தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 11 - சாகம்பரி குமார்
சந்தேகத்துடன் அதிரதன் அதிதியை பார்க்க, அவள் தலையசைத்தாள். “இது நாம் காட்டை விட்டு வெளியேறும் பாதையல்ல” என்று கிசுகிசுத்தாள்.
“எனக்கும் அந்த சந்தேகம் வந்து விட்டது” என்றவன், அந்த வனசரகரிடம் அடையாள அட்டையை காட்ட சொல்லி கேட்கலாமா என்று நினைத்தான். கூடவே ஒரு தயக்கமும் வந்தது. அவ்வாறு கேட்பது முட்டாள்தனமாகி விடும். அவர் யாராக இருந்தாலும் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஜீப்பில் இருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. இனிமேலாவது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம்.
“சார், வனத்தின் எந்த பகுதியில் தீப்பற்றி இருக்கிறது.?”
“வடக்கு பகுதியில்தான்… அதாவது தாதிபட்டி இருக்கும் திசையில்தான். அங்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அலர்ட் செய்திருக்கிறோம்.”. நோ டவுட்… அவர் சரியாகவே பேசுகிறார்.
அவனுக்கு ஒன்று தோன்றியது… அவர் ஜீப்பில் வந்து அழைக்கவும் அவரிடம் எந்த கேள்வியும் கேட்காமல் ஏறியது முட்டாள்தனம்தான்… சாதாரணமாக இருந்தால் அவரிடம் சந்தேகம் கொண்டிருப்பான். குறைந்தபட்சம் ஐடி கார்டையாவது காட்ட சொல்லி செக் செய்து இருப்பான். அவன் அப்போது பதட்டமாக இருந்ததால் அப்படி செய்து விட்டான். அவன் ஏன் அவ்வளவு பதட்டமானான்?
இந்த அதிதிதான் காரணம்… காட்டுத்தீயில் சிக்கிக் கொள்ளாமல் அவளை காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே அவனுக்கு இருந்தது. அவர் சொன்ன செய்தி உண்மையா பொய்யா என்பதை ஆராய தோன்றவில்லை. அதுபோல செய்தால் நேரம் கடந்து விடலாம். அது ஆபத்தில் முடியலாம்…. எது பாதுகாப்பான முடிவோ அதை உடனேயே எடுத்து விட்டான்.
ஓகே… இப்போது அவர் ஆபத்தானவர் எனில் அவன்தான் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ம்… மரம் கடத்தும் கும்பலிடம் இது போன்ற ஜீப்புகள் இருக்கும். ஆனால் மரம் கடத்துபவர்களுக்கும் அவனுக்கும் ஒரு தகராறும் இல்லையே… ஒருவேளை கொள்ளைகார்களோ… அப்படியெனில் அவனிடம் எதுவும் இல்லையே…
ஆவ்… அதிதிக்கு எதுவும் ஆபத்து நேருமோ?
“என்ன சார் அமைதியாக வருகிறீர்கள். வேறு எதுவும் கேட்க தோன்றவில்லையா?.. என்னுடைய அடையாள அட்டையை கேட்கலாம்…. எந்த பிரிவில் வேலை செய்கிறேன் என்று கேட்கலாமே…” அவர் சொன்னதை கேட்டு அதிதி திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.
“இல்லை… எனக்கு அப்படி தோன்றவில்லை. ஓகே… “
“நல்லவேளை நீங்கள் அப்படி கேட்டிருந்தால் என்னிடம் அப்படி எதுவும் இல்லை. ஏனெனில் நான் ஒரு வனசரகர் இல்லை. அப்படி சொல்லி உங்களை இங்கு அழைத்து வர