சில பழைய கட்டிடங்கள், ஹவேலிகள் எல்லாவற்றையும் விருப்பம் இருந்தால் சுற்றிப் பார்த்து விட்டு மதிய உணவு வேளைக்கு முன் செங்கோட்டை வாயிலுக்கு வந்து சேர்ந்து விடும்படி பணித்தான்.
மூன்று பிரிவில், இரண்டு பிரிவிற்கு தன் உதவியாளர்களை தலைமையாக அனுப்பி வைக்க, அந்தக் குழுவிலேயே பேராசிரியர்களும் இணைந்துக் கொண்டார்கள். மூன்றாவது குழுவிற்குப் ப்ரித்வி தலைமை ஏற்றான்.
பிரித்வி முன்னால் செல்ல மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர். மூன்று பெரிய மார்க்கெட் அங்கே இருக்க, முதல் இரண்டு மார்க்கெட் வரை எல்லோரும் முடிந்த வரை ஒன்றாகச் சுடிர்நார்கள். மூன்றாவது மார்க்கெட் செல்லும் போது கிருத்திக்கு போனில் மெசேஜ் வந்தது.
மூன்றாவது மார்க்கெட் நடுவில் , சிறு சிறு திருப்பங்கள் நிறைந்த இடங்கள் இருக்க, அங்கிருந்து அவள் பிரிய வேண்டும் என்று மெசேஜில் இருந்தது.
கண்களை மூடித் தன்னைத் திடப் படுத்திக் கொண்ட கிருத்திகா, கொஞ்சம் கொஞ்சமாக தன் கூட்டத்தை விட்டுப் பின் தங்கி இருந்தாள். எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு இருந்ததிலும், கடைகளை வேடிக்கைப் பார்ப்பதிலும் கிருத்திகாவைக் கவனிக்கவில்லை.
கிருத்திகா பின் தங்கிவிட்டதை ஓரளவு புரிந்துக் கொண்டப் ப்ரித்வி தன் ஆட்களுக்கு மெசேஜ் செய்து தயார்ப் படுத்தி வைத்தான்.
கிருத்தி நின்ற இடத்தில் இருந்து இடது பக்கம் ஒரு திருப்பம் இருக்க, மெதுவாக அங்கே வேடிக்கைப் பார்ப்பவள் போல் சென்றாள். அவள் அங்கே வருவதை அறியாத மூன்று நபர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.
“டேய் , பாஸ் என்னவோ இந்த இடத்தில் ஈஸியாக கடத்திட்டு வந்துடுங்கன்னு சொல்லிட்டார். ஆனால் இத்தனைக் கூட்டத்தில் அந்தப் பொண்ணைக் கடத்தி மாட்டிக்கிட்டோம்னா, போலீஸ் கேஸ் கூடக் கிடையாது. ஸ்ட்ரையிட்டா எமலோகம் தான். இப்போ என்னடா பண்றது?”
அதற்கு மற்றவன் “இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்டா. எதாவது ஒரு இடத்தில் தனியா மாட்டினா, நம்மள்ளே ஒருத்தர் அந்தப் பொண்ணை மயங்க வச்சு, மற்ற ரெண்டு பேர் அது வெளியில் தெரியவிடாம பாதுகாப்பா வரணும். புரிஞ்சுதா?” என்றுக் கூறவும்,
“சரிபா” என்றனர்.
“சரி, வாங்க அந்தப் பொண்ணு எந்தப் பக்கம் போகுதுன்னுப் பார்க்கலாம்” என்றான்,
அவர்கள் கிருத்திகாவைத் தேடி வருவதை உணர்ந்த கிருத்தி, சட்டென்று களைப்பாக இருப்பது போல் அருகில் இருந்த கடையில் பழச்சாறுக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.