தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 12 - சாகம்பரி குமார்
வினய் தன்னிடமிருந்த புராஜெக்ட் ரிப்போர்ட்டை மீண்டும் கூர்ந்து படித்து குறிப்பெடுத்தான். அதிரதனிடம் இதுபற்றி சொல்லும்போது தெளிவாக சொல்ல வேண்டும்.
ஆராய்ச்சி நடந்த காலம்-2000த்திலிருந்து 2005வரை.
ஆராய்ச்சியின் நோக்கம் :புற்று நோயை உருவாக்கும் புரோட்டினை கட்டுப்படுத்தும் சப்ரஸர் டிஎன்ஏ மூலக்கூறுகளை மரபணுவில் சேர்ப்பது.
பயன்படுத்தப்பட்ட டெக்னிக்: மரபணு மாற்றம். வைரஸை வெக்டாராக பயன்படுத்தி டிஎன்ஏவின் சங்கிலி தொடரில் புதிய அமினோ மூலக்கூறை சேர்ப்பது.
ரிஸ்க்…: இதற்கு பயன்படுத்தப்படும் வைரஸ் அதனுடைய இயல்பை மீண்டும் அடைந்துவிடக் கூடாது. அவ்வாறெனில் அந்த வைரஸினால் உருவாக்கப்படும் நோயின் பாதிப்பும் கூடுதல் சிக்கலாக ஏற்படும்.
பரிசோதனை செய்யப்பட்ட உயிரினம் வெள்ளெலி.
ஆராய்ச்சியின் பதிவுகள்:
10 வெள்ளெலிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றிற்கு புற்று நோயை உருவாக்கும் முயற்சியில் 3 எலிகள் இறந்து விட்டன. 4 எலிகள் புற்று பாதிப்பினால் இறந்து விட்டன. 3 எலிகளில் ஸப்ரஸார் டிஎன்ஏ உருவாகி இருந்தன. அதில் ஒரு இரண்டு எலிகளில் புற்று நோயின் பாதிப்பு குறைந்து இருந்தது.
இந்த ஆராய்ச்சி மனிதரிடம் நடத்தப்படவில்லை. உண்மையிலேயே நடத்தப்படவில்லையா அல்லது அதுபற்றி பதியப்படவில்லையா?
அவன் எழுதி முடித்தான். அவனுடைய சந்தேகங்களையும் பதிவு செய்தான். அவனுக்கு இருக்கும் ஒரே கேள்வி என்னவெனில் அரசாங்கம் அனுமதி தராததாலோ அல்லது வேறு காரணங்களுக்காக அவ்வாறு நடத்தப்படவில்லை என்றால் அதை ஆராய்ச்சியில்ஆராய்ச்சியின் முடிவாக பதிந்திருக்க வேண்டும். இப்படி முடிவே இல்லாமல் நின்று போயிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை… ஒருவேளை… இந்த ஆராய்ச்சி மனிதர்மீது ரகசியமாக நடத்தப்பட்டு எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்பட்டதால் முடிவுரை இல்லாமல் ஹேங்க் ஆகி நின்று விட்டதா?
இதுபற்றி விசாரிக்க வேண்டுமெனில் மேல்மட்டத்திலோ இளம் விஞ்ஞானிகளிடமோ தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஆராய்ச்சி பதினைந்து வருடங்களுக்கு முந்தி நடைபெற்றது. இப்போது இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் புதியவர்கள்… ஒருவேளை கீழ்நிலை பணியாளர்கள் யாருக்காவது ஏதாவது தெரியுமா? பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்த யாராவது இங்கிருக்கிறார்களா?