தொடர்கதை - காணாய் கண்ணே - 42 - தேவி
ப்ரித்வி சென்றதும் கிருத்திக்கு யோசனையாக இருந்தது. இதுவரை கனவில் வரும் கிரண்தேவியையும், தன்னையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்தது இல்லை. சொல்லப் போனால் கனவில் வரும் இடங்கள் பற்றியும், அங்கே நடக்கும் நிகழ்வுகளிலும் செலுத்தும் கவனம், கிரண் தேவியின் வீரத்தின் மேல் இருக்கும் வியப்பு இது எல்லாம் தோன்றிய அளவு, கிரண் தேவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைப் பற்றிச் சிந்தித்தது இல்லை.
இன்றைக்கும் அவளுக்கு அந்தச் சிந்தனை அதிகம் வரவில்லை. ஆனால் கனவில் கிரண் தேவி அக்பரை வீழ்த்திய அந்த நிமிடம் இவளுக்குள் ஏற்பட்ட ஒரு கோபம் அது சிந்தனையைத் தூண்டியது. இத்தனை நாள் அந்தக் கனவுகளை டிவியில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இந்தக் காட்சி மட்டும் அவளின் உணர்வுகளைத் தூண்டியது ஏன் என்று யோசித்தாள்.
அதற்குள் ப்ரித்வியிடம் பேசியதில் இன்னும் சில குழப்பங்கள் சேர்ந்துக் கொண்டது. அந்தச் செல்வத்தைப் பிடிப்பதில் தன் பங்கு ஏன்? அவள் அறிந்த வரை ப்ரித்வியோ, அவள் பெரியப்பாவோ நேராகவே அந்த செல்வத்தைப் பிடிக்கக் கூடிய வீரமிக்கவர்கள். பின் தன்னை மையப்படுத்துவது ஏன்? இந்தக் கேள்விகள் எல்லாம் இப்போது தோன்ற, அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நேரமில்லாததால் அடுத்தக் கட்ட நிகழ்வுகளுக்குத் தன்னளவில் தயாரானாள்.
ஏற்கனவே திட்டமிட்டபடி அன்றைக்கு மாணவர்கள் பேராசிரியர்கள் எல்லோரையும் சாந்தினி சௌக் அழைத்துச் சென்றான். சாந்தினி சௌக் என்றால் நிலவு ஒளி சதுக்கம் என்று பொருள்.இன்றைய ஷாப்பிங் மால்களின் முன்னோடி. அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் இடம். ஒரு கிலோ மீட்டர் நீளம் அளவில் வணிக வளாகங்கள் மட்டும் இருக்க, அதற்குப் பின் புகழ்பெற்ற ஜெயின் கோவிலும், ஜூம்மா மசூதி அதற்கும் பின் தலைநகரின் முக்கியப் பகுதியான செங்கோட்டையின் ஒரு புறம் வந்து சேரும்.
இதனால் இங்கே மக்கள் நடமாட்டம் அதிகம். உள்ளூர் மக்கள், வியாபாரிகள், தவிர சுற்றுலா வந்தவர்கள் என மக்கள் கூட்டம் அதிகம். எனவே இந்த இடத்தில் கடத்துவதும் சுலபம். அதே சமயம் மற்றவர்களின் கவனமும் அதிகம் இருக்கும்.
சாந்தினி சௌக் மக்கள் கூட்டத்தைப் பார்த்தக் கிருத்திக்கு முதலில் தோன்றியது வியப்பே. கூட்டத்தை விட இந்த இடம் எப்படி கடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது என்பது தான் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல் அவள் மற்றவர்களுடன் கலந்து கொண்டாள்.
முன்னேற்பாட்டின் படி எல்லோரையும் மூன்று பிரிவாகப் பிரித்தவன், மார்க்கெட் சுற்றிவிட்டு,