கேர்-டேக்கரே அவர்தான். ரொம்ப நல்ல மனுசன்”
அவரை பார்க்க வேண்டுமென்று இருவருக்கும் தோன்றியது..
“நாங்க அவரை பார்க்கலாமா?”
“அவர் இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார் அல்லவா… மருந்து சாப்பிட்டு தூங்கறார். உங்களை கவனித்து கொள்ள வேண்டுமென்று என்னிடம் சொல்லிவிட்டு உறங்கி விட்டார். காலையில பார்ப்போமா?” என்றார்.
அவரை சந்திக்க வேண்டுமென்று ஆவலாக இருந்த அதிரதனும் அதிதியும் மறுநாள் பார்க்க ஒப்புக் கொண்டனர். ஆனால் அவரை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு மறுநாளும் கிடைக்கவில்லை. ரொம்பவும் உடல் நலம் குன்றி விட்டதால் அவரால் அவர்களை சந்திக்க இயலாமல் போனது..
“எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கு மாமா. இவ்வளவு உதவி செய்த அவருக்கு நன்றி சொல்ல முடியவில்லையே”
“இரும்மா நான் பேசி பார்க்கறேன்” என்று மீண்டும் ப்ரூனோவின் அறைக்கு சென்றார். சற்று பொறுத்து திரும்பி வந்தவர்,
“அதிதிம்மா… அவர்ட்ட சொன்னேன். அவருடைய வியாதி தொற்று வியாதி. இப்போது மழைக்காலத்தில் வெகுவாக பரவிவருகிறது. உங்களுக்கு எதுவும் பாதிப்பு வருமோ என்று பயப்படுகிறார்.”
“நான் ஒரு மருத்துவர்தான். அதனால்…”
“தெரியும் தம்பி… அவரே என்ன சொன்னார்னா முகத்தில் துணியை கட்டிக் கொண்டு உங்களை வரச் சொன்னார்”
அவர் சொன்னபடி செய்து கொண்டு அறைக்குள் நுழைந்தனர். அவரும் முகத்தை மூடிக் கொண்டு பேசினார்.
“ரொம்ப நன்றி ஐயா.” இருவரும் சொன்னார்கள்.
“இருக்கட்டும்மா. நான் துரையிடம் சொல்லி இருக்கிறேன். பாதுகாப்பாக தாதிப்பட்டிக்கு உங்களை அழைத்து செல்வார். இனி ரொம்பவும் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுடைய எதிரி யார் என்பதை சீக்கிரமாக கண்டுபிடியுங்கள்”
இவருக்கு எப்படி தெரியும் என்று வியப்பாக பார்த்தனர்.
“இரவில் நீங்கள் உரக்க பேசிக் கொண்டது. என் காதிலும் விழுந்தது.” என்றார்.
“எனக்கு எதுவும் கேட்கவில்லையே. நல்லா தூங்கிட்டேன்போல” என்று துரை சொல்லிக் கொண்டார்.