மற்றுமொரு காரில் பின் தொடர்ந்தனர்.
கிருத்தி அந்தத் திருப்பத்தில் திரும்பும் வரைக் கூடச் சற்றுத் தைரியமாக இருந்தப் ப்ரித்வி அதற்குப் பின் கவலைப் பட ஆரம்பித்தான். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து விட்டாலும் கூட, சில நேரங்களில் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடுவதும் தோல்விக்கு அல்லது பெரும் அசம்பாவிதத்திற்கு வழி வகுக்கும்.
அந்த வகையில் யோசித்தால் செல்வத்தின் இத்தனை நாள் கண்ணாமூச்சி ஆட்டம் ப்ரித்விக்குப் பயத்தைக் கொடுத்தது. ஆனால் கிருத்திகா இல்லாமல் அவனை நேரடியாகப் பிடிப்பது என்பது மிகவும் கடினம் என்பதை விட , சற்று அவசரமான விஷயமும் கூட.
அந்தச் செல்வத்தின் தற்போதைய பலவீனம் கிருத்திகா தான். அவளிடம் பெற்ற அவமானம் மட்டுமே அவனை உசுப்பேற்றி விடக் கூடிய தற்போதைய காரணி. இந்த நேரத்தில் இவனைப் பிடிப்பது கிருத்திகாவிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் நல்லது.
இதை எல்லாம் யோசித்துத் தான் இந்தத் திட்டம் முடிவு செய்யப்பட்டது. கிருத்திகாவின் பெரியப்பா ராணா ஒரு ராணுவ அதிகாரி என்பதால் அவரின் ஆலோசனையும், கிருத்திகா வீட்டுப் பெரியவர்களாக அவர்களிடத்தில் அனுமதியும் பெற்றனர்.
எல்லாம் உணர்ந்தும் கூட, ஏதோ தன்னை அறியாத பயம் ஒன்று ப்ரித்விக்குள் ஓடியது. அந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் அருகில் இருந்தக் கடையில் இருந்து ரேடியோவில் ஒலித்தப் பாடல் அவனின் தவிப்பை மேலும் கூட்டியது.
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே கண்ணே கண்ணே காணாய் கண்ணே
உயிரே படத்தின் இந்தப் பாடல் வரிகள் கேட்டதும், அவன் கண் முன் கிருத்தியேத் தெரிந்தாள். உடனே சென்றுப் பார்க்கும் ஆவல் இருந்தப் போதும், போட்டத் திட்டத்தின் படி சரியான நேரத்திற்காகக் காத்து இருந்தான்.
கிருத்தியைக் காரில் ஏற்றிச் செல்கிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் ப்ரித்விக்கு நிலை கொள்ளவில்லை. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உரிய கட்டளைகள் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
சற்று நேரத்தில் எல்லோரும் ஒரு இடத்தில் சேரவும், ராகவியே முதலில் கிருத்தியத் தேடினாள்.
தன்னுடன் வந்தர்வர்களைக் கேட்க, யாருமே தெரியவில்லை என்றுக் கூறினர். ராகவிக்குப் பயம் பிடித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் அவள் மற்றக் குழுவிலும் கேட்க, ஒருவருமே தெரியவில்லை எனவும், பயத்தில் அழ ஆரம்பித்து விட்டாள்.