தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 11 - சித்ரா. வெ
எதையும் பேச வேண்டுமென்று நினைத்து நித்யா பேசவில்லை, அவனாக ஏதோ சொல்லவும் தானாக இத்தனையும் பேசியவள், கார்த்திக்கை ஒருமுறை பார்க்க, அவனோ அவளையே பார்த்தப்படி அமைதியாக இருந்தான்.
"உங்களுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கணும்னு நான் நினைக்கிறேன் மாமா, ஆனா அது முடியறதேயில்லை, அப்படி கவனமா இருக்கும்போது தான் ஏதாவது தப்பு நடந்திடுது. இப்படியே எத்தனை காலம் போகுமோ, அதுக்கு தான் சொல்றேன். என்னை டைவர்ஸ் செஞ்சுட்டு வேற கல்யாணம் செய்துக்கோங்க." என்று மீண்டும் மீண்டும் அவள் அதையே சொல்ல,
அவள் அருகே அமர்ந்து அவள் கையை பிடித்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டவன், "நீ மனசு விட்டு பேசணும்னு தான் அமைதியா இருந்தேன். இங்கப்பாரு நித்தி, நமக்குள்ள எதெல்லாம் நீ வேற்றுமைன்னு நினைக்கிறியோ, அது வேற்றுமையே இல்லை, அதை ஒற்றுமையா மாத்திக்கிறதில் தான் நம்ம சந்தோஷம் அடங்கியிருக்கு,
பாட்டிக்கிட்ட நான் பேசினதை நீ முழுசா கேட்கலன்னு நினைக்கிறேன். நமக்குள்ள வயசு வித்தியாசம் இருக்குன்னு பாட்டிக்கிட்ட சொன்னேன் தான், ஆனா அது என்னை நினைச்சு சொல்லல, உன்னை நினைச்சு தான் சொன்னேன்." என்று அவன் சொன்னதும், அவள் அவன் முகத்தை பார்க்க,
"என்னப் பார்க்கிற, உண்மையை தான் சொல்றேன். உனக்கு பத்தொன்பது வயசு தான் ஆகுது, இது உனக்கு கல்யாண வயசா, இன்னும் ரெண்டு மூனு வருஷமாவது போகணும், அதைவிட்டுட்டு உனக்கு நல்லது செய்றதா சொல்லி, பாட்டி நமக்கு கல்யாணம் செஞ்சு வைக்க போறதா சொன்னதும்,
எதுக்கு பாட்டி இத்தனை அவசரம், எனக்காக பார்த்து நித்யாக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் செய்ய வேண்டாம், அவ +2 வரை தானே முடிச்சிருக்கா, மேல ஏதாவது படிக்கட்டும், அப்புறம் நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம், எனக்கும் அவளுக்கும் வயசு வித்தியாசம் வரும்னு சொன்னேன்.
ஏன் அப்படி சொன்னேன்னா? இன்னைக்கு பக்குவம் பத்தாத சின்னப் பெண்ணை எனக்கு கல்யாணம் செய்து வச்சிட்டதா எல்லாம் சொல்லலாம், ஆனா பத்து பதினைந்து வருஷம் கழிச்சு எனக்கு முடியெல்லாம் வெள்ளையாகிடும், நான் டையெல்லாம் அடிக்க மாட்டேன். அப்படியே தான் இருப்பேன். அப்போ பார்ப்பவங்க, இவ்வளவு வயசு வித்தியாசம் இருக்க ஆளுக்கு இந்த பெண்ணை கட்டி வச்சிட்டாங்கன்னு சொல்வாங்க, ஏன் உனக்கே கூட அப்படி தோனலாம்," என்று அவன் சொன்னதும்,