு பேர் மட்டும் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தனியாக இருக்கணும்”
“அப்படித்தானே இங்கே தனியா இருக்கோம்” அதிரதன் குறுக்கிட,
“இல்லையே… நான்தான் உங்களை வாட்ச் செய்துட்டே இருக்கேனே… அதிதி சமைக்கறாங்க… கடைக்கு போறாங்க… கோவிலுக்கு போறாங்க… நீங்க அவங்களுக்கு துணையாக இல்லாமல், தனியா கிராமத்தை சுத்தி பார்த்துட்டு இருக்கீங்க… வேறு ஒருத்தர்கூட வயலுக்கு போயிடறீங்க.. அங்கிருக்கும் செடி கொடிகளை ஆராய்ச்சிகூட செய்துட்டு இருக்கீங்க”
அடடா… ஒரு சைன்டிஸ்ட்…. ஆராய்ச்சி பார்வையுடன் செடி கொடியை பார்ப்பது தப்பாய்யா?
அவர் பேசுகிற ஃப்லோவை பார்த்தால் அவன் மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்படுவதுபோல இருக்கிறதே!. இந்த அப்பா வேறு முறைக்கிறாரே!